மகாராஷ்டிராவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நாம் அழகான மலைக்கோட்டைகளைக் காண்பது வழக்கம். அவற்றில் பெரும்பாலானவை இயற்கை அழகாலும், பசுமையான பள்ளத்தாக்குகளாலும் சூழப்பட்டு வளமான வரலாற்றைப் பிரதிபலிக்கின்றன. அவற்றில் ஒன்று தான் இந்த ஹரிஹர் கோட்டை!
நாசிக் நகரத்திலிருந்து 40 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் இந்தக் கோட்டை நாசிக்கில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாகும். இந்த ஹரிஹர் கோட்டை இளைஞர்கள் மத்தியிலும் இயற்கை ஆர்வலர்களின் மத்தியிலும் அதன் ட்ரெக்கிங்கிற்க்காகவும் இயற்கை அழகிற்காகவும் மிகவும் ஃபேமஸ்!

ஹரிஹர் கோட்டையின் வரலாறு
ஹரிஹர் கோட்டை மேற்கு தொடர்ச்சி மலையின் திரிம்பகேஷ்வர் மலைத்தொடரில் சியூனா அல்லது யாதவ வம்சத்தினரால் கட்டப்பட்டது. இது 9 முதல் 14 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் எழுப்பப்பட்டு இருக்கிறது என சான்றுகள் உள்ளன.
மகாராஷ்டிராவிலிருந்து குஜராத் செல்லும் வர்த்தக பாதையான கோண்டா காட்டை கண்காணிப்பதற்க்காக இக்கோட்டை கட்டப்பட்டது. இது கடல் மட்டத்திலிருந்து 3,676 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளதால் அந்த காலக் கட்டத்தில் மேற் பார்வையிடுவதற்கு இது பேருதவியாக இருந்த வந்ததாம்.

ஹரிஹர் கோட்டையைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்
உயரத்திற்கு பயந்தால் ஏறும் போது திரும்பிப் பார்க்க வேண்டாம். ஏனென்றால் உயரத்தில் இருந்து படிகளைப் பார்க்கவே சற்று பயமாகத் தான் இருக்கிறது.ஹரிஹர் கோட்டை சஹ்யாத்ரி மலைத்தொடரின் 360 டிகிரி காட்சியை வழங்குகிறது. நீங்கள் மழைக்காலத்தில் மலையேற்றம் செய்தால் அதன் அழகில் மெய் மறந்து போவது உறுதி.
அழகான கட்டிடக்கலைக்கு பெயர் பெற்ற ஹரிஹர் கோட்டைக்கு அருகில் திரிம்பகேஷ்வர் சிவ ஜோதிர்லிங்க கோவில், ஹனுமான் கோவில் மற்றும் நந்தி சிலைகளை நீங்கள் காணலாம்.
ஹரிஹர் கோட்டையின் உச்சிக்கு செல்லும் படிக்கட்டுகள் ஏறக்குறைய செங்குத்தாக இருப்பதால் ஏறுவது சற்று சாகசம் நிறைந்ததாகத் தான் இருக்கிறது.
இந்த குறுகிய படிகள் பாறைகளின் இடையே செதுக்கப்பட்டுள்ளன. மேலே ஏறும் போது உங்கள் விரல்களை பிடிமானமாக வைத்திருக்க உதவும் கீற்றுகள் செதுக்கப்பட்டுள்ளன.
கோட்டையின் உச்சியில் இருந்து பாஸ்கட், அஞ்சநேரி கோட்டை, பிரம்மகிரி மற்றும் உத்வாட் கோட்டை போன்ற பல கோட்டைகளையும் சிகரங்களையும் நீங்கள் கண்டு களிக்கலாம்.

ஹரிஹர் கோட்டை ட்ரெக்கிங்
ஹரிஹர் கோட்டை மலையேற்றத்தை சிரம நிலையின் அடிப்படையில் 2 பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒன்று நிர்குட்பாடா கிராமம் வழியாக செல்வது, மற்றொன்று படிகள் வழியாக செல்வது ஆகும். திரிம்பக் கிராமத்திலிருந்து தொடங்கும் மலையேற்றத்தைத் பாதையானது மிகவும் எளிமையானது. போகும் வழியெல்லாம் பல வயல்களையும் சிறு நீரோடைகளையும் நீங்கள் கடந்து செல்வீர்கள்.
அந்த வயல்களைக் கடந்தவுடன் பாதை படிப்படியாக மேலே ஏறத் தொடங்குகிறது. நீங்கள் மழைக்காலத்தில் மலையேற்றம் செய்தால், அங்கே குறுக்கே போகும் சிறு நீரோடைகளைக் கடந்து செல்வீர்கள், பார்ப்பதற்கே ரம்மியமாக இருக்கும்!
இங்கிருந்து நீங்கள் மலையேற்றத்தின் மிகவும் சவாலான பகுதியைக் காணலாம், இந்த தனித்துவமான படிகள் ஏறக்குறைய 80 டிகிரி செங்குத்தான அமைப்பில் செதுக்கப்பட்டுள்ளன. ஏறியவுடன் நீங்கள் கோட்டை உச்சியை அடைவீர்கள்.
மற்றொரு பாதையான படி வழியில் நீங்கள் கோவில்களையும், பள்ளத்தாக்குகளையும் கடந்து செல்ல நேரிடும். வழி நெடுக பசுமை நிறைந்து இருக்கும் இப்பாதையில் சற்று சிரமம் அதிகமே. ஆனால் ட்ரெக்கிங் செய்யும் இளம் வயதினர் பெரும்பாலும் இப்பாதையையே தேர்வு செய்கின்றனர்.

ஹரிஹர் கோட்டையை எப்படி அடைவது?
இந்த இடம் மகாராஷ்டிராவின் டேக் ஹர்ஷாவிலிருந்து 2.2 கிமீ தொலைவில் உள்ளது. இந்த இடத்திற்கு அருகில் ரயில் நிலையம் எதுவும் எதுவும் இல்லை, மேலும் பொது பேருந்துகளும் மிகவும் அரிதாகவே இயக்கப்படுகின்றன.
ஆகவே ஒரு வண்டியை வாடகைக்கு எடுப்பதன் மூலமோ அல்லது காரை வாடகைக்கு எடுப்பதன் மூலமோ நீங்கள் இந்த இடத்தை அடையலாம்.



Click it and Unblock the Notifications




