தமிழ் நாட்டில் எத்தனை மலைவாசஸ்தலங்கள் இருந்தாலும் இன்றும் அதிகளவு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பது மலைகளின் ராணி என்று அழைக்கப்படுகின்ற ஊட்டிதான். அந்தக் காலம் தொட்டு இன்று வரை புதுமணத் தம்பதியருக்கு விரும்பி வரக்கூடிய இடம் ஊட்டி. சில்லிடவைக்கும் குளிர், சுற்றி பசுமை பொங்கும் மரங்கள், செடிகள், உயிரியல் பூங்கா, ஊட்டி ரயில், பைகாரா படகு தளம் என்று தேனிலவுக்கு உகந்த இடம் ஊட்டி.
ஊட்டி ரயில், உயிரியல் பூங்கா, ஏரிகள் என பலவித சுற்றுலா தலங்கள் கொண்ட ஊட்டியில் அதிகம் தெரியாத இடம் டைகர் ஹில்ஸ்.
ஊட்டியின் கிழக்குப் பகுதியில், நகரிலிருந்து 16 கி.மீ தொலைவில் இருக்கிறது டைகர் ஹில்ஸ்.
மலையின் உச்சியில் இருக்கும் நீர்த்தேக்கம் மூலமாகத்தான் ஊட்டி நகருக்கு தண்ணீர் வருகிறது. கண்ணாடி போல் தெளிவான நீரூற்றுகளும், சுற்றியிருக்கும் அடர்த்தியான காடுகளும், தொட்டுவிடும் தூரத்தில் இருக்கும் மேகங்களும் எவரையும் மயக்கிவிடும். இதுதவிர, அரிய காளான் செடிகளை இங்கு பார்க்க முடியும்.
தனிமை விரும்பிகள், புகைப்பட ஆர்வலர்கள், புதுமண தம்பதிகள் அவசியம் செல்ல வேண்டிய இடம்.