திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் டிசம்பர் 6 ஆம் தேதியன்று மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதனையொட்டி திருவண்ணாமலை தீபம் மற்றும் பௌர்ணமிக்காக 27௦௦ சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. தீபத்திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வருவது வழக்கம் என்பதால் பொதுமக்களின் வசதிக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எந்த பகுதிகளில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது மற்றும் மகாதீபம் பற்றிய சிறப்பு குறித்து இங்கே காண்போம்!
திருக்கார்த்திகை தீபத்திருவிழா
சிவபெருமானுக்கான முக்கிய பஞ்சப்பூதஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் கொடியேற்றத்துடன் தீபத்திருவிழா தொடங்குகிறது. அதே போல இந்த ஆண்டும் மகா தீப பெருவிழா கொடியேற்றத்துடன் நவம்பர் 27 ஆம் தேதி தொடங்குகிறது. டிசம்பர் 6 ஆம் தேதி காலையில் பரணி தீபமும், அதைத் தொடர்ந்து மாலையில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
மலையே உருவான சிவபெருமான்
அக்னி பர்வதம் என்றழைக்கப்படும் திருவண்ணாமலையில் அருணாச்சல மலையாக எம்பெருமான் காட்சியளிக்கிறார். அண்ணாமலை என்றால் அண்ண முடியாத அதாவது அணுக முடியாத மலை என்று பொருள். ஈசனின் அருளின்றி எவரும் இந்த மலையை நெருங்கிட முடியாது. இன்றளவும் பல சித்தர்களும், முனிகளும் இங்கு வாழ்ந்து வருகிறார்களாம். எவரும் எளிதாக நெருங்க முடியாத அண்ணாமலையை அருணாச்சலமாய் சிவபெருமான் மலையுருவமாய் இங்கு வீற்றிர்ருக்கிறார். இது வெறும் மலை அல்ல! ஈசனின் மறு உருவம் என்பதே உண்மை!
கார்த்திகை மகா தீபம் 2022
நவம்பர் 27ஆம் தேதி அதிகாலை அருணாசலேஸ்வரர் கோயிலின் தங்கக் கொடிமரத்தில் தீபத் திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. 10 நாட்கள் நடைபெறும் தீபத் திருவிழாவில் ஆறாம் நாளன்று வெள்ளித் தேரோட்டமும், ஏழாம் நாளன்று மகா தேரோட்டமும் நடைபெறவுள்ளது. டிசம்பர் 6 ஆம் தேதி நடைபெறும் மகா தீப உற்சவத்தில் கலந்துக் கொள்ளவும், டிசம்பர் 7 ஆம் தேதி வருகின்ற பௌர்ணமியில் கிரிவலம் செல்லவும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். அதிலும் தீபத் திருவிழாவில் கலந்துக்கொள்ள ஏறக்குறைய 25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பு ஏற்பாடுகள் செய்யும் தமிழக அரசு
தீப திருவிழாவிற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும் இந்து சமய அறநிலையத்துறையும் செய்து வருகிறது. பக்தர்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், கழிப்பிடம், உணவு போன்றவற்றிக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. வருகை தரும் பல லட்சக்கணக்கான பக்தர்களின் வசதிக்காக தீபத்திருவிழாவை முன்னிட்டு 2700 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது. மேலும், பக்தர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. அன்னதானம் செய்ய விரும்பும் நபர்கள் நவம்பர் 26 ஆம் தேதிக்குள் foscos.fssai.gov.in என்ற இணையத்தளத்தில் பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோதி வடிவில் எம்பெருமான்
ஏழடி உயரமுள்ள செப்புக் கொப்பரையில் 3 டன் பசுநெய், 1000 மீட்டர் காடாதுணி திரி, 2 கிலோ கற்பூரம் இட்டு பெரும் உற்சாகத்துடன் இங்கு தீபம் ஏற்றப்படுகிறது. இந்த தீபத்தின் ஒளியானது சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பவர்களும் கண்டு தரிசிக்கும் வகையில் வெளிச்சத்துடன் எரிகிறது. இந்த ஜோதி வடிவத்தில் தான் எம்பெருமான் காட்சி தருகிறார். சிவனுடன் நாம் இரண்டற கலப்பதால் நமது முன்வினைப் பாவங்கள், கர்மவினைகள், பிறப்பு இறப்பு சுழற்சிகள் அனைத்தும் நீங்குவதே இந்த கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதின் தத்துவம். மறக்காமல் தீபத்திருநாளன்று வீட்டில், அலுவலங்களில், கடைகளில் தீபம் ஏற்றி வழிபடுங்கள். எண்ணிய காரியம் கைகூடும்! ஓம் நமசிவாய!