மலைகளின் சிறப்பு என்னவென்று கேட்டால் இது வேடிக்கையான கேள்வியாகத்தான் இருக்கும்... ஏனெனில் அதன் சிறப்புகள பட்டியலிட்டு சொல்ல முடியாது. எண்ணில் அடங்கா சிறப்புகளையும், அம்சங்களையும், வளங்களையும் ஒவ்வொரு மலைகளும் பெற்றிருக்கும். அதிலும் குறிப்பாக, தொடர்ச்சியான மலைகள் இன்னும் பல வியக்கத்தகுந்த சிறப்புகளைப் பெற்றிருக்கும். அதன் சுற்றுவட்டார சமவெளிப் பகுதிகளுக்கும் அதன் சிறப்பை பகிர்ந்து கொள்ளும். சரி, நம்ம நாட்டில் உள்ள 7 மலைத் தொடர்கள் குறித்தும், அதன் சிறப்புகள் குறித்தும் அறிந்து கொள்வோம் வாங்க.
இமய மலைத்தொடர்
இமயமலை உலகின் மிக அதிக உயரமான சிகரத்தினைக் கொண்டுள்ள உயரமான மலையாகும். இது இந்தியாவிலேயே நீளமான மலையாகவும் உள்ளது. இமயமலை என்பதற்கு பனியின் உறைவிடம் என்பது பொருளாகும். இரண்டு டெக்டோனிக் தகடுகளின் மோதலால் உருவான இம்மலையானது இளமையான மடிப்பு மலையாகக் கருதப்படுகிறது. சுமார் 7200 மீட்டர் உயரமுடைய இதில் நூற்றுக்கும் மேற்பட்ட சிகரங்கள் காணப்படுகின்றன.
எல்லைப் பகுதிகள்
நங்கபர்வதம் மற்றும் நம்சாபர்வா ஆகியவை இமயமலையின் மேற்கு மற்றும் கிழக்குப் புள்ளிகளாக அமைந்துள்ளது. இது இந்தியாவின் வட எல்லையாக அமைந்து மத்திய ஆசியாவில் இருந்து வீசும் அதிகப்படியான குளிர் காற்றிலிருந்து பாதுகாக்கிறது. சிந்து, பிரம்மபுத்திரா, கங்கை போன்ற வற்றாத நதிகள் இம்மலையில் தான் உற்பத்தியாகின்றன.
பர்வன்சால் மலைத்தொடர்
பர்வன்சால் மலைத்தொடர் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், திரிபுரா, நாகலாந்து, மேகாலயா மற்றும் மிசோரம் ஆகியவற்றுடன் பரந்து விரிந்து காணப்படுகிறது. இது இமயமலையைப் போலவே பல பனிச் சிகரங்களைக் கொண்டிருந்தாலும் இமயமலை அளவிற்கு உயரமானதல்ல. இம்மலைத்தொடரின் மிக உயரமான சிகரம் பவாங்பூய் ஆகும்.
பிர்பாஞ்சல் மலைத்தொடர்
காரகோரம் மற்றும் பிர்பாஞ்சல் மலைத்தொடர் இமயமலைக்கு வடமேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் அமைந்துள்ளது. காரகோரம் இந்தியா, சீனா, பாகிஸ்தான் நாடுகளின் எல்லைப் பகுதிகளுடன் இணைந்துள்ளது. குறிக்காக, காரகோரம் மலைத் தொடரானது சுமார் 500 கிலோ மீட்டர் நீளத்தில் அமைந்துள்ள உலகின் இரண்டாவது பெரிய சிகரமான கே2 உட்பட பல சிகரங்களைக் கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைத்தொடரானது காரகோரம் மலைத்தொடரின் தொடர்சியாகக் கருதப்படுகிறது. சியாச்சென் பனியாறும், ஃபியாஃபோ பனியாறும் இம்மலைத்தொடரில்தான் அமைந்துள்ளன.
மேற்குத் தொடர்ச்சி மலை
தமிழகத்தில் மிகவும் பிரசித்தமான மலைத் தொடர் மேற்குத் தொடர்ச்சி மலை. மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர் கன்னியாகுமரியில் இருந்த குஜராத்து வரையில் பரவியுள்ளது. இவை சயாத்திரி மலைகள் என்றும் வட நாட்டினரால் அழைக்கப்படுகின்றன. குஜராத் மாநிலத்தில் தபதி நதியிலிருந்து தொடங்கும் இம்மலைத்தொடர் அரபிக்கடலுக்கு இணையாக மகாராஷ்டிரா, கோவா,கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய இடங்களில் பரவியுள்ளது.
யுனெஸ்கோ
யுனெஸ்கோவின் உலக பராம்பரிய இடங்களில் ஒன்றான மேற்குத் தொடர்ச்சி மலை உயிர் பன்முகத்தன்மை கொண்டது. இது உலகில் உள்ள பத்து வெப்பமான பல்லுயிர் வனப்பகுதியில் ஒன்றாகும். கர்நாடகாவிற்கு உட்பட்ட பகுதியில் கூர்க், ஜோக் நீர்வீழ்ச்சி, தமிழகத்தில் ஊட்டி, பந்திப்பூர் சரணாலயம், வால்பாறை என பல சுற்றுலாத் தலங்களைக் கொண்டுள்ளது.
விந்திய மலை
விந்திய மலையானது இந்தியாவை வடஇந்தியா, தென் இந்தியா என இரு பிரிவுகளாகப் பிரிக்கிறது. மத்திய இந்தியாவில் அமைந்துள்ள மிகப் பழமையான மலை விந்திய மலையாகும். விந்திய மலையானது வாரணாசியிலிருந்து மத்தியப் பிரதேசம் வழியாக குஜராத் வரை கிழக்கு மேற்காக பரவியுள்ளது. இம்மலையின் தெற்குச்சரிவில் நர்மதா பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. விந்தியமலையின் உயரமான சிகரமாக கலுமார் பீக் அறியப்படுகிறது.
சாத்பூரா மலை
சாத்பூரா மலைத்தொடரானது குஜராத்தின் அரபிக்கடலில் ஆரம்பித்து மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் வரை பரவியுள்ளது. நர்மதை மற்றும் தபதி நதிகள் இங்கு உண்டாகி மேற்கு நோக்கி ஓடி அரபிக்கடலில் கலக்கின்றன. அடர்ந்த காடுகளைக் கொண்ட சாத்பூரா மலையானது புலிகள், காட்டெருதுகள், திருகுமான், கரடிகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களுக்கு வசிப்பிடாக உள்ளன. சாத்பூராமலையின் உயரமான சிகரமாக துப்கர் பீக் அமைந்துள்ளது.
ஆரவல்லி மலைத்தொடர்
ஆரவல்லி மலைத்தொடரானது உலக அளவிலேயே மிகவும் பழமையான மமலை என்று பல வல்லுனர்களால் கண்டறியப்பட்டள்ளது. சுமார் 800 கிலோ மீட்டர் நீளமுள்ள இம்மலையானது டெல்லி, ஹரியானா, இராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் பரவியுள்ளது. புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மவுண்ட் அபு இராஜஸ்தான் மாநிலத்தில் ஆரவல்லி மலைத்தொடரில் அமைந்துள்ளது. கிழக்கு வென்னிஸ் என்றழைக்கப்படும் உதயப்பூர் நகரம் இம்மலையின் தெற்குசரிவில் அமைந்துள்ளது.
கிழக்கு தொடர்ச்சி மலை
இந்தியாவின் கிழக்கு எல்லையான வங்காள விரிகுடாவிற்கு இணையாக கிழக்கு கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது கிழக்கு தொடர்ச்சி மலை. தொடர்ச்சியற்றதும், உயரம் குறைவானதுமான இம்மலைத்தொடர் மேற்குவங்காளம், ஒரிசா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய இடங்களில் பரவியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் ஜிந்தகடா இம்மலையின் உயர்ந்த சிகரமாகும். தென்னிந்திய நதிகளான கோதாவரி, மகாநதி, கிருஷ்ணா, காவிரி போன்றவை இம்மலையின் வழியே பாய்ந்து அருகே உள்ள நிலங்களை வளப்படுத்தி இந்திய வேளாண்மையைச் செழிக்கச் செய்கின்றன.