மும்பை கனவுகளின் நகரமாகவும், நாகரிகத்தின் சின்னமாகவும், அதிர்வலைகளை ஏற்படுத்தும் வாழ்வியல் முறைகளுக்காகவும், பாலிவுட்டின் இல்லமாகவும் பிரபலமாக அறியப்படுகிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் உலக மக்கள் அமெரிக்காவை கண்டு கனவு காண்பதை போல, இந்திய மக்கள் மும்பைக்காக கனவு காண்கிறார்கள். மும்பையின் ஜனக் கூட்டமும், பல்வேறு இடங்களும், பலவகைப்பட்ட வழிபாடுகளும், எண்ணற்ற உணவு வகைகளும் அதன் வெவ்வேறு நிறங்களை பளிச்சென எடுத்துக்காட்டுகின்றன.இதன் காரணமாக மும்பை நகரம் இந்தியாவின் தனித்துவம் மிக்க சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இங்கு நாம் இன்று செல்லப்போகும் டாப் 5 இடங்கள் இவைதான்...
காதலர்கள் உலாவும் பேண்ட்ஸ்டாண்ட்
மும்பையின் மற்றுமொரு புகழ்பெற்ற இடம் பேண்ட்ஸ்டாண்ட். இந்தப் பகுதியில் உள்ள கடைகளில் நீங்கள் பருகும் காப்பியும், தேநீரும் என்றென்றைக்கும் உங்கள் அடி நாக்கில் தித்தித்துக் கொண்டே இருக்கும். இங்கிருந்து நடந்து செல்லும் தூரத்தில்தான் ஷாருக் கானின் 'மன்னத்' இல்லமும், சல்மான் கான் வசித்து வரும் கேலக்ஸி டவர் அடுக்குமாடி குடியிருப்பும் இருக்கிறது. மேலும், பேண்ட்ஸ்டாண்ட் பகுதி காதலர்களின் மையமாகவும் அறியப்படுகிறது. எனவே இந்த இடத்துக்கு நீங்கள் வரும் சமயம் எண்ணற்ற காதல் ஜோடிகள் இங்குமங்கும் உலாவிக் கொண்டிருப்பதை பார்க்கலாம்.
8 வழிகள் கொண்ட மும்பை ஸீ லிங்க்
மும்பையின் சமீபத்திய பெருமைக்கு மூல முதல் காரணமாக விளங்குவது பாந்த்ரா-வோர்லி ஸீ லிங்க் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்தப் பாலத்தில் மொத்தம் 8 இடைவழிகள் இருக்கின்றன. இதுபோல இடைவழிகள் கொண்ட பாலங்கள் கட்டுவதில் உள்ள சிரமம் காரணமாக இந்தியாவில் அதிகமாக இவைபோன்ற பாலங்கள் கட்டப்படுவதில்லை. அப்படி இருந்தும் 8 இடைவழிகளுடன் உருவாக்க்கப்பட்டிருக்கும் மும்பை ஸீ லிங்க் ஒரு கட்டிடக் கலை அதிசயம். மேலும், இந்தப் பாலத்தின் மூலம் வோர்லியிலிருந்து வாகனத்தில் செல்லும் ஒரு பயணி, பாந்த்ராவை பத்தே நிமிடத்தில் அடைந்துவிட முடியும். ஆனால் இந்தப் பாலம் சுங்கச் சாவடியாக செயல்பட்டு வருவதால் வாகனம் ஒன்றுக்கு 75 ரூபாய் ஒருமுறை சென்று திரும்புவதற்காக வசூலிக்கப்படுகிறது.
மரீன் டிரைவ்
மும்பையின் மரீன் டிரைவ் பகுதிக்கு நீங்கள் சென்றால் உலகின் பிரபலமான கடற்கரைகளில் ஒன்றான சௌபாத்தி பீச்சின் அழகில் உங்களையே மறந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இங்கு பேல் பூரி, பானி பூரி, சாண்ட்விச்கள், ஃபல்லூடா போன்ற முபையின் சுவைமிகு தெருவோர உணவுகளை ருசிக்கலாம். மேலும், மரீன் டிரைவ் பகுதி கைத்தறி ஆடைகளுக்கு மிகப்பிரபலம்.
அதுமட்டுமில்லாமல் இரவு வேலைகளில் மரீன் டிரைவ் பகுதியிலிருந்து பார்த்தால் மும்பையின் வானவிளிம்பு மின்விளக்குகளால் ஜொலிக்கும் அற்புதக் காட்சி நம்மை மயக்கம் கொள்ள செய்துவிடும்.
கேட்வே ஆஃப் இந்தியா
மும்பையின் கொலாபா பகுதியில் அமைந்திருக்கும் கட்டிடக் கலை அதிசயம் கேட்வே ஆஃப் இந்தியா. இந்தக் கட்டிடம் ஹிந்து மற்றும் முஸ்லிம் கட்டிடக் கலைகள் இரண்டையும் பிரதிபலிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 1911-ஆம் ஆண்டு மும்பை வந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் மற்றும் ராணி மேரி இருவரையும் வரவேற்கும் பொருட்டு எழுப்பப்பட்டுள்ளது. மும்பை வரும் பயணிகள் கேட் வே ஆஃப் இந்தியா வந்து புகைப்படம் எடுத்துக்கொண்டால்தான் அவர்களின் பயணம் முற்றுப் பெற்றதாக அர்த்தம். மேலும், கொலாபா காஸ்வே, பேட் மியாஸ் மற்றும் புகழ்பெற்ற கஃபே லியோபோல்ட் போன்ற மும்பையின் மற்ற அடையாளங்களும் கேட்வே ஆஃப் இந்தியாவுக்கு அருகில்தான் இருக்கின்றன.
தொங்குதோட்டம்
மும்பை மாநகரில் உள்ள பூங்காக்களில் மிகவும் பழமையானதும், பாதுகாக்கப்பட்டும் வருவது தொங்குதோட்டமாகும். இந்தத் தோட்டத்தின் கவர்ந்திழுக்கும் அம்சமான ராட்சஸ மூதாட்டியின் காலணியை படம்பிடிக்க வேண்டுமென்று ஒவ்வொரு புகைப்பட ஆர்வலரும் விரும்புவார்கள். தொங்குதோட்டம் கெம்ப்ஸ் கார்னர் மற்றும் போர்ஷே ஷோரூமுக்கு வெகு அருகில் இருக்கிறது.