சென்னை நகரின் பரபரப்பான வாழ்க்கையில் இருந்து சற்று ஓய்வெடுத்தால் நன்றாக இருக்குமென்று நினைக்கிறீர்களா? சென்னை மாநகரம் அங்கே குடியிருப்பவர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் வரலாறு, இயற்கை அழகு, கலாச்சாரம் மற்றும் செழுமையான பாரம்பரியத்தை வழங்கும் தாயகமாக உள்ளது. இருப்பினும் அங்கேயே இருப்பவர்களுக்கு ஒரு சின்ன மாறுதல் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் தோன்றும்.
இந்த வார இறுதியை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் லாங் டிரைவ் செய்து சிறப்பாக போக்குங்கள். குறைந்த பயணத் தூரத்தில், பட்ஜெட் ஃபிரண்ட்லியாக, குதூகலமாக வார இறுதியை கொண்டாடும் பல இடங்கள் சென்னையை சுற்றி அமைந்துள்ளன.
கடற்கரைகள், பழங்கால நகரங்கள், வினோதமான மலைவாசஸ்தலங்கள், பிரமிக்க வைக்கும் கட்டிடக்கலை மற்றும் அமைதியான இடங்கள் என இந்த பட்டியலில் பல இடங்கள் உண்டு! அவற்றின் லிஸ்ட் இதோ!
மகாபலிபுரம்
7 ஆம் நூற்றாண்டில் பல்லவ வம்சத்தால் கட்டப்பட்ட கோயில்கள் மற்றும் கட்டிடக்கலை நினைவுச்சின்னங்களுக்காக அறியப்பட்ட மகாபலிபுரம், சென்னைக்கு அருகில் 5௦ கிமீ தொலைவில் அமைந்துள்ள மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்ட இந்த இடம் ஒரு நாள் பயணத்திற்கு ஏற்ற இடமாகும்.
கடற்கரை கோயில், பஞ்ச ரதங்கள், கங்கையின் ஆலம்பாறை கோட்டை, புலி குகை, மகாபலிபுரம் கடற்கரை மற்றும் அர்ஜுனன் பெனன்ஸ் ஆகியவை இங்கு கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாகும்.
சென்னையிலிருந்து உள்ளூர், தனியார் பேருந்துகள் மற்றும் தனியார் டாக்ஸி மூலம் மகாபலிபுரத்தை அடையலாம்.
புலிகாட்
சென்னையிலிருந்து சுமார் 1 மணி நேர பயண தூரத்தில் அமைந்துள்ள இந்த புலிகாட் மிக அழகான ஒரு சிறிய கடற்கரையாகும். ஸ்ரீஹரிகோட்டா தீவில் அமைந்துள்ள இந்த புலிகாட் இயற்கை அழகு, வரலாறு மற்றும் கட்டிடக்கலை ஆகியவற்றின் கலவையை உங்களுக்கு பிரதிபலிக்கிறது.
இங்கு மிகவும் விரும்பப்படும் இடங்கள் புலிகாட் ஏரி மற்றும் புலிகாட் பறவைகள் சரணாலயம் ஆகும், இது உலகம் முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான பறவைகளை ஈர்க்கிறது. மேலும் கடற்கரை, டச்சு கல்லறை, கோட்டை, காலனித்துவ கால தேவாலயங்கள், வெதுருப்பட்டு மற்றும் நெலப்பட்டு ஆகியவை இங்கு நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாகும்.
சென்னையிலிருந்து 55 கிமீ தொலைவில் அமைந்துள்ள புலிகாட்டை அவுட்டர் ரிங் ரோட் வழியாகவும், இ.சி.ஆர் வழியாகவும் அணுகலாம்.
புதுச்சேரி
சென்னையிலிருந்து அதிகப்படியான இளைஞர்கள் செல்லும் வார இறுதி சுற்றுலாத் தலம் இந்த புதுச்சேரி நகரம் தான்! புதுவையில் உள்ள இந்திய மற்றும் பிரெஞ்சு கலாச்சாரத்தின் வசீகரிக்கும் கலவையானது ஆண்டு முழுவதும் எல்லையற்ற சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.
புதுவைக் கடற்கரை, பிரஞ்சு பாணி வீடுகள், துடிப்பான கஃபேக்கள், அமைதியான சூழல், பல்வேறு தேவாலயங்கள், கோவில்கள், அரவிந்தர் ஆசிரமம், ஆரோவில் என புதுவையில் பொழுதைக் கழிக்க ஏராளமான விஷயங்கள் உள்ளன.
சென்னையிலிருந்து 13௦ கிமீ அமைந்துள்ள இந்த நகரத்தை 2 அல்லது 3 மணி நேர பயண தூரத்தில் அடைந்து விடலாம். புதுவைக்கு செல்ல இரண்டு சாலை வழிகள் உள்ளன, ஒன்று பைபாஸ் மற்றொன்று இ.சி.ஆர் ஆகும்.
காஞ்சிபுரம்
'ஆயிரம் கோவில்களின் நகரம்', 'தமிழ்நாட்டின் ஆன்மீகத் தலைநகரம்' மற்றும் 'பட்டு நகரம்' என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த காஞ்சிபுரம் பல சிறப்பம்சங்களைக் கொண்ட ஒரு இடமாகும். கலாச்சாரம் மற்றும் தத்துவ மையமாக அறியப்படும் காஞ்சிபுரம் உலகம் முழுவதிலுமிருந்து இந்து மதத்தில் ஆர்வமுள்ள அல்லது தென்னிந்திய கட்டிடக்கலை மற்றும் பிரமாண்டத்தின் அற்புதத்தை அனுபவிக்க விரும்பும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.
உலகப் புகழ்பெற்ற காமாட்சி அம்மன் கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயில், வரதராஜ பெருமாள் கோவில் மற்றும் பல கோயில்கள், காஞ்சிகுடில், பட்டு நெசவு செய்யும் இடங்கள் ஆகியவற்றை இங்கே காணத் தவறாதீர்கள்.
சென்னையிலிருந்து 7௦ கிமீ தொலைவில் அமைந்துள்ள காஞ்சிபுரத்தை ரயில் மற்றும் பொது பேருந்து மூலமாகவோ அல்லது சொந்த காரிலோ அணுகலாம். காஞ்சிக்கு சென்று வீட்டில் உள்ளவர்களுக்கு பட்டுப் புடவை வாங்கிக் கொடுக்க மறந்து விடாதீர்கள்!
வேடந்தாங்கல்
சென்னைக்கு அருகில் 7௦ கிமீ தொலைவில் உள்ள சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றான வேடந்தாங்கல் அங்கு இருக்கும் பறவைகள் சரணாலயத்திற்கு மிகவும் பிரபலமானது. 30 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்த சரணாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் சீசனில் 30,000 பறவைகள் இடம்பெயர்கின்றன. ஸ்பூன்பில்ஸ், நாரைகள், ஈக்ரெட்ஸ், ஹெரான்கள் மற்றும் பல வகையான பறவைகளின் பரந்த வகைகளை நம்மால் இங்கு பார்க்க முடியும்.
ஆர்வமுள்ள புகைப்படக் கலைஞர்களும் பறவை ஆர்வலர்களும் இங்கு குவிகின்றனர். குறிப்பாக வார இறுதி நாட்களில் இங்கு கூட்டம் அலை மோதுகின்றது.
நாகலாபுரம்
கம்பீரமான மலைகள், பசுமை மற்றும் சலசலக்கும் நீர்வீழ்ச்சிகளால் சூழப்பட்ட இந்த இடம், நகர வாழ்க்கையிலிருந்து ஓய்வு எடுத்து, குடும்பத்துடன் சில அமைதியான நாட்களைக் கழிக்க ஏற்றது.
சென்னையிலிருந்து மிகவும் உற்சாகமான வார விடுமுறைகளில் ஒன்றான நாகலாபுரம் நகரத்திலிருந்து 70 கிமீ தொலைவில் உள்ளது.
ஸ்ரீ வேதநாராயண ஸ்வாமி கோயில், ஸ்ரீ பள்ளிகொண்டேஸ்வர ஸ்வாமி கோயில், கைலாசகோனா நீர்வீழ்ச்சி, உப்பலமடுகு நீர்வீழ்ச்சி, குர்ரம்கொண்டா கோட்டைஆகியவை இங்கு கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாகும்.
திருப்பதி
இந்த இடத்திற்கு அறிமுகமே தேவையில்லை அல்லவா? ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருப்பதி, நாட்டின் மிகவும் பிரபலமான யாத்திரைத் தலங்களில் ஒன்றான வெங்கடேஸ்வரா கோயிலுக்காக அறியப்படுகிறது.
நீங்களும் திருப்பதி சென்று நாள் ஆகிவிட்டது என்று நினைக்குறீர்கள் என்றால், உடனே திட்டமிடுங்கள். கோவிலுக்கு சென்று பெருமாளை தரிசித்து விட்டு மன நிறைவோடு வீடு திரும்புங்கள்.
சென்னையிலிருந்து திருப்பதிக்கு ரயில் அல்லது பேருந்து மூலம் எளிதில் அணுகலாம்!
மேலும் ஸ்ரீகாளஹஸ்தி, க்ரோக்கடைல் பார்க், டைகர் பார்க், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, பல்வேறு தீம் பார்க்குகள், வேலூர், நெல்லூர் ஆகியவையும் நல்ல வார இறுதி விடுமுறை யோசனைகளாகும்.