இன்றைய வரலாற்றில் பெண்களின் காலடி படாத துறைகளே இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு எல்லா துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக, சொல்லப்போனால் சில துறைகளில் ஆண்களையே தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு வேகத்தையும், விவேகத்தையும் நம்பி களமிறங்கி பயணித்துக்கொண்டிருக்கிறார்கள் பெண்கள். ஆனால் இன்றும்கூட பெண்களை தனியே வெளியில் அனுப்ப இந்த சமூகம் அலறுகிறது. பெரும்பாலும் ஆண்களையே தங்கள் சமூகத்தின் தலைவராகக் கொண்டிருக்கும் ஒவ்வொரு சமூகமும் இந்த நிலைக்கு பாதுகாப்பின்மை, பத்திரப்படுத்துதல் என்று பெயரிட்டு அழைக்கிறது. வெள்ளைக்காரனிடம் வாங்கிய சுதந்திரத்தைக் கூட வீட்டு பெண்களுக்கு தரமறுக்கிறோம் ஆணாதிக்க உலகின் அம்சங்களாகிய நாம். ஆனாலும் கூட சில பெண்கள் துணிந்து வெளியே வருகிறார்கள். தனியே வாழ முனைகிறார்கள். அவர்களுக்கான நேரத்தை அவர்களையே வடிவமைத்து, சீர்செய்து வைக்கிறார்கள். அவர்களுக்கு தனியே சுற்றுலா ஒன்று தேவைப்படும்போது, சோலோ டிராவல் எனும் தனிமைப் பயணம் செய்கிறார்கள். அப்படி பெண்கள் தனிமைப் பயணம் செய்யும்போது எப்படியெல்லாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இந்தியாவில் எங்கெல்லாம் தனிமைப் பயணத்துக்கு சிறந்த இடமாக இருக்கும் என்று இந்த பதிவில் காண்போம்.
யாருக்கும் அஞ்சாமல் அசராமல் பெண்களின் வெற்றிப் பயணத்துக்கான டிப்ஸ் இதோ!
சோலோ டிராவல்
சோலோ டிராவல் என்பது, எந்த வித இடையூறும் இல்லாமல், நாம் பிறந்து வளர்ந்த இந்த உலகை தனியே அனுபவிக்க கிளம்பிச் செல்வதுதான். சிலர் தன் நெருங்கிய நண்பருடன் டிராவல் செய்யவிரும்புவார்கள். அவர்களுக்கும் ஏற்றவாறு இந்த பயணத் திட்டம் மற்றும் டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. படித்து பயன்பெறுங்கள்.
பெண்களே உலகின் அச்சாரம்
பெண்களின் காலடிப் படாத துறைகளே இல்லை என்ற அளவுக்கு ஆகிவிட்டது. அதைப் போலவே, பெண்களின் காலடி படாத இடங்களே உலகத்தில் இல்லை என்ற நிலையும் வரவேண்டும். உலகம் முழுக்க தனியாக பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால் ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்கள் குறைந்த அளவிலேயே பயணம் செய்கிறார்கள். இதற்கு சமூகத்தில் பெண்களின் நிலை, அவர்களின் பாதுகாப்பு என்று பல்வேறு காரணங்கள் தடைகளாக உள்ளன.
செல்ஃபி ராணிகளே
இதையும் மீறி சில பெண்கள் இடைவிடாது பயணம் செய்து புகைப்படங்கள் எடுத்து தங்களின் பிளாகில் எழுதியும் வருகிறார்கள். இதேபோல் நீங்களும் குமரி முதல் காஷ்மீர் வரை இந்தியாவின் எல்லா இடங்களுக்கும் எப்படி தனியாக பயணம் செய்வது என்பதற்கு சில டிப்ஸ்... அப்றம், எங்கெல்லாம் போகலாம்னு உங்களுக்கு ஐடியா இருக்கா.. இல்லையா கவலைய விடுங்க அதையும் நாங்களே குறிப்பிடுகிறோம். உங்களுக்கு விருப்பமான இடங்களுக்கு போய் வாருங்கள்.
செலவுகளை கண்டு பயமெதற்கு
பயணம் என்றாலே செலவுதான் அதனால் பயணத்திட்டத்தையே ஒத்திவைக்கும் சூழல்தான் இங்கு பலரிடத்தில் காணப்படுகிறது. பெண்களே.. நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் உங்கள் வேலைப் பளுவை தீர்க்கவேண்டாமா... மன அழுத்தத்தை குறைக்க வேண்டாமா... ஊர் சுற்றுங்கள்.. ஊதாரியாக அல்ல.. பயனுள்ளதாக.. நாம் பிறந்து வளர்ந்த இந்த நாட்டை யார்தான் நமக்கு காட்டித்தரவேண்டும். நாமே சுற்றலாமே.
முன்பெல்லாம் பயணம் செய்வது காசு செலவு வைக்கும் வேலையாக இருந்தது. ஆனால் இப்போது பயணம் செய்யும் முறை முற்றிலும் வேறு ஒரு கோணத்தில் வந்துவிட்டதால் மிக குறைந்த செலவிலேயே பல ஊர்களை சுற்றிப்பார்க்க முடிகிறது. இதற்கு நீங்கள் எதையும் பிளான் செய்து செய்ய வேண்டும்.
எங்கணாலும் பிளான் பண்ணி போகணும்...
அதாவது நீங்கள் போக விரும்பும் இடத்தை எவ்வாறு குறைந்த கட்டணத்தில் அடைய முடியும், தங்கும் வசதி என்று குறைந்த கட்டணத்தில் அனைத்தையும் முடிக்க திட்டமிட வேண்டும். ஆனால் பெண்களை பொருத்தவரை குறைந்த விலை ஹோட்டல்கள் என்பதை விட பாதுகாப்பான ஹோட்டலா என்றுதான் முதலில் தெரிந்துகொள்ளவேண்டும். பெண்கள் என்றில்லை தற்காலத்தில் ஆண்களுக்கே பாதுகாப்பில்லை. அதனால் பணம் என்ற மதிப்புள்ள காகிதத்தை நம்பாமல், பாதுகாப்பை உறுதிபடுத்திக்கொண்டு, வாழ்க்கையை அனுபவியுங்கள்.
யாரை நம்பி நான் பொறந்தேன்....
இதை மட்டும் உறுதிபடுத்திக்கொண்டால் மற்ற விஷயங்கள் எல்லாம் ஆண்களை போல பெண்களும் எளிமையான முறையில் கையாள முடியும். எனினும் பணத்தின் தேவை இருக்கத்தான் செய்யும். அதற்கு அவர்கள் மற்றவர்களை நம்பி இராமல் தங்கள் தேவைகளுக்கு தாங்களே சம்பாதித்துக்கொள்ளும் நிலையில் இருக்க வேண்டும்.
யாரை நம்பி நான் பொறந்தேன் என்று பாடிக்கொண்டே அசால்ட்டாக வாழ்க்கையை அனுபவிக்கும் பெண்கள் இருக்கிறார்களே.. அப்போ உங்களுக்கு என்ன பிரச்ன. பயம் அதுதான் எல்லாம்.. பயத்தை தூள்தூளாக்கிக்கொண்டு வெளிவாருங்கள். நீங்கள் இதுவரை பார்த்திராத ஒரு உலகம் இருக்கிறது.. பெண்களை சக மனிதர்களாக பார்க்கும் நிறைய ஆண்கள் இருக்கின்றனர். வெளிவாருங்கள்.
எப்படி போகலாம்...
ஆண்கள் எப்போதும் எவ்வாறு, எப்படி என்று பயணம் பற்றி அதிகம் சிந்திப்பதில்லை. அவர்கள் லாரிகளில் ஏறியோ, லிப்ட் கேட்டோ கூட பயணம் செய்யக்கூடியவர்கள். ஆனால் பெண்கள் இதேபோன்ற ஒரு பயணத்தை மேற்கொள்ள முடியுமென்றாலும் எது பாதுகாப்பான பயணம் என்பதில் கவனம் வேண்டும். தனியார் கார்கள், சுய வாகனங்கள், பொதுப்போக்குவரத்து முதலியவற்றை பயன்படுத்துங்கள். லாரிகளிலும், முன்பின் தெரியாத இடங்களில் லிப்ட் கேட்கவும் வேண்டாம். எனவே பேருந்து, ரயில், விமானம் என்று மக்கள் கூட்டம் உள்ள போக்குவரத்தையே பயன்படுத்துவது நல்லது.
நண்பர்களை உருவாக்குங்கள்
நீங்கள் பயணம் செய்யும் ரயிலிலோ, பேருந்திலோ உங்களருகில் இருக்கும் பெண்களுடனோ, குடும்பத்துடனோ பேசி நட்பு வைத்துக்கொள்ளுங்கள். அவர்களைப் பற்றி தெரிந்துகொள்ள முயலுங்கள். உதவுங்கள்.. உதவி பெறுங்கள். இது புலிகளில் காடல்ல.. அன்பான இதயங்கள் அன்றாடம் பயணிக்கும் நாடு. மேலும் அதே சமயம் அது ஒருவித பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்தும்.
சோலோ டிராவல்ல சுமை தூக்கியாகிவிடாதீர்கள்
நம்ம ஊரு காரங்களே இப்படித்தான்..., அதாவது எங்க போனாலும் அது 10 நாளானாலும், 2 நாளா இருந்தாலும் துணியையும், கட்டுச்சோற்றையும் மூட்டை கட்டி எடுத்துட்டு போறது. ஆனா தனியா பயணம் செய்யும்போது டிரஸ் விஷயத்துல ரொம்ப கவனம் தேவை. 2 நாள் பயணம்ன்னா 2 அல்லது 3 செட் டிரஸ் போதும். இல்லேன்னா எல்லா இடத்துக்கும் பையை தூக்கிட்டு போறது கஷ்டமாயிடும். அதனால எதெது தேவையோ அதைமட்டும் சரியா பாத்து விட்டுடாம எடுத்துவச்சுக்கோங்க. அதேபோல எவ்வளவு நாள் பயணம், அங்க என்னென்ன பாக்கணும், அதுக்கு எவ்ளோ நேரம் ஆகும், எப்போ திரும்பறது அப்படீன்னு ஒன்னுவிடாம பிளான் பண்ணி வச்சுக்கிறது நேரம் வேஸ்ட் ஆகிறத தவிர்க்கும்.
பிளேபாய்களிடம் கவனம்
போக்கிரி ஆண்கள் என்று சொல்லிக்கொண்டு, சில அரை அறிவிலிகள் சுற்றிக்கொண்டிருக்கும் உலகம் இது. இன்றைக்கு இருக்கும் நிலையில் காய்கறி வாங்க வெளியே போகும் பெண்களே அதிக கவனத்துடன் இருக்க வேண்டியுள்ளது. அப்படி இருக்கையில் 500, 600 கிலோமீட்டர் பயணம் செய்யும் பெண்கள் சில ஆண்களிடம், புதியவர்களிடமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம். அவர்களின் பாணியே, உங்களை புகழ்வதுதான்.
சிலசமயம் பாரதியார் கவிதைகள் கூட பேசி உங்களை வீழ்த்த நினைப்பார்கள். இந்த காலத்துல பசங்களே சரி இல்ல. ஆனா நா அந்தமாரி பையன் இல்லைங்கனு ஆரம்பிச்சி, கூட இருக்குறவங்களுக்கு உதவி செஞ்சி, உங்ககிட்ட நல்லபேரு எடுக்கபார்ப்பாங்க. பாத்துக்கோங்க.
உதவியை எப்படி கேட்கலாம்
தேவை இல்லாமல் எந்த புதிய மனிதரிடமும் எதுவும் பேச வேண்டாம். அப்படியே பேச வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டாலும் இடமும், நேரமும் பாதுகாப்பாக இருக்கிறதா என்ற கவனம் தேவை. அதோடு யாரிடம் எது கேட்பதாக இருந்தாலும் தயக்கமின்றி தைரியமாக கேளுங்கள். யாரும் உங்களை எளிதில் அணுக முடியாதபடி கொஞ்சம் முரட்டுத்தனமாகவே இருங்கள் தப்பில்லை.
பாதுகாப்பு உபகரணங்கள்
நீங்கள் பயணம் செய்யும்போது உங்களின் சகபயணிகளோடு நட்போடு இருப்பதில் தவறில்லை. ஆனால் யாரையும் முழுமையாக நம்பிவிடாமல், எல்லோர் மேலும் எப்போதும் ஒரு கண் இருக்கட்டும். அதுமட்டுமல்லாமல் மிளகு தெளிப்பான் (பெப்பர் ஸ்ப்ரே), விசில், பிளாஸ்டிக் கத்தி போன்ற பாதுகாப்பு உபகரணங்களை உடன் எடுத்துச்செல்வது நல்லது. இவைதவிர எங்கு செல்கிறீர்களோ அந்த இடத்தின் வரைபடத்தை (மேப்) வைத்துக்கொள்வது இடம் தெரியாமல் திண்டாடுவது உள்ளிட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
அழைத்தால் உடனே வரும் நட்புக்கள்
இந்த காலத்துல யாருங்க கால் பண்ணா உடனே வர்றா.. அட கால் அட்டன்ட் பண்றதே பெருசுனு யோசிக்கிறீங்களா. நீங்கள் எங்கு சென்றாலும், நம்பிக்கையான நபரை கண்டுபிடிப்பது எப்படி என்று உணருங்கள். சுற்றுலா செல்லுமிடத்தில் உங்கள் நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள் யாரேனும் இருந்தால் அவரைத் தொடர்புகொள்ளும் வகையில் திட்டமிட்டு வைத்திருங்கள். அவசரகாலத்தில் அது பயனுள்ளதாக இருக்கும்.
எங்கெல்லாம் போகலாம்
பெண்கள் தனியாக எங்கே வேண்டுமானாலும் சுற்றுலா செல்லலாம். ஆனாலும் தற்போதைய சூழலில், பெண்கள் அதிகம் மெனக்கெடாமல், பயணம் செல்ல சிறந்த இடங்கள் சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறோம். சென்னை, சம்பா, ஆரோவில்லே, மைசூரு, ஆக்ரா உள்ளிட்ட பல இடங்கள் பெண்கள் எளிதாக சோலோ டிரிப் செல்ல உகந்த இடங்கள் ஆகும்.
சென்னை
சென்னை மாநகரம் என்னதான் இவ்வளவு பரந்து விரிந்திருந்தாலும், பெண்கள் வாழ, சுற்றுலா செல்ல சிறந்த இடமாகும். ஒரு சில இடங்களைத் தவிர்த்து, மற்ற இடங்களில் பெண்களுக்கு எந்த வித பாதிப்பும் வராது.. ரயில் நிலையங்களிலும், மற்ற சில இடங்களிலும் சீண்டல்கள் தொடர்கின்றன என்பது வேதனையான விசயம்தான் என்றாலும், பெண் பயணிகள் பாதுகாப்பாக உணர்வதாக சென்னையை குறிப்பிடுகின்றனர்.
Vinoth Chandar
சம்பா
இமாச்சல பிரதேசத்தின் சம்பா எனும் பகுதி, சோலோ டிரிப் செல்லும் பெண்களுக்கு சிறந்த இடமாகும். புகைப்படம் எடுக்கவும், இயற்கையை அனுபவிக்கவும் சிறப்பானதாக அமைகிறது இந்த இடம். மேலும் இங்குள்ள விடுதிகள் பாதுகாப்பானதாக இருப்பதாக பயணிகள் கருதுகின்றனர்.
Photo Courtesy: Voobie
ஆரோவில்லே
முழுக்க முழுக்க தனித்தன்மையான பிரதேசம் இதுவாகும். தமிழகத்தில் இருந்தாலும், இது மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட, பாதுகாப்பான பகுதியாகும்.
பாண்டிச்சேரி எல்லை அருகே தமிழகத்தில் அமைந்துள்ளது.
Photo Courtesy: InOutPeaceProject
மைசூரு
கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள மைசூரு தசரா கொண்டாட்டத்துக்கும், அரண்மனைக்கும் மிகுந்த பெயர் பெற்ற இடமாகும்.
பெங்களூருவிலிருந்து வாரவிடுமுறைகளில் பொழுதுபோக்க வரும் இடமாகவும் இது அமைகிறது.
Photo Courtesy: Muhammad Mahdi Karim
ஆக்ரா
ஆக்ராவைத் தெரியாதவர்கள் யாரேனும் இருக்கிறார்களா. இருந்தால், தெரிந்துகொள்ளுங்கள். காதலின் மகத்தான சின்னமான தாஜ்மஹால் இருக்கும் இடம்தான் ஆக்ரா.
அமைதியான இடமாக இருந்தாலும், அதிகம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதால் பாதுகாப்பானதாக உணர்வதாக பெண் பயணிகள் கூறுகின்றனர்.
எண்ணற்ற இடங்கள் சுற்றித் திரியுங்கள்
பெண்கள் தேவதைகளாக பிறக்கவேண்டியவர்கள். உண்மையில் சிறகில்லா தேவதைகள்தான் நீங்கள். பறப்பதற்கு சிறகு தேவையா என்ன.. பறந்திடுங்கள் இந்தியா முழுவதும்... உங்கள் நேட்டிவ் பிளானட் தமிழுடன்... தொடர்ந்து இணைந்திருங்கள்.