சாகசப் பிரியர்களுக்கு இந்தியா ஒரு சொர்க்கமாக விளங்குகிறது, இந்தியாவின் பல்வேறு வித்தியாசமான நிலப்பரப்புகளில் பலவிதமான பரபரப்பான செயல்பாடுகள் அரங்கேறுவதால் உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் இந்தியாவுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இந்தியாவில் ட்ரெக்கிங், ரிவர் ராப்டிங், ஸ்னோர்கேல்லிங், ஸ்கூபா டைவிங், பறக்கும் பலூன் போன்ற எண்ணற்ற செயல்பாடுகள் உள்ளன. அவற்றில் ஒன்றான பனி மூடிய சிகரங்களுக்கு ட்ரெக்கிங் செய்வது பற்றி தான் இப்போது பார்க்கப் போகிறோம்!
மனதை தெளிவுப்படுத்தும் ட்ரெக்கிங்
பனி மூடிய மலைகளுக்கு மலையேற்றம் என்பது இயற்கையின் அமைதியான அழகுடன் சாகசத்தின் சிலிர்ப்பையும் இணைக்கும் ஒரு பிரமிக்க வைக்கும் செயலாகும். மலையேறுபவர்கள் கரடுமுரடான பாதைகள், அடர்ந்த காடுகள் மற்றும் உயரமான புல்வெளிகள் வழியாக மேலே செல்லும்போது, பனியில் போர்த்தப்பட்ட உயரமான சிகரங்களைக் காண்பது ஆச்சரியத்தையும் சாதனையையும் ஏற்படுத்துகிறது. மிருதுவான மலைக் காற்றும், காலடியில் நசுக்கும் பனியின் சத்தமும், அழகிய நிலப்பரப்புகளின் பரந்த காட்சிகளும் சவால் மற்றும் அமைதியின் தனித்துவமான கலவையை வழங்குகின்றன. பனி மூடிய மலைகளுக்கு ட்ரெக்கிங் செய்வது என்பது முற்றிலும் ஒரு வித்தியாசமான அனுபவமாகும்.
இந்தியா வழங்கும் மயக்கும் பனி மலையேற்றம்
பனி மலையேற்றத்திற்கான கண்கவர் இடங்களின் வரிசையை இந்தியா கொண்டுள்ளது, சாகச ஆர்வலர்களுக்கு நாட்டின் மாறுபட்ட மற்றும் மூச்சடைக்கக்கூடிய நிலப்பரப்புகளை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. இமயமலைப் பகுதி ஒரு முக்கிய இடமாகும், இந்த பனி மலையேற்றப் பாதைகள் இந்தியாவின் குளிர்கால அதிசயங்களின் மயக்கும் அழகுடன் சிலிர்ப்பூட்டும் சாகசத்தையும் இணைத்து, மலையேற்ற ஆர்வலர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாக அமைகிறது.
நீங்கள் இந்தியாவில் முயற்சி செய்ய வேண்டிய பனி மூடிய ட்ரெக்கிங்
அலி பெட்னி புக்யால்
அலி பெட்னி ட்ரெக்கிங் எந்தப் பருவத்திலும் மலையேற்றப் பயணிகளை திகைக்க வைக்கும் ஒரு அனுபவத்தை வழங்கக்கூடிய இடமாகும். ட்ரெக்கிங் செய்து மிகவும் பிரபலமான இரண்டு மலைகளான திரிசூல் மவுண்ட் மற்றும் நந்தா குண்டி மலையின் மிக நெருக்கமான காட்சிகளை மறக்க வேண்டாம் பயணிகளே. நீங்கள் ஒரு அழகான தனிமைப்படுத்தப்பட்ட அனுபவத்தைத் தேடுகிறீர்களானால், கண்களை மூடிக்கொண்டு இதைத் தேர்ந்தெடுக்கவும்.
சதார் ட்ரெக்கிங்
லடாக்கில் உள்ள சதார் ட்ரெக்கிங் இமயமலையில் மிகவும் சவாலான, அழகிய மற்றும் அற்புதமான குளிர்கால ட்ரெக்கிங் ஸ்பாட் ஆகும். மிகப்பெரிய மற்றும் செங்குத்தான பனி மலைகளால் சூழப்பட்டுள்ள இப்பகுதியில் வானிலை மிகவும் குளிராக இருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 11,000 அடி உயரத்தில் அமைந்துள்ள சதாரின் முழு ட்ரெக்கிங்கை முடிக்கவும் தோராயமாக 7-9 நாட்கள் ஆகும். இந்த பயணத்தின் போது உறைந்த ஜன்ஸ்கர் ஆற்றின் மீதும் நீங்கள் நடந்து செல்வீர்கள்.
நாக் திப்பா ட்ரெக்கிங்
நாக் திப்பா அல்லது பாம்பின் சிகரம் என்றழைக்கப்படும் இந்த சிகரம் நாக் திப்பா மலைத்தொடரில் உள்ள மிக உயரமான சிகரமாகும். கடல் மட்டத்திலிருந்து ஏறத்தாழ 9,924 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இது, புதிதாக ட்ரெக்கிங்கில் ஈடுபடுபவர்களுக்கான சிறந்த குளிர்கால மலையேற்றங்களில் ஒன்றாகும். அழகான பந்தர்பூஞ்ச் சிகரம் மற்றும் கங்கோத்ரி சிகரங்கள், கேதார்நாத் சிகரம், சனாபாங்கின் பனி முகடுகள் மற்றும் டூன் பள்ளத்தாக்கு ஆகியவற்றைக் காணலாம்.
கேதார்கந்தா ட்ரெக்கிங்
இந்தியாவின் தலைசிறந்த குளிர்கால மலையேற்றங்களில் ஒன்றான கேதார்கந்தா குளிர்கால மலையேற்றமானது தொலைதூர கிராமங்கள், பரந்த மேய்ச்சல் நிலங்கள் மற்றும் புல்வெளிகள், பனி நிறைந்த பகுதிகள் மற்றும் பெரிய இமயமலையின் கம்பீரமான காட்சிகள் வழியாக உங்களை அழைத்துச் செல்லும் ஒரு அழகான பாதையாகும். மேலும் ஸ்வர்க்ரோஹினி, பந்தர்பூஞ்ச், கறுப்பு சிகரம் போன்ற பெரிய மலைத்தொடர்களின் மிக அற்புதமான காட்சிகளையும் நீங்கள் கண்டு மகிழலாம்.
குவாரி பாஸ் ட்ரெக்கிங்
கம்பீரமான இமயமலை சிகரங்களின் மிகவும் நம்பமுடியாத காட்சிகளைக் காண நீங்கள் கட்டாயம் குவாரி பாஸ் ட்ரெக்கிங்க்கை தேர்ந்தெடுக்க வேண்டும். திபெத் எல்லை வரை நீண்டு கிடக்கும் சௌகாம்பா மலைத்தொடர், மனா, கமெட் மற்றும் அப்ல் கமின் ஆகிய மலைகளை நீங்கள் இந்த ட்ரெக்கிங்கில் கண்டு வியப்படையாமல் இருக்க முடியாது. இந்த ட்ரெக்கிங்கை முடிக்க தோராயமாக 4-6 நாட்கள் ஆகும்.
சக்டக்பு ட்ரெக்கிங்
"ட்ரெக்கர்ஸ் வொண்டர்லேண்ட்" என்று பரவலாக அறியப்படும் சக்டக்பு, மேற்கு வங்காளத்தில் உள்ள மிக உயரமான இடமாகும், இங்கு இருந்து உலகின் மிக உயரமான மலை சிகரங்களான எவரெஸ்ட், காஞ்சன்ஜங்கா, லோட்சே மற்றும் மகாலு போன்ற சில மறக்க முடியாத காட்சிகளைக் காணலாம். இந்த ட்ரெக்கிங் சற்றே கடினம் தான், ஆனால் மலையேற்றம் செய்பவர் உச்சியை அடையும் போது அழகான காட்சிகள் மற்றும் பிரமிக்க வைக்கும் அனுபவங்களைப் பெறுகிறார்.
டோடிடல் ட்ரெக்கிங்
உயரத்தில் அமைந்துள்ள ஒரு வியத்தகு மற்றும் அழகிய பாதையான, டோடிடல் ட்ரெக்கிங் இந்தியாவில் டிசம்பரில் மலையேற்றம் செய்ய சிறந்த இடங்களில் ஒன்றாகும். இந்த நடைபயணம் அடிப்படையில் ஒரு வனப் பயணமாகும், குளிர்காலத்தில், நிலப்பரப்பு முற்றிலும் பனியால் மூடப்பட்டிருக்கும். டோடிடலைச் சுற்றியுள்ள பகுதிகள் விநாயகப் பெருமானின் உறைவிடம் என்று நம்பப்படுகிறது.
பிரஷர் லேக் ட்ரெக்
ஹிமாச்சலப் பிரதேசத்தின் மண்டியில் இருந்து கிட்டத்தட்ட 50 கிமீ அமைந்துள்ள பிரஷர் லேக் ட்ரெக் ஒரு குளிர்கால ட்ரெக்கிங் ஆகும். ஆழமான நீல நீரைக் கொண்ட ஒரு அழகான ஏரியை அடைவதே இந்த ட்ரெக்கிங்கின் இலக்காகும். தௌலதார், பீர் பஞ்சால் மற்றும் கின்னவுர் மலைத்தொடர்களின் தெளிவான மற்றும் அற்புதமான காட்சிகளை கண்டு நீங்கள் வியக்கலாம்.
சோப்தா சந்திரசிலா ட்ரெக்கிங்
சோப்தா சந்திரசிலா மலையேற்றம் இமயமலையில் மிகவும் பிரபலமான மலையேற்றங்களில் ஒன்றாகும். உத்தரகாண்டின் கர்வால் பகுதியில் அமைந்துள்ள, இந்தியாவின் மிக உயரமான சிவன் கோவிலான துங்கநாத்துக்குச் செல்வதே இந்த ட்ரெக்கிங் ஆகும். கடல் மட்டத்திலிருந்து அதிகபட்சமாக 12,877 அடி உயரத்தில் அமைந்துள்ள இது, நந்தா தேவி, கேதார், திரிசூல் மற்றும் சௌகம்பா சிகரங்களின் மிக அழகான தரிசனத்தையும், கர்வால் இமயமலையின் அற்புதமான அனைத்தையும் தழுவும் காட்சியையும் உங்களுக்கு வழங்குகிறது.



Click it and Unblock the Notifications







