கோவில் சன்னதியில் மனமுருகி வேண்டிக் கொண்டிருக்கையில் கடவுளின் கண் திறந்து உங்களைக் காணும் காட்சி, அதுவும் வேறெந்த திருத்தலத்திலும் காணக்கிடைக்காத வகையில், அக்கண்ணில் இருந்து மின்னும் ஒளி.. எப்படி இருக்கும் ?. ஆமாங்க, இங்க ஒரு கோவில்ல இந்த மாதிரிதான் நடக்கிறது. இந்த விசித்திரமான நிகழ்வைப் பார்ப்பதற்காகவே தற்போது பக்தர்களின் கூட்டம் அங்க கொஞ்சம் அதிகமாக இருக்குதுன்னா பாருங்களேன். வாங்க, நாமலும் அந்த மிளிரும் கண்கொண்ட அதிசய அம்பாளை தரிக்கச் செல்வோம்.

தல சிறப்பு
இந்த கோவிலில் மூலவராக வீற்றிருப்பவர் மார்க்க சகாயேஸ்வரர். அம்மையாராக மரகதாம்பிகை அம்பாள் அருள்பாலிக்கிறார். வேறெந்த அம்பாளின் கோவிலிலும் இல்லாத அளவிற்கு இக்கோவில் சிறப்பு பெற்றிருக்கக் காரணம், அம்பாளின் கண்களில் மரகத ஒளி மின்னுவதைப் பார்த்த அடுத்த நிமிடமே பரவசத்தின், அம்மையாரின் அருளின் வெளிப்பாடாக நம் கண்களில் நீர் வரத் தொடங்கிவிடும்.
Alain6963

கோவில் வரலாறு
விழுப்புரம், திருக்கோவிலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளை நடுநாடு என்பார்கள். அக்காலத்தில் சோழ நாட்டை ஆட்சிசெய்து வந்த மன்னர் ஒருவர் இந்த நடுநாட்டையும் கைப்பற்றி ஆட்சி செய்து வந்தார். முன்னதாகவே இந்த ஊரைச் சுற்றிலும் உள்ள மலைப் பகுதிகளிலும், வனப் பகுதிகளிலும் முனிவர்கள் பலர் தவமிருந்ததை அறிந்த மன்னர் அவர்களுக்காகவும், நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காகவும் ஈசனுக்கு திருத்தலங்கள் அமைக்க முடிவு செய்தார். அதன்படியே வனப் பகுதியில் சிவபெருமானுக்கு என ஒரு கோவில் கட்டப்பட்டது. நாட்டைக் காக்கும் சிவபெருமான் இத்தலத்திலேயே வீற்றிருக்கிறான் என்பதால் இந்தக் கோவிலில் குடிகொண்டிருக்கும் மூலவருக்கு மார்க்க சகாயேஸ்வரர் என திருநாமம் சூடப்பட்டது.
Saravananrajm

திருவண்ணாமலைக்கே மூத்த தலம்
திருவண்ணாமலையில் பிரசிதிபெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா காலகட்டத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளான வேலூர், ஆற்காடு, திருப்பட்டூர் என பல பகுதிகளில் இருந்து மக்கள் ஆயிரக் கணக்கில் திருவண்ணாமலை நோக்கி வருவர். அவ்வாறு வருகையில் ஆரணியை அடுத்துள்ள அக்ராபாளையம் சிவன் கோவிலுக்கு வந்து இரவு தங்கி மறுநாள் தான் திருவண்ணாமலைக்கே செல்வர். அப்போது மார்க்க சகாயேஸ்வரருக்கு சிற்ப்பு பிரார்த்தனை செய்து, வழிபாடுகள் நடைபெறும். இந்நிகழ்வின் போது விடியவிடிய அன்னதானமும் நடைபெறும்.
Govind Swamy

வழிபாடு
குடும்பத்தில் தொடர் பிரச்சனை, கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு, சொத்து பிரச்சனை மற்றும் நிலம், வீடு உள்ளிட்டு ஏதேனும் வாங்குவோர் இக்கோவிலுக்கு வந்து மூலவரிடம் வாக்கு பெறுவது வழக்கம். தொடர்ந்து, அம்பாளிடமும் அருள் பெருவர். அச்சமயம் அம்பாளின் கண்ணில் இருந்து வெளிப்படும் ஒளி நல்ல சகுனமாக நம்பப்படுகிறது.
Ilya Mauter

நேர்த்திக்கடன்
இத்தலத்தில் வேண்டிச் சென்ற பக்தர்கள் வேண்டுதல்கள் நிறைவேறியதும் மார்க்க சகாயேஸ்வரர் மற்றும் மரகதாம்பிகை அம்மனுக்குப் பாண தீர்த்தத்தில் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரமிட்டு மாலை அணிவித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர்.
Saba rathnam

நடை திறப்பு
அருள்மிகு மார்க்க சகாயேஸ்வரர் திருக்கோவில் நடை காலை 6.30 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுகிறது. பிரதோஷ தினங்களில் மட்டும் மாலை நேரத்தில் 3.30 மணி முதல் இரவு 8.30 வரையில் சிறப்பு வழிபாடு நடத்தப்படும்.
Thamizhpparithi Maari

திருவிழா
சிவ விருதத்தில் சிறந்த நாளான சிவராத்தி அன்று பிற கோவில்களைப் போலவே இங்கும் வழிபாடு நடைபெறுகிறது. அதனைத் தவிர்த்து பௌர்ணமி, அமாவாசை, திருவூடல், பங்குனி உத்ரம் உள்ளிட்ட தினங்களிலும் வேறுபட்ட வழிபாடு இங்கு நடைபெறுகிறது.
Vijayakumarblathur

எப்படிச் செல்வது ?
திருவண்ணாமலை மாவட்டம், அக்ராபாளையத்தில் அமைந்துள்ளது மார்க்க சகாயேஸ்வரர் கோவில். திருவண்ணாமலையில் இருந்து வேலூர் தேசிய நெடுஞ்சாலை 38-யில் போளூர் வழியாக 64 கிலோ மீட்டர் பயணித்தாலும், தாமரைப்பாக்கம் வழியாக சுமார் 80 கிலோ மீட்டர் பயணித்தாலும் இத்தலத்தை அடைந்து விடலாம். இராணிப்பேட்டை, வேலூர், கண்ணதங்கலம் செல்லும் பேருந்துகளில் இங்கு செல்ல முடியும்.



Click it and Unblock the Notifications



