இந்தியாவில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மாநிலமான மஹாராஷ்ட்ரா தன் எல்லைகளாக மேற்கே அரபிக்கடல், வடமேற்கில் குஜராத், வடகிழக்கில் மத்தியப் பிரதேசம், கிழக்கே சத்தீசுக்கர், தென்மேற்கில் கோவா என பசுமையும், கூற்றுலத் தலங்களும் நிறைந்த பகுதியாகும். எல்லோரா,
தடோபா தேசியப் பூங்கா, கிரிஸ்னேஸ்வரர் கோவில், சண்டோலி தேசியப் பூங்கா, சனி சிங்கனாப்பூர், சீரடி என ஆன்மீகத் தலங்களும், சுற்றுலாத் தலங்களும் இப்பகுதியில் நிறைந்து காணப்பட்டாலும் இங்குள்ள பெரும்பாலான பண்டைய கால கோட்டைகளும் வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும் வல்லமை கொண்டதாகத்தான் உள்ளது.
இதில், என்ன சிறப்பு என்றால் பெரும்பாலான கோட்டைகள் கடலுக்கு நடுவே காட்டப்பட்டிருப்பதும், அவை இன்றளவும் தனது பொழிவையும், கம்பீரத்தையும் இழக்காமல் இருப்பதுமே.
உலகம் முழுக்க அந்தக் காலங்களில் எதிரிகளிடமிருந்து தங்களின் துறைமுகத்தை பாதுகாக்கும் பொருட்டு பிரம்மாண்டமான கடற்கோட்டைகள் கட்டுவது வழக்கமாக இருந்துள்ளது. அந்த வகையில் இந்தியாவிலும் கம்பீரமான தோற்றத்துடன் கடற்கோட்டைகள் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டிருக்கின்றன. இவற்றில் இன்று மஹாராஷ்டிர மாநிலத்தில் அமைந்துள்ள கடற்கோட்டைகள் மிகவும் முக்கியமானவை.
ஜஞ்சிரா கோட்டை
PC : Chirag Upadhyay
நாலாபுறமும் கம்பீரமான அரபிக்கடல் சூழ்ந்திருக்குமாறு பிரம்மாண்டமாக அமைந்திருக்கும் இந்த வரலாற்றுக்கோட்டை 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. முருட் ஜஞ்சிராவில் உள்ள இந்தக் கோட்டை ஆங்கிலேயர்கள், டச்சுக்காரர்கள், போர்ச்சுகீசியர்கள் மற்றும் மராத்தா வம்சத்தாரின் தாக்குதல்களை தாங்கி காலத்தில் நீடித்து நிலைத்து நிற்கிறது. ஆதியில் மரத்தால் கட்டப்பட்டிருந்த இந்த கோட்டை பின்னர் வலிமையானதாக மாற்றப்பட்டு எதிரிகளை தாக்கும் தளவாடங்களை சேகரித்து வைக்கப்பயன்பட்டுள்ளது.
விஜயதுர்க் கோட்டை
PC : Rehansarang
300 வருடங்களுக்கு முன் 17-ஆம் நூற்றாண்டில் மாமன்னர் சிவாஜியால் கட்டப்பட்ட பெருமையை கொண்ட கோட்டை விஜயதுர்க் கோட்டையாகும். இக்கோட்டையை வென்று கொள்ளயடிக்க முயன்ற அயல் நாட்டு எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக இருந்திருக்கிறது விஜயதுர்க் கோட்டை. 17 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்கோட்டையைச் சுற்றி மூன்று அடுக்குகளாக பாதுகாப்பு சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் இப்படிப்பட்ட பிரம்மாண்ட கோட்டையானது ஒரு காலகட்டத்தில் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது. ஆங்கிலேயர்கள் இந்தக்கோட்டைக்கு அகஸ்டஸ் கோட்டை அல்லது சமுத்திர கோட்டை என்று மறுபெயரிட்டனர்.
உந்தேரி கோட்டை
PC : Rakesh Ayilliath
மும்பை துறைமுகத்துக்கு அருகில் அமைந்துள்ள உந்தேரி கோட்டை 1678-ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. அலிபாக்கில் உள்ள இந்தக் கோட்டையின் உள்ளே சென்று பார்ப்பதற்கு பயணிகள் மும்பை துறைமுக நிர்வாகத்திடம் முன் அனுமதி பெற வேண்டும்.
சிந்துதுர்க் கோட்டை
PC : Sballal
சிந்துதுர்க் என்றால் மராத்தி மொழியில் கடலில் கட்டப்பட்ட கோட்டை என்பது பொருள். 1664 லிருந்து 1667க்குள் மூன்றே ஆண்டுகளில் சத்ரபதி சிவாஜி மஹாராஜாவால் இந்த கோட்டை கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. ஹிரோஜி இந்துல்கர் என்ற அக்காலத்திய கட்டிடக்கலை நிபுணர் இந்தக் கோட்டையின் கட்டுமானத்தை மேற்பார்வையிட்டதாகவும், 4000 கிலோ இரும்பு உருக்கப்பட்டு அஸ்திவாரத்துக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் குறிப்புகள் தெரிவிக்கின்றன. 50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கோட்டையைச் சுற்றிலும் 9.2 மீட்டர் உயரம் கொண்ட சுற்றுச்சுவர் சுமார் 4 கி.மீ நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ளது.
சுவர்ணதுர்கா கோட்டை
PC : AshLin
சிவாஜி மகாராஜாவால் கட்டப்பட்ட எண்ணற்ற கடற்கோட்டைகளில் சுவர்ணதுர்கா கோட்டையும் ஒன்று. 1660-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக் கோட்டை 'மராட்டியர்களின் தங்க கிரீடத்தில் உள்ள சிறகு' என்று அழைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோட்டை அரபிக் கடலின் நடுவே 8 ஏக்ரா பரப்பளவில் மிக பிரம்மாண்டமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.
கொலாபா கோட்டை
PC : Abhiram Katta
மும்பையிலிருந்து 98 கி.மீ தொலைவிலுள்ள அலிபாக் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள இந்தக் கோட்டை சிவாஜி மஹாராஜாவால் அவரது இறுதிக்காலத்தில் கட்டப்பட்டதாகும். ஒரு காலத்தில் இந்த கொலாபா கோட்டையில் ஒரு இனிப்பு நீர் கிணறு இருந்துள்ளது. 300 ஆண்டுகள் பழமையான இந்தக் கோட்டையை அலை இறக்கம் உள்ள நாட்களில் அலிபாக் கடற்கரையிலிருந்து நடந்தே சென்று பார்க்கலாம்.