வாஸ்து என்னும் சொல் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்திற்கம், அல்லது கட்டப்படவுள்ள கட்டிடத்தினையும், நிலத்தையும் குறிக்கும். வாஸ்து சாஸ்திரத்தில் ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளும், அதன் தத்துவங்களும் வேதம் சார்ந்து அறிவுருத்தப்படுகிறது. இதில், நகர அமைப்பு, கட்டிடக்கலை உள்ளிட்டவை தொடர்பான, இந்தியாவின் மிகவும் பழமையான அறிவுத்துறைகளின் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்துக்களின் முதல் நூல்களான நான்கு வேதங்களில் நான்காவது வேதமான அதர்வண வேதத்தில் கூட வாஸ்து குறித்தான தகவல்கள் சொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. வாஸ்து சாஸ்திரத்தின் நோக்கமே, மக்களின் நல்வாழ்வுக்காக அவர்களுடைய தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்து, கட்டப்படுகின்ற வீடு அல்லது பிற கட்டிடம், மனிதன் இயற்கையுடனும், பிரபஞ்சத்தினுடனும் ஒன்றிணைந்து போவதற்கு உதவுவது ஆகும். இத்தகைய வாஸ்து எங்கு தோன்றியது, அதற்கான வரலாறு என்னவென்று உங்களுக்கு தெரியுமா ?. வாருங்கள், அது தோன்றிய இடத்திலேயே அதற்கான வரலாற்றையும் தேடிச்செல்வோம்.
அரக்கனும், வாஸ்து பகவானும்...
அண்டகாசுரன் என்னும் அரக்கன், தன்னை வெற்றிபெற இந்த லோகத்தில் யாரும் இல்லை என்று தலைக்கணத்தில், சிவபெருமானை போருக்கு அழைத்தான். அப்போது சிவபெருமானுடன் போரிட்ட அசுரனின் நெற்றியில் வழிந்த இரத்தத் துளியில் இருந்து அகோரப் பசியுடன் ஒரு பூதம் தோன்றியது. அந்த பூதம் கண்ணில் தென்பட்ட அனைத்தையும் விழுங்கியது. கொடிய அசுரன் அண்டகாசுரனின் உடலையும் அது விழுங்கியது. தீராத பசியில் இருந்த பூதம் தன் பசியை தீர்த்து வைக்க சிவபெருமானிடம் வேண்டிய போது, சிவபெருமான் அந்த பூதத்திற்கு அனைத்தையும் உண்ணும் வரத்தை அளித்தார். இதனால் பூதத்திற்கு இந்த பூமியையே அளிக்கும் சக்தி உண்டானதைத்தொடர்ந்து, தேவர்கள் அனைவரும் பிரம்மாவிடம் முறையிட்டனர். பிறகு பிரம்மா அந்த பூதத்திடம் பூமியில் மக்கள் வீடு கட்டும் போது அவர்கள் படைக்கும் உணவை உண்டுகொள் என்றும், சாஸ்திரப்படி வீடு கட்டவில்லை என்றால் அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு தன்பத்தைக் கொடு என வரம் அளித்தார். அந்த பூதமே வாஸ்து பகவான் என்றும் வாஸ்துப்படி வீடு கட்டுபவர்களுக்கு நன்மைகளையும், மற்றவர்களுக்கு தீமையையும் அளித்து வருகிறார். வாஸ்து என்றால் வாழும் இடம் என்று பொருள். மிகச்சரியான வாஸ்து உள்ள வீட்டில் பிரச்சனைகள் இருக்காது என்பது நம்பிக்கை.
Sridharbsbu
தொன்றிய இடம்!
இந்தியா முழுவதும் கடைபிடிக்கப்படும் இந்த வாஸ்து தோன்றிய இடம் நம் தமிழகத்தின் தான் என்றால் மிகையாகாது. அதுவும், திருக்கோவிலூரில் உள்ள சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள தலத்திலேயே இந்த வாஸ்து தோன்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
Ssriram mt
தல சிறப்பு
தேவாரப் பாடர்பெற்ற சிவாலயங்களில் 22-வது சிவ தலம் வீரட்டேசுவரர் திருக்கோவில். இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக சிவன் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் உள்ள விநாயகர் குறித்து கூட அவ்வையார் அகவல் பாடியுள்ளார். அண்டகாசுரனை சிவபெருமான் வதம் செய்த இடமாகவும் இது திகழ்கிறது. மூலஸ்தானத்தில் பைரவ சொரூபமாக உள்ளார். இத்தலத்தில் பில்லி சூனியம் போன்ற தோஷங்கள் நிவர்த்தி செய்யப்படுகிறது. இங்குதான் சுக்கிரன் சாப விமோட்சனம் பெற்றார். சப்த மாதாக்களும், 64 பைரவர்கள், பைரவிகள் தோன்றிய தலமும் இதுதான்.
Ssriram mt
கோவில் வரலாறு
அண்டகாசுரனுக்கும், சிவனுக்கும் போர் நடக்கையில் சிவனின் கதைப்பட்டு அண்டகாசுரனனின் தலையில் இருந்து இரத்தம் வழிந்தது. ஒவ்வொரு துளி இரத்தத்தில் இருந்தும் பல அசுரர்கள் தோன்றினர். இதனைக் கட்டுப்படுத்த பார்வதி காளி ரூபத்தில் அண்டகணின் தலையில் இருந்து வெளியேறும் இரத்தத்துளிகளை கையிலேந்தி தடுத்தாள். ஆனால், அதிகப்படியாக வெளியேறிய இத்தம் பல கோடுகளாக பிரிந்து 64 பதங்களில் விழுந்து அரக்கர்கள் தோன்றியதால் சிவன் 64 பைரவர்களை உருவாக்கி அசுர உற்பத்தியைத் தடுத்து அண்டகாசுரனை வதம் செய்தார். இந்நாளே வாஸ்து சாந்தி என்று கிரகப் பிரவேசக் காலங்களில் அழைக்கப்படுகிறது.
Ssriram mt
வீரட்டேசுவரர் தல திருவிழா
மாசிமாதத்தில் பத்து நாட்களுக்கு பிரம்மோற்சவ விழா கொண்டாடப்படுகிறது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபடுவர். நவராத்திரி, மார்கழி சூரசம்காரம், திருவாதிரை உற்சவம் உள்ளிட்ட விழா நாட்களும் இத்தலத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.
Ssriram mt
நடை திறப்பு
அருள்மிகு வீரட்டேசுவரர் திருக்கோவில் நடை காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும்.
Ssriram mt
வழிபாடு
இத்தலத்தில் உள்ள மூலவரை வழிபட்டுச் சென்றால் இல்லறத்தில் மனநிம்மதி தோன்றும். பூர்வ ஜென்ம பாவங்கள், புத்திர தோஷங்கள் விலகி, காரியத் தடைகள் அகலும். வீடகட்டுவதற்கு நீண்ட நாட்களாக தடை ஏற்பட்டு வருவோர் இத்தலத்தில் உள்ள சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக பூஜை செய்தால் வாஸ்து தொடர்பான பிரச்சனைகள் நீங்கி விரைவில் வீடுகட்டுவதற்கான பாக்கியம் கிடைக்கும்.
Ssriram mt
நேர்த்திக்கடன்
இத்தலத்திற்கு வந்து வழிபடுவோர் வேண்டிய காரியம் நிறைவேறியதும், மூலவருக்கும், பெரிய நாயகி அம்மனுக்கும் புது ஆடைகள் சாற்றி, பால், தயிர், விபூதி, பன்னுர் உள்ளிட்டவற்றால் அபிஷகம் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவர்.
Ssriram mt
எப்படிச் செல்வது ?
விழுப்புரத்தில் இருந்து சுமார் 36 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருக்கோவிலூரில் அமைந்துள்ளது அருள்மிகு வீரட்டேசுவரர் திருக்கோவில். குப்பம், மாம்பழப்பட்டு, அரக்கந்நல்லூர் வழியாக இத்தலத்தை அடையலாம். திருவண்ணாமலையில் இருந்து வேலூர் - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 35 கிலோ மீட்டர் பயணித்தாலும் இக்கோவிலை அடையலாம். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இக்கோவிலை அடைய பேருந்து வசதிகள் உள்ளது.