தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி கிராமம்தான் தல அஜித் தூக்கு துரையாக வாழும் ஊர். அவர் அங்கு குடும்பமாக வாழும் சமயத்தில் நடக்கும் சில பிரச்சனைகளால் குடும்பம் பிரிந்துவிடுகிறதாம். அதன்பிறகு அவர்களின் குடும்பம் எப்படி சேர்ந்தது என்பதை விளக்கும் கதையாகவே விஸ்வாசம் படம் வரவிருக்கிறது என்று பேசப்படுகிறது. அப்படி தூக்கு துரை வாழ்ந்த கிராமம் எப்படி இருக்கும் என்று பலருக்கு ஆவல் தொற்றிக் கொண்டுள்ளது. அவர்களைப் போலவே உங்களுக்கும் தலயை தூக்கு துரையாக பார்க்கவேண்டும் என்ற ஆசை இருக்கும்தானே.. தல தூக்கு துரையாக வாழ்ந்த கொடுவிலார்பட்டி எப்படி இருக்கும் தெரியுமா? வாருங்கள் காணலாம்.
எங்குள்ளது
மதுரை மற்றும் தேனி மாவட்டங்களுக்கு இடையில் அமைந்துள்ளது இந்த கொடுவிளார்பட்டி. சரியாக சொல்லவேண்டும் என்றால் தேனி மாவட்டத்தின் அரண்மனைப்புதூர் எனும் ஊரிலிருந்து அம்பாசமுத்திரம் செல்லும் வழியில் அமைந்துள்ளது.
தூக்கு துரையாக தல
தல அஜித் குமார் தூக்கு துரையாக வாழ்ந்த கிராமம் பற்றி தெரிந்துகொள்ள யாருக்குதான் ஆர்வம் இருக்காது. அதிலும் நம்ம தேனி மாவட்டம் அனைவரும் விரும்பும் அழகிய மாவட்டம் ஆகும்.
இப்போதே செல்லவேண்டும்
குளுமையும் அழகும் சமமாக நிறைந்து காண்போரை கவரும் தமிழகத்தின் மாவட்டங்களில் தேனியும் முதன்மையானதாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு இடத்தில் தல அஜித் தன் குடும்பத்தோடு தூக்கு துரையாக வாழ்ந்தால் திரையில் பார்க்கும்போதே கண்ணுக்கு குளுமையும் இனிமையுமாக இருக்குமல்லவா.. திரையில் காணும்போதே இந்த இடத்துக்கு இப்போதே செல்லவேண்டும் போல இருக்கும்தானே..
எப்படி அடைவது
கொடுவிளார்பட்டி எனும் ஊரை அடைவது அவ்வளவு கடினமல்ல. தேனியிலிருந்து மிக அருகிலேயே இந்த ஊர் அமைந்துள்ளது.
தேனியிலிருந்து தேசிய நெடுஞ்சாலை எண் 85 வழியாக பயணித்து, அங்கிருந்து மாநில நெடுஞ்சாலை எண் 612ல் தொடர்ந்து சென்றால் 5 கிமீ தூரத்தில் கொடுவிளார்பட்டியை அடையமுடியும்.
அருகிலுள்ள அழகிய கிராமங்கள்
இந்த ஊரின் அருகிலேயே அழகிய கிராமங்கள் பல இருக்கின்றன. அவை சுற்றுலாத் தளமாக பிரபலமடையாவிட்டாலும், காண்பதற்கு அழகானதாகவும் சுவாரசியமானதாகவும் இருப்பதால் மக்கள் அநேக நேரங்களில் வந்துசெல்கிறார்கள்.
திரைப்படத்தில் வரும் காட்சிகள்
திரைப்படத்தில் வரும் முக்கியமான காட்சிகள் தேனி மாவட்டத்தின் அழகிய சுற்றுலாத் தளங்களில் எடுக்கப்பட்டிருக்கின்றன. தேனி மாவட்டத்தில் இருக்கும் சுற்றுலாத் தளங்கள் தென் தமிழகத்தின் மக்களால் மிகவும் விரும்பப்படுவது. அதிலும் போடி மெட்டு, சுருளி, சின்னமனூர், குச்சனூர், மாவூது ஆகிய இடங்களுக்கு மக்கள் அதிக அளவில் வருகைத் தருகிறார்கள்.
பாசமும் போராட்டமும்
தேனி மாவட்டம் பெயரளவில் தனி மாவட்டமாக இருந்தாலும் மதுரையைச் சுற்றியுள்ளவர்கள் வாழும் மாவட்டம்தான். மதுரை மைந்தர்களுக்கே உரிய பாசமும், கோபமும் எல்லாரிடமும் காணப்படும். அதை நாம் திரைப்படத்தில் தூக்கு துரை கதாபாத்திரத்தின் வடிவில் காணமுடியும். படத்தின் காட்சிகளைக் காணும்போதே இந்த இடத்துக்கு சென்று பார்க்கலாமே என்ற எண்ணம் மனதில் தோன்றும்.
வைகை அணை
வைகை அணை மதுரைக்கு உரியதாக கருதப்பட்டாலும், அது தேனி மாவட்டத்தில் ஒரு பகுதியில் அமைந்துள்ள அணையாகும். மேலமங்களம் எனும் ஊரின் பெயரால் அழைக்கப்படும் அந்த இடத்தில் வைகை அணை கட்டப்பட்டுள்ளது. வைகை ஆற்றில் நீர் வருவது மிக அரிதாகிவிட்ட நிலையிலும் மன்னர்கள் காலத்தில் புகழ்பெற்ற வைகை இன்றும் அதன் பெயரை தக்கவைத்துள்ளது.
அழகிய சுற்றுலா
விஸ்வாசம் படத்தில் வரும் என நம்பப்படும் அழகான மற்ற சுற்றுலாத் தளங்களைப் பற்றியும் இந்த பதிவில் காண்போமா?
போடி மெட்டு
கடல் மட்டத்தில் இருந்து 4500 அடி உயரத்தில் இருக்கும் இந்த மலை வாழிடம், மிகவும் அழகான ஒரு பிரதேசமாகும்.
இது போடி நாயக்கனூரிலிருந்து 26 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
சின்ன சுருளி
தேனியில் இருந்து 55 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த சின்ன சுருளி அணை. இது கோம்பை தொழு எனும் பெயரில் அமைந்த கிராமத்தின் அருகாமையில் இருக்கிறது. மேக மலையிலிருந்து இந்த அருவி வழிந்தோடி வருகிறது.
சின்னமனூர்
தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு ஊர் இதுவாகும். இது இந்த பகுதியில் இருக்கும் அநேக கிராமங்களுக்கு வர்த்தக மையமாக விளங்குகிறது. முல்லை ஆற்றில் அமைந்துள்ள சிவகாமி கோவில் சிறப்பானதாகும்.
குச்சனூர் சனி கோவில்
சனி பகவானுக்கு என்று தனியாக கோவில் அமைந்துள்ளது இந்தியாவிலேயே ஏன் இந்த உலகத்திலேயே இதுதான் முதல் இடமாகும். தேனியில் இருந்து 27 கிமீ தூரத்தில் தென்பகுதியில் அமைந்துள்ளது இந்த கோவில்.
மாவூது
வருசநாடு எனும் பகுதியில் அமைந்துள்ளது மாவூது எனும் அழகிய கிராமம். இந்த கிராமத்தின் முக்கிய அம்சமே இங்குள்ள வேலப்பர் கோவில்தான். இங்கு அதிக அளவில் மாமரங்கள் இருக்கின்றன அவை இந்த இடத்தை சிறப்பானதாக காட்சியளிக்கச் செய்கிறது.
புலி அருவி
தேனியிலிருந்து மூணாறு செல்லும் வழியில் போடிக்கும் போடி மெட்டு எனும் பகுதிக்கும் இடையில் அமைந்துள்ள அழகிய அருவி தான் புலி அருவி ஆகும். தேனி செல்பவர்கள் தவறாமல் காணவேண்டிய இடமாகும்.