மகாலட்சுமி அன்னை செல்வம், வளங்கள் மற்றும் மகிழ்ச்சியின் அடையாளம் ஆவார். அன்னை மகாலட்சுமியை வழிபட்டால் சகல செல்வமும் கிடைக்கும், வாழ்க்கை சுபிட்சங்கள் நிறைந்திருக்கும். அன்னை மகாலட்சுமியே வழி மொழிந்த இந்த வரலட்சுமி விரதம் மிகவும் புனிதமான ஒரு நன்னாளாகும். இந்த புனித நாளன்று தேவியை வழிபடும் அனைவருக்கும் தேவியின் ஆசீர்வாதம் பரிபூரணமாக கிடைக்கின்றது. இந்த விரதத்தை யார் ஒருவர் முறையாக கடைப்பிடிக்கின்றாரோ அவர் அன்னை மகாலட்சுமியின் அன்புக்கு உரித்தானவர்களாக மாறுகிறார்கள்.
ஆம்! இதை விட வேறு என்ன வேண்டும், அன்னையின் அன்பு கிடைத்துவிட்டால் அனைத்துமே இவ்வுலகில் சாத்தியம் இல்லையா? இந்த புனித நாள் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா முழுவதும் மிக விசேஷமாக கடைபிடிக்கப்படுகின்றது. இந்த நன்னாளன்று தமிழ்நாட்டின் ஏக கோவில்களில் சிறப்பு பூஜைகளும் பிரார்தனைகளும் செய்யப்படுகின்றன. வரலட்சுமி விரதத்தின் சிறப்புகளைப் பற்றியும், அந்நாளில் செல்ல வேண்டிய கோவில்களைப் பற்றியும் இக்கட்டுரையில் காண்போம்!
வரலட்சுமி நோன்பு உருவான கதை
புராணத்தின் படி ஒரு முறை பார்வதி தேவி சிவபெருமானிடம் பெண்களுக்கு நன்மை பயக்கும் ஒரு விரதத்தைப் பற்றி கேட்டுள்ளார். சிவபெருமான் பெண்களுக்கு மிகவும் பயனுள்ள வரலட்சுமி விரதத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் சாருமதியின் கதையை கூறியுள்ளார். சாருமதியின் கணவர் மற்றும் குடும்பத்தினரின் பக்தியில் மகிழ்ந்த லட்சுமிதேவி அவரது கனவில் தோன்றி வரலட்சுமி விரதத்தை செய்யும்படி கூறினாராம். விரதத்தில் நடைமுறைகளை அவளுக்கு விளக்கினார். பக்தியுள்ள சாருமதி தனது அண்டை வீட்டாரையும் நண்பர்களையும் உறவினர்களையும் அழைத்து லட்சுமி தேவியின் கட்டளைப்படி வரலட்சுமி பூஜையை நடத்தினார். பூஜை முடிந்ததும் பூஜை கலந்து கொண்ட மக்கள் அனைவரும் செல்வ செழிப்புடன் இருக்க லட்சுமி தேவி அருள் பாலித்தார் என்பது புராணம்.
வரலட்சுமி விரதத்தின் முக்கியத்துவம்
வரலட்சுமி விரதம் என அழைக்கப்படும் இவ்விரதத்தை விவாகமாகி சுமங்கலியாக வாழும் சுமங்கலிப் பெண்களும், கன்னிப் பெண்களும் மகாவிஷ்ணுவின் தேவியான லட்சுமி தேவியை குறித்து அனுஷ்டிக்கும் மிகச் சிறப்பான விரதமாகும்.
வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் நீடிப்பதோடு செல்வம், தைரியம், வெற்றி, அரசு பதவி, குழந்தைப் பேறு, கல்வி உள்ளிட்ட எல்லா வளங்களும் வந்து சேரும். அன்னை மகாலஷ்மியை மகிழ்விக்கும் இந்த விரதமிருக்கும் பெண்மணி இவ்வுலகில் சகல போகங்களையும் பெற்று அனுபவித்தபின் வைகுந்
தம் சேருவார் என்பது நம்பிக்கை. கன்னிப் பெண்கள் இந்த விரதமிருந்து பூஜையில் கலந்து கொண்டால் நல்ல வரன் அமைந்து விரைவில் திருமணமாகும்.
வரலட்சுமி விரதம் 2022
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத பௌர்ணமிக்கு முன்னே வரும் வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதமாக அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, ஆகஸ்ட் 5 2022 அன்று இந்த ஆண்டுக்கான வரலட்சுமி விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். முந்தைய நாளே வீட்டை சுத்தம் செய்து தீப தூப ஆராதனைகள் செய்து மகாலட்சுமி அன்னையை வீட்டில் எழுந்தருள செய்ய வேண்டும். முன்னதாக கலசத்திற்குள் பச்சரிசி நிரப்பி அதனுள் மஞ்சள் கிழங்கு, எலுமிச்சை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய், பச்சை கற்பூரம், தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் போட்டு, அதன் மேலே மஞ்சள் பூசிய தேங்காயை வைத்து அன்னையின் முக வடிவம் வரைந்தோ அல்லது ஏற்கனேவே கடைகளில் விற்கும் முக அமைப்பினை வாங்கி வைத்தோ, ஆடை ஆபரணங்கள் போட்டு அன்னையை ஜோடிக்க வேண்டும்.
பின்னர், அன்னைக்கு பிடித்த இனிப்பு வகைகள், பழங்கள் முதலியவற்றை நெய்வேத்தியங்களாக வைத்து, வாசனை மலர்களால் அன்னைக்கு அர்ச்சனை செய்து, எல்லோர் நலனுக்காகவும் பிரார்த்தனை செய்து நோன்பு கயிற்றை கையில் கட்டிக்கொள்ள வேண்டும். பூஜை செய்வதற்கான நேரம் காலை 4.45 முதல் 5.45 வரை மற்றும் காலை 9.15 முதல் 10.15 வரையிலும் பூஜை செய்வதற்கான நல்ல நேரமாகும். இவ்வாறு பூஜை செய்தால் மகாலட்சுமி தயார் நிச்சயம் உங்கள் வீட்டில் எழுந்தருளி உங்களுக்கு அருள்பாலிப்பாள்.
வரலட்சுமி விரதத்தன்று தரிசிக்க வேண்டிய கோயில்கள்
தமிழ்நாடு அற்புதமான கோயில்களால் நிரம்பிய ஒரு வியக்கத்தக்க மாநிலமாகும். சிவன், விஷ்ணு, முருகர், பிள்ளையார், அம்மன் என அனைத்து தெய்வங்களுக்கும் பல பிரசித்திப் பெற்ற கோயில்கள் உண்டு. அதே போல, மகாலட்சுமி அன்னைக்கும் தமிழ்நாட்டில் பல கோயில்கள் உண்டு. அவை யாவும் வரலட்சுமி விரதத்தன்று விசேஷமாக உள்ளது. அன்றைய தினத்தில் நீங்கள் கீழ்க்கண்ட கோவில்களுக்கு சென்று வந்தால் சிறப்பும் நன்மையும் வந்து சேரும்.
ஸ்ரீபுரம் மகாலட்சுமி கோயில், வேலூர்
வேலூரில் உள்ள திருமலைக்கொடியில் அமைந்துள்ள ஸ்ரீபுரம் பொற்கோயில் மகாலட்சுமி தாயாருக்கு அர்பணிக்கப்பட்ட கோயிலாகும். முழுவதும் தங்கத்தால் ஆன இக்கோயில், ஒரு அழகிய சோலைக்குள் அமைந்து இருக்கிறது. வரலட்சுமி விரதத்தன்று ஸ்ரீ லக்ஷ்மி நாராயணியை வழிபட்டு அன்னையின் ஆசீர்வாதத்தை பெறுவது மிகவும் சிறப்பாகும்.
மகாலட்சுமி அம்மன் கோயில், கரூர்
விஜயநகரப் பேரரசர் ஸ்ரீ கிருஷ்ணதேவராயரால் காவிரி ஆற்றங்கரையில் கட்டப்பட்ட இக்கோயில் 800 ஆண்டுகள் பழமையானது. வரலட்சுமி விரதத்தன்று இக்கோயிலில் விசேஷப் பூஜைகள் செய்யப்படுகின்றன.
அஷ்டலட்சுமி கோயில், சென்னை
பெசன்ட் நகர் கடற்கரையிலிருந்து சில மீட்டர் தொலைவில் இந்த அழகிய அஷ்டலட்சுமி கோயில் அமைந்துள்ளது. செல்வம் மற்றும் அறிவின் தெய்வமான அஷ்டலக்ஷ்மி இங்கு வசிக்கிறாள், மேலும் கோயிலுக்குச் செல்லும் அனைவருக்கும் தூய்மையான ஆன்மாவுடன் பிரார்த்தனை செய்ய ஆசீர்வதிக்கிறாள்.
சுந்தர மகாலட்சுமி கோயில், காஞ்சிபுரம்
செங்கல்பட்டில் இருந்து 15 கிமீ தொலைவில் உள்ள படாலம் கிராமத்தில் அமைந்துள்ள பழமையான சுந்தர மகாலட்சுமி கோவில், லட்சுமி தேவியின் அனைத்து 64 வடிவங்களுக்கும் தாயாக இருப்பதாகவும், ஒவ்வொரு வடிவமும் செல்வம், நல்வாழ்வு மற்றும் பொக்கிஷங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறப்படுகிறது
மேலும் இரத்தின மங்களம் லட்சுமி குபேரர் கோயில், திருவள்ளூர் மகாலட்சுமி கோயில், சென்னை மகாலட்சுமி கணபதி கோயில், படியநல்லூர் மகாலட்சுமி கோயில், காட்ராம்பாக்கம் ஸ்ரீ மகாலட்சுமி கோயில், சென்னை ஸ்ரீ வரசித்தி விநாயகர் மகாலட்சுமி கோயில், தச்சூர் சுயம்பு துர்கா லட்சுமி மகாலட்சுமி கோயில் ஆகியவையும் வரலட்சுமி விரதத்தன்று மிகவும் விசேஷமாக இருக்கிறது. அன்னைக்கு உகந்த இந்த நன்னாளில் தேவியை வழிபட்டு ஆசி பெற்றிடுங்கள்!