சென்னைக்கு அருகில் இப்படியொரு அழகிய இடமா என்று இந்த இடம் நம்மை வியக்க வைக்கிறது. எங்கு பார்த்தாலும் பசுமை, அடர்ந்த வனாந்திரம், பச்சை நிற அழகிய தெளிவான நீர், கூழாங்கற்கள் பாதை என இந்த இடம் பார்ப்பதற்க்கு ஏதோ நாம் அந்தமானில் இருப்பது போன்ற ஒரு உணர்வை தருகிறது. ஆனால் இந்த இடம் சென்னையில் இருந்து வெறும் 3 மணி நேர பயண தூரத்தில் சென்னை - கடப்பா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து ஒரு நாள் ட்ரிப் அல்லது பிக்னிக் செல்ல இது சரியான சாய்ஸ் ஆகும். இந்த இடத்திற்கு ஒரு முறை சென்று வந்ததும் மீண்டும் மீண்டும் இங்கேயே செல்ல திட்டமிடுவீர்கள். இந்த இடத்தின் சிறப்பம்சங்கள் என்ன? எப்படி செல்வது? இங்கே என்னவெல்லாம் செய்யலாம் என்பது குறித்து கீழே பார்க்கலாம்!
சென்னையில் ஒரு அந்தமான்
சென்னை - கடப்பா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த மாமண்டூர் காடுகளை இயற்கை அன்னை மிகுதியாக ஆசீர்வதித்து இருக்கிறாள் என்று தான் சொல்ல வேண்டும். கிழக்கு தொடர்ச்சி மலைகளின் அரிய மரங்கள், தாவரங்கள், மூங்கில் காடுகள், பச்சை நிற தெளிந்த நீர், அழகான பாதைகள் என முழு இடமும் சொர்க்கத்தில் இருந்து நழுவி விழுந்த ஒரு சிறு துண்டு போல காட்சியளிக்கிறது. முற்றிலும் நகர வாழ்க்கையின் பரபரப்பான சூழலில் சுழன்று கொண்டிருக்கும் சென்னை நகர வாசிகளுக்கு இந்த இடம் ஒரு வரப்பிரசாதம் தான்.
இந்த அழகிய வனாந்திரம் எங்கே அமைந்துள்ளது?
கிழக்கு தொடர்ச்சி மலைகளின் காடுகள் மற்றும் பள்ளத்தாக்குகளால் சூழப்பட்ட மாமண்டூர் காட்டு கிராமம் சென்னை - கடப்பா நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து 160 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது திருப்பதியிலிருந்து 25 கிமீ தொலைவிலும், , கடப்பாவிலிருந்து 100 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. நீங்கள் திருப்பதி தரிசனம் முடித்து விட்டு இந்த அழகிய இடத்திற்கு சென்று வரலாம். 18 கிமீ நீளமுள்ள இரண்டு காட்டுச் சாலைகளால் இது புனித நகரமான "திருமலை" யுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
மாமண்டூர் காடுகளை எப்படி சுற்றிப் பார்ப்பது?
இந்த வசீகரமான காடுகள் ஆந்திர பிரதேச வனத்துறையால் நன்கு பராமரிக்கப்பட்டு பாதுக்காக்கப்பட்டு வருகிறது. அதனால் நீங்கள் பாதுகாப்பு குறித்த எந்த கவலையும் பட வேண்டியது இல்லை. காட்டுப்பகுதியை அடைந்த உடன் உங்கள் வாகனங்களை பார்க் செய்து விட்டு என்ட்ரி டிக்கெட் (entry ticket) வாங்கி கொண்டு நீங்கள் காடுகளை ஆராய ஆரம்பிக்கலாம். நீங்கள் நடக்க ஆரம்பித்த கொஞ்ச தூரத்திலேயே குழந்தைகள் விளையாட்டு பகுதியை பார்ப்பீர்கள். நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் சென்றால் அந்த இடத்தில் விளையாட அனுமதியுங்கள்.
மனதை கொள்ளையடிக்கும் அழகிய காட்சிகள்
அங்கிருந்து சென்ற உடனே சிறு சிறு ஓடைகள், குளங்கள், கூழாங்கற்கள் பாதை, மூங்கில் மரங்கள் என வழி நெடுக மிகவும் அழகாக இருக்கிறது. பின்னர் நீங்கள் ஒரு ரிவர் க்ராஸிங் (river crossing) செய்ய வேண்டும். பாதி ஆற்றை கடந்த உடன் அங்கேயே அமர்ந்து அந்த இடத்தை சற்று வேடிக்கை பாருங்களேன். உங்களின் மனதில் உள்ள பாரங்கள் யாவும் குறைந்து மனசு லேசாகுவதை நீங்களே உணருவீர்கள்.
அங்கிருந்து சற்று தூரம் நடக்க வேண்டும், வழி சற்று கரடு முரடாக இருப்பதால் நீங்கள் கவனமாக நடக்க வேண்டியது அவசியம். பின்னர் நீங்கள் அந்த அரிய காட்சியை அதாவது பச்சை நிற, தெளிவான, அழகிய, சுத்தமான நீரை நீங்கள் காணலாம். ஆஹா! என்ன அழகு இங்கேயே இருந்து விடலாம் போல இருக்கிறதே என்று நீங்கள் சொல்லுவீர்கள். அந்த அளவுக்கு அந்த இடம் ரம்மியமாக இருக்கிறது மக்களே! நிச்சயம் அங்கு குளிக்க மறக்காதீர்கள்!
நீங்கள் அங்கே என்னவெல்லாம் செய்யலாம்
நீங்கள் அங்கே தனியாகவும், குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் செல்லலாம். அந்த இடத்தில் தனியார் நிறுவனங்கள் கொடுக்கும் பேக்கேஜ்களும், ஆந்திர பிரதேச வனத்துறையால் வழங்கப்படும் பேக்கேஜ்களும் உள்ளன. உங்கள் வசதிக்கேற்ப நீங்கள் அதை பெற்றுக் கொள்ளலாம் அல்லது தனியாகவும் செல்லலாம். நீங்கள் அங்கே கீழ்க்கண்டவற்றை செய்து மகிழலாம்.o நீச்சல்
o ட்ரெக்கிங்
o ஸ்டார் கேசிங்
o பர்ட் வாட்சிங்
o சைக்கிளிங்
o போட்டோகிராபி
o நேச்சர் வாக்கிங்
o ஜங்கிள் சஃபாரி
o கேம்பிங்
எப்படி இங்கே செல்வது
இந்த இடத்தை பொது போக்குவரத்து மூலம் அணுகுவது அவ்வளவு சுலபம் இல்லை. நீங்கள் சொந்த கார் அல்லது வேன் மூலம் வருவது நல்லது. இல்லையென்றால் திருப்பதியில் இருந்து கேப் மூலம் இங்கு எளிதில் வரலாம். ஒரு நபருக்கான என்ட்ரி டிக்கெட் ரூ. 3௦ ஆகும், உங்களது பைக்குக்கு ரூ. 1௦, கார் ரூ. 2௦ மற்றும் வேன் ரூ. 3௦ என நுழைவுக்கட்டணமாக வசூலிக்கப்படும்.
எது எப்படி இருந்தாலும், இந்த இடம் நீங்கள் கண்டிப்பாக மிஸ் பண்ணக்கூடாத ஒரு ஸ்பாட் ஆகும். ஒரு முறை சென்று வந்தாலும் திரும்ப திரும்ப செல்ல வேண்டும் என்ற எண்ணம் உங்களை தொற்றிக் கொள்ளும் பயணிகளே!