நகரின் சலசலப்பில் இருந்து விலகி, படகு மூலமாக மட்டுமே அணுகக்கூடிய இந்த குகைகள் நமக்கு ஒரு வித ஆழமான அமைதியையும் வரலாற்று உணர்வையும் தூண்டுகிறது. நீங்கள் வரலாற்று ஆர்வலராக இருந்தாலும், கலை மற்றும் கட்டிடக்கலை ஆர்வலராக இருந்தாலும் அல்லது ஓய்வு நேர பயணத்திற்காக ஒரு சிறு இடைவெளியை தேடினாலும் சரி எல்லாவற்றுக்குமான இடமாக இந்த எலிஃபெண்டா குகைகள் கலை மற்றும் பாரம்பரியத்தின் கண்கவர் கலவையாக திகழ்கிறது.
யாரு உருவாக்கியது என்பது தெரியாது
இந்த குகைகளை யார் கட்டினார்கள் அல்லது எப்போது கட்டினார்கள் என்பது யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை, ஆனால் இந்த பல நூற்றாண்டு கால பழமையான குகைகள் இந்தியாவில் இருக்கும் மிகச்சிறந்த பாறைக் கட்டிடக்கலைகளில் ஒன்றாகும் என்பதில் சந்தேகமில்லை. 1987 ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்ட எலிஃபெண்டா குகைகளில் உள்ள வரலாற்று மற்றும் ஆன்மீக அற்புதங்களை ஆராய்வதற்காக பல சுற்றுலாப் பயணிகள் ஆண்டுதோறும் இங்கு வருகை தருகின்றனர்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாகிய வரலாறு
எலிஃபெண்டா குகைகளின் ஆரம்பகால வரலாறு தெரியவில்லை, தீவில் உள்ள எலிபெண்டா குகைகள் சில்ஹார மன்னர்கள் காலத்தைச் சேர்ந்தவை என்று நம்பப்படுகிறது. இருப்பினும், அதை உறுதிப்படுத்தும் உறுதியான சான்றுகள் எதுவும் இல்லை, அதன் உருவாக்கத்துடன் தொடர்புடைய பல அனுமானங்கள் உள்ளன. பல வரலாற்றாசிரியர்கள் அந்த இடத்தில் உள்ள கோயில்கள் மற்றும் குகைகள் 5 ஆம் நூற்றாண்டு மற்றும் 9 ஆம் நூற்றாண்டுக்கு இடையில் உருவாக்கப்பட்டுள்ளதாக நம்புகின்றனர்.
பல்வேறு மன்னர்களின் விஜயம்
நவீன யுகம் வரை பல நூற்றாண்டுகளாக இந்தப் பகுதியைக் கட்டுப்படுத்திய எண்ணற்ற ஆட்சியாளர்களின் நிர்வாகத்தின் கீழ் இந்த குகைகள் வந்ததாக நம்பப்படுகிறது. இந்த ஆட்சியாளர்கள் கொங்கனின் மௌரியர்கள், பாதாமியின் சாளுக்கியர்கள், சிலஹாரர்கள், திரிகூடகர்கள், ராஷ்டிரகூடர்கள், தேவகிரியின் யாதவர்கள், கல்யாணி சாளுக்கியர்கள், குஜராத்தின் ஷாஹி வம்சம், மராட்டியர்கள், போர்த்துகீசியர்கள் மற்றும் ஆங்கிலேயர்களும் இதில் அடங்குவர்.
பிரமிக்கவைக்கும் நுட்பமான வடிவமைப்பு
சுமார் 60000 சதுர அடி பரப்பளவு கொண்ட முழு குகைக் கோயில் வளாகப் பகுதியும் நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்தும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இந்த குகைகள் மத்திய அறை, இரண்டு பக்கவாட்டு அறைகள், பல துணை ஆலயங்கள் மற்றும் முற்றங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும், கோவில் வளாகத்திற்கு மூன்று வழிகள் உள்ளன. முழு இடமும் திடமான இயற்கை பாறையில் இருந்து சிக்கலான செதுக்கப்பட்ட சிலைகளின் சிற்பங்களுடன் கட்டப்பட்டுள்ளது.

எலிஃபெண்டா குகைகளின் சிறப்பம்சங்கள்
1. எலிஃபெண்டா குகைகள் இந்திய கட்டிடக்கலையின் ஒரு உருவகமாகும், இது அதன் ஒவ்வொரு மூலையிலும் ஆழமாக வேரூன்றிய இந்திய புராணங்களை சித்தரிக்கிறது.
2. மூன்று தலைகள் கொண்ட திரிமூர்த்தியான சிவன் மற்றும் கங்கை நதியின் உருவமான கங்காதர் காட்சி, சிவபெருமான் மற்றும் பார்வதியின் உருவமான அர்த்தநாரீஸ்வர் ஆகியவை இங்கு உள்ள மூன்று முதன்மையான ஈர்ப்புகளாகும்.
3. மேலும், சுமார் 11 அடி உயரமும் 13 அடி அகலமும் கொண்ட நடராஜர் சிற்பமும் இங்குள்ள முக்கிய ஈர்ப்பாகும்.
4. எலிபெண்டா குகைகளில் உள்ள முக்கிய குகையில் ராவணன் கைலாச மலையை எழுப்பும் படம் உள்ளது.
5. மேற்கில், அந்தகாசுரவதமூர்த்தி மற்றும் நடராஜர் மற்றும் கிழக்கில் யோகீஸ்வரர் மற்றும் ராவணன் அனுகிரஹ மூர்த்திகளின் சிற்பங்களையும் நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டும்.
6. அனைத்து குகைகளிலிருந்தும் மிக அழகான குகை ஒன்று பௌத்த கட்டிடக்கலையின் பெருமையை காட்டும் வகையில் செதுக்கப்பட்டுள்ளது.
7. பழங்கால இந்திய கட்டிடக்கலையின் உண்மையான சிறப்பை ஆராயும் வகையில் ஏழு குகைகள் உள்ளன. இங்குள்ள குகைகளின் இரண்டு பெரிய குழுக்களில் செதுக்கப்பட்ட குகைகளின் மிக முக்கிய வெளிப்பாட்டைக் காணலாம்.
8. முதல் குகை இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்ட வேலைப்பாடுகளைக் குறிக்கிறது, அங்கு நீங்கள் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பாறையில் வெட்டப்பட்ட கல் சிற்பங்களைக் காணலாம்.

எலிபெண்டா குகைகள் பற்றிய இதர தகவல்கள்
மும்பையின் எந்த இடத்திலிருந்தும், சர்ச்கேட் அல்லது சிஎஸ்டி நிலையத்திற்கு உள்ளூர் ரயிலில் செல்லலாம். அங்கிருந்து கேட்வே ஆஃப் இந்தியாவை அடைந்ததும், எலிஃபெண்டா குகைகளுக்கு நீங்கள் ஒரு படகு ஒன்றை வாடகைக்கு எடுக்க வேண்டும். தீவிற்கான படகு சேவை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயங்குகிறது. நீங்கள் தேர்வு செய்யும் படகு வசதிக்கேற்ப படகு விலைகள் 130 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை இருக்கிறது. இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு 40 ரூபாயும் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு 250 ரூபாயும் நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
எனவே நீங்கள் மும்பையில் இருந்தாலோ, அல்லது பிறகு சென்றாலோ கட்டாயம் இந்த காலம் கடந்த வரலாற்று அதிசயத்தை நிச்சயம் பார்க்க தவறவிடாதீர்கள்.



Click it and Unblock the Notifications




