இந்தியா உலகிலேயே உயரமான சிலை, நீளமான பாலம், சாலைகள், கட்டிடங்கள் என உலகத்தர கட்டுமானங்களுடன் மிரட்டி வருகிறது. அந்த வரிசையில் இப்போது கூடுதலாக உலகின் மிக உயரமான ரயில்வே பாலமும் இந்தியாவில் தான் திறக்கப்படவிருக்கிறது.
1,178 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த பாலம் ஈபிள் கோபுரத்தை விட அதிக உயரத்தில் உள்ளது. செனாப் ஆற்றின் மீது விரைவில் திறக்கப்படவுள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலத்ததினால் ஜம்மு காஷ்மீருக்கு பெருமை சேர்க்கவிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். 120 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட செனாப் பாலம், 2024-ல் செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளது. அதனைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ!

உலகின் மிக உயரமான பாலம் என்ற பெருமையை தட்டிச்சென்ற செனாப்
ஜம்மு காஷ்மீரின் வெவ்வேறு பகுதிகளை இணைக்க கட்டப்பட்ட உலகின் மிக உயரமான ஒற்றை வளைவு ரயில் பாலம் இப்போது செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இதுவரை சீனாவின் குய்சோ மாகாணத்தில் பெபன்ஜியாங் ஆற்றின் மீது கட்டப்பட்ட நீர் மட்டத்திலிருந்து 275 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பாலமே உலகின் மிக உயரமான பாலமாக இருந்தது. ஆனால் இன்று முதல் அந்த பெருமை நம் நாட்டையே சேரும். ஏனெனில் செனாப் ஆற்றின் மீது கட்டப்பட்ட இந்த பாலம் நீர்மட்டத்தை விட 359 மீட்டர் உயரத்தில் கம்பீரமாக நிற்கப் போகிறது.
கத்ராவையும் பனிஹாலையும் இணைக்கும் பாலம்
35,000 கோடி மதிப்பிலான உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பின் (USBRL) ஒரு பகுதியாக ரியாசி மாவட்டத்தில் பக்கல் மற்றும் கவுரி இடையே வளைவுப் பாலமாக உலகின் மிக உயரமான பாலம் எழுப்பப்பட்டுள்ளது. 1,400 கோடி மதிப்பீட்டில் கத்ராவையும் பனிஹாலையும் இணைக்கும் பாலம் தேவையான அனைத்து சோதனைகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளது.

இருபது ஆண்டுகளாக நீடிக்கும் பணிகள்
2003 ஆம் ஆண்டில் திட்டத்திற்கு பச்சை சமிக்ஞை கிடைத்து இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு பாலம் முடிக்கத் தயாராக உள்ளது. 2004 ஆம் ஆண்டில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்ட போதிலும், மெது மெதுவாக இந்த இமாலய பணியை சிறப்பாக செய்துள்ளது. அங்குலம் அங்குலமாக, மகத்தான செனாப்பைக் கடந்தேன் என ரயில்வே அமைச்சகம் முடிக்கும் தருவாயில் இருக்கும் செனாப் பாலத்தின் படத்தை பகிர்ந்து ட்வீட் செய்துள்ளது.
கடினமான சவால்களையும் எதிர்த்து சாதித்த வல்லுனர்கள்
இப்பகுதியில் உள்ள கடினமான நிலப்பரப்பு மற்றும் வானிலை காரணமாக செனாப் பாலத்தின் கட்டுமானம் சவாலான பணியாக இருந்தது. இருப்பினும், மேம்பட்ட பொறியியல் மற்றும் கட்டுமான நுட்பங்களைப் பயன்படுத்தி, பாலம் இப்போது வெற்றிகரமாக கட்டப்பட்டு, முடிவடையும் தருவாயில் உள்ளது.

செனாப் பாலத்தில் வந்தே பாரத் மற்றும் மெட்ரோ ரயில் சேவை
இரண்டு மலைச் சரிவுகளுக்கு இடையில், 85-அடுக்குக் கோபுரத்தைப் போன்ற உயரத்தில் அமைந்துள்ள செனாப் பாலத்தில், வந்தே பாரத் ரயில்களை நீட்டிக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையே வந்தே மெட்ரோ ரயில்கள், இரண்டு நகரங்களுக்கு இடையேயான பயண நேரத்தை 3.5 மணி நேரமாக குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2024 இல் செயல்பாட்டுக்கு வரும் உலகின் மிக உயரமான பாலம்
தற்போது பாலத்தின் மீது தடம் பதிக்கும் பணி தொடங்கப்பட்டு, பயன்பாட்டுக்கு தயாராக உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். 120 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட செனாப் பாலம், 2024-ல் செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, இது உலகின் மிக உயரமான ரயில் பாலமாக உள்ளது. அதிக நில அதிர்வு செயல்பாடு, தீவிர வெப்பநிலை மற்றும் பலத்த காற்று ஆகியவற்றை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications





