இடுப்புக்கு கீழ் பச்சையாக இருக்கும் ஆடையும், இடுப்புக்கு மேல் வெண்ணிற ஆடையையும் அணிந்து கொண்டிருக்கும் பேரழகியை பார்க்க யாருக்கு தான் பிடிக்காது... ஹலோ என்னங்க பேரழகினு சொல்லிட்டு, பச்சை ஆடை, வெண்ணிற ஆடைனு, 'காம்பினேசன்' சரியில்லையே என நீங்கள் நினைப்பது எனக்கும் தெரியுது. இயற்கை என்ற பேரழகி, எப்போதும் தனக்கு பிடித்த இந்த இரண்டு விதமாக வண்ணங்களை ஆடையாக அணிவித்து, நம் கண்களுக்கு விருந்து அளிப்பாள்.
பருவ காலங்கள் மாறினால் மட்டுமே, தன் உடையை சிறிதாக மாற்றம் செய்வாள்... சரி சரி மொக்கை போடாதீங்க விஷயத்துக்கு வாங்கனு சொல்வது புரியது. 'ஸ்டெர்ஸ்' ஆக இருக்குனு சொல்லும் போது, நம்மில் பலர் தனிமையையும், ஒரு சிலர் நட்புகளுடன் செல்வதையும் விரும்புவோம் அப்படி தானே...!
தனிமையோ அல்லது குழுவோடவோ எப்படியிருந்தாலும் சரி... கீச் கீச் என்ற ஆரவாரத்துடன் பறவைகள் பறந்து செல்ல. நம்மை சுற்றி பச்சை பசேல் என இருக்கும் இடத்தின் ஊடே, வெண் முகில் சூழ வெள்ளியை உருக்கி விட்டார் போல ஓடும் நீரோடையில் ஒற்றை படகில் செல்லும் போது கிடைக்கும் ஆனந்தத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அதுபோன்ற இடங்கள் தமிழகத்தின் தென்கோடி மாவட்டமான கன்னியாகுமரியில் இருந்து வெறும் 99 கி.மீ., தொலைவில் இருக்கிறது என்றால் நம்புவீர்களா?
அப்படி சுமார் இரண்டரை மணி நேரம் பயணம் மேற்கொண்டால் அண்டை மாநிலமான வர்கலாவில் இந்த ஏழு இடங்களை சுற்றி பார்க்க மறக்காதீங்க...!
ஜனார்த்தன சுவாமி கோவில்
ஜனார்த்தன சுவாமி கோவில் என்பது விஷ்ணுவை நம்பும் அனைத்து தரப்பு மக்களும் பார்வையிடும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க இந்து கோவிலாகும். மிகவும் அமைதியான சூழலில் இருக்கும் அதன் வடிவமைப்புகள், வண்ணமயமான சுவரோவியங்கள், பயண விரும்பிகள் மற்றும் பக்தர்களை சுற்றி ஒருவித அமைதியான சூழலை உருவாக்கும்.
பக்தர்கள், கடவுளிடம் இருந்து ஆசீர்வாதங்களை பெற வருகை தருவதோடு மட்டுமின்றி, மதச் சடங்குகளையும் தடையின்றி செய்யலாம். கோவில் வளாகத்திற்குள் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளலாம்.

சிவகிரி மடம்
சிவகிரி மடம், ஸ்ரீ நாராயண குருவால் நிறுவப்பட்டது. அவர், தனது சொந்த வழிகளில் சமத்துவம், கல்வி மற்றும் சுய உதவி போன்றவற்றை மேம்படுத்தினார். இந்த மடம் அமைந்துள்ள பசுமையான மைதானத்தில், ஆண்டுதோறும் நடைபெறும் யாத்திரையின் போது, பல்வேறு நாடுகளில் இருந்தும் மக்கள் இங்கு வருகை தருவர். அவர்கள் ஸ்ரீ நாராயண குருவின் வாழ்க்கை மற்றும் போதனைகளை அறிவதோடு, தியானத்தில் ஈடுபடுவர்.
கப்பில் ஏரி
பச்சை மலைகள், தென்னந்தோப்புகளுக்கு மத்தியில் மறைந்திருக்கும் கப்பில் ஏரி, இயற்கையின் அமைதியை விரும்புவோருக்கு ஓர் அற்புதமான இடமாகும். தெளிவான நீரில் படகுப் பயணம் செய்யலாம். கரைக்கு அருகில் பறவைகளைப் பார்ப்பது அல்லது அதன் அருகாமையில் அமைதியை அனுபவிப்பது போன்றவற்றை யாராலும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அதை ஒரு முறை அனுபவித்து பாருங்கள் அப்போது புரியும் ஏன் என்று?

அஞ்செங்கோ கோட்டை
அரபிக்கடலைக் கண்டும் காணாத ஒரு கண்காணிப்பு கோபுரமாக அமைந்துள்ள அஞ்செங்கோ கோட்டை, வர்கலாவின் காலனித்துவ பாரம்பரியத்தை கொண்ட பல வரலாற்று எச்சங்களைக் கொண்டுள்ளது.
அஞ்செங்கோ 17 ஆம் நூற்றாண்டில் கிழக்கிந்திய நிறுவனத்தால் பிரிட்டிஷ் படைகளுக்கான ராணுவ இடமாக விளங்கள் நிறுவப்பட்டது. இன்று, இந்தச் சான்றுகளை நன்கு பாதுகாக்கப்பட்ட அரண்கள் வாயிலாக காணலாம். இடிந்து விழும் நிலையில் கட்டட இடிபாடுகள் மற்றும் வாகரை மக்களின் கடந்த கால வாழ்க்கையைப் பற்றிய பரந்துபட்ட அறிவை மட்டுமின்றி அழகியலையும் வாரி வழங்குகிறது.
பொன்னும்துருத்து தீவு
படகில் மட்டுமே சென்றடையும், பொன்னும்துருத்து தீவு, வர்கலாவின் உப்பங்கழிகளுக்கு(காயல்) இடையே அமைந்துள்ள ஒரு மறைக்கப்பட்ட சொர்க்கத்தை பிரதிபலிக்கிறது என்றே கூறலாம்.
அங்குள்ள சிவன் பார்வதி கோயிலைச் சுற்றிலும் உள்ள பனை போன்ற வெப்ப மண்டல மரங்களால் தீவு அமைதியான சூழலை தன்னுள் புதைத்து உள்ளதோடு, அங்கு வருபவர்களுக்கும் ஒரு விதமான நிசப்தமான உணர்வை உள்ளூற புதைத்துவிட்டு செல்லும்.
பார்வையாளர்கள், அமைதியாக படகில் படகை செலுத்தியவாறே செல்லலாம். சுற்றிலும் உள்ள பசுமையை ஆராயலாம் அல்லது இங்கு வழங்கப்படும் சடங்குகளை பார்ப்பதோடு, அவற்றையும் செய்யலாம். அவற்றின் வாயிலாக, பல நூற்றாண்டுகளாக, இந்த இடம் எவ்வளவு உண்மையானது என்பதை உணரலாம்.

வர்கலா பாறை
கம்பீரமாகவும், அழகாகவும் காட்சியளிக்கும் அரபிக் கடலுக்குள் தன் காலால் நடந்து சென்றவாறே இருக்கும் 'வர்கலா குன்று' காண, இந்தியா முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். குன்றின் மீது சிறிய உணவகங்கள் மற்றும் யோகா மையங்கள் உள்ளன. அங்கு நீங்கள் கடலில் பிடிக்கப்பட்ட ஃப்ரஸ் மீன்களால் செய்யப்பட்ட நல்ல கடல் உணவுகளை சுவையாக ருசித்தவாறே, கடல் அழகையும் ரசிக்க முடியும்.

வர்கலா பீச்
சந்தேகத்திற்கு இடமின்றி, 'வர்கலா கடற்கரை'சுற்றுலா பயண விரும்பிகளை ஈர்ப்பதோடு, அவர்களுக்கான இந்த இடம் மாணிக்கமாகும். ஏனெனில், இந்த தங்க கடற்கரைகளில், நீல நீர் மற்றும் உயரமான பாறைகளால் அமைந்துள்ள இவற்றின் அழகில் தன்னை காணவரும் சுற்றுலா பயணிகளை அழகியல் என்ற விருந்தோம்பலுடன் வரவேற்கிறது. இங்கு வரும் அனைவருக்கும் அழகான காட்சிகளை மட்டும் வாரி வழங்குகிறது இந்த தங்க கடற்கரை.
சூரிய குளியல், சர்ஃபிங் அல்லது பாராசெயிலிங் போன்ற நீர் விளையாட்டுகளை விளையாடவும், கடற்கரையில் ஓய்வு நேரத்தில் நடக்கலாம். அப்போது நீங்கள் உணருவீர்கள் இந்த கடற்கரை நகர்ப்புற சலசலப்புகளிலிருந்து ஒரு சிறந்த அமைதியும், உங்களின் இந்த பயணத்தையும் சிறப்பாக்கும் என்பதை...!
வர்கலா, அதன் அற்புதமான இயற்கை அழகு, வளமான கலாசாரம் மற்றும் பிற அம்சங்களுக்கிடையில், ஆன்மீக முக்கியத்துவம் கொண்டு, விசித்திரமான பயண அனுபவமாக மாற்றுகிறது.
வர்கலா கடற்கரைக்கு சென்று, அதன் கரையில் சூரியக் குளியலை அனுபவிக்கவும் அல்லது பழங்கால கோவில்கள், கோட்டைகள் அல்லது உப்பங்கழிகளுக்குச் சென்று சிறிது அமைதியை நிச்சயமாக பெற முடியும்.
வர்கலாவை சுற்றிய பகுதிகள் நிச்சயமாகப் பார்வையிட தகுந்தவை. எனவே, உங்கள் மூட்டைகளை தயார் செய்து, இந்த மான்சூன் நேரத்தில், உங்களுக்காகக் காத்திருக்கும் அற்புதமான இந்த இடங்களுக்கு சென்றால், அமைதி என்ற வரிகளின் மாயாஜால உலகத்துக்கு உங்களை நிச்சயமாக அழைத்து செல்லும்... வாங்க அந்த மாயாஜால உலகத்தை காண....!



Click it and Unblock the Notifications





