சஹயாத்திரி மலைத்தொடரில் உள்ள யமுனாச்சல மலைகளின் மீது இந்த அழகிய அமைதியான நகரமான துல்ஜாபூர் அமைந்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் உஸ்மானாபாத் மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 650 மீட்டர் உயரத்தில் இந்த நகரம் உள்ளது. சோலாபூரிலிருந்து ஔரங்காபாத் செல்லும் நெடுஞ்சாலையில் இதன் இருப்பிடம் உள்ளது.
துல்ஜாபூர் முன்னர் சிஞ்ச்பூர் என்று அழைக்கப்பட்டது. அதற்கு புளிய மரங்களின் ஊர் என்பது பொருளாகும். இந்த நகரத்தின் வரலாறு 12ம் நூற்றாண்டிலிருந்து துவங்குகிறது.
ஆன்மீக திருத்தலம்
ஒவ்வொரு வருடமும் அதிக எண்ணிக்கையில் புனித யாத்ரீகர்கள் வருகை தரும் ஆன்மீக திருத்தலமாகவும் இது திகழ்கிறது. துல்ஜாபூரிலுள்ள துல்ஜா பவானி கோயில் இந்த நகரின் பிரசித்தமான அடையாளமாகவும் ஆன்மீக யாத்ரீகர்கள் அதிக எண்ணிக்கையில் அடிக்கடி துல்ஜாபூருக்கு விஜயம் செய்ய காரணமாகவும் உள்ளது.
துல்ஜா பவானி தெய்வத்துக்காக எழுப்பப்பட்டுள்ள இந்த தொன்மையான கோயிலின் பெருமைக்காக சிஞ்ச்பூர் என்ற பழைய பெயர் மாறி துல்ஜாபூர் என்பதே இந்த நகரத்தின் பெயராக விளங்கி வருகிறது.
துல்ஜாபூரில் பயணிகள் என்னவெல்லாம் பார்க்கலாம்?
இந்தியாவின் தெய்வீகமான 51 சக்தி பீடங்களில் ஒன்றாக இந்த துல்ஜா பவானி கோயில் பிரசித்தி பெற்றுள்ளது. விஷ்ணு பஹவானின் தீவிர பக்தர் ஒருவரால் உருவாக்கப்பட்டுள்ள சந்த் கரீப் மடம் மற்றுமொரு முக்கியமான ஆன்மீக மையமாகும்.
இங்கு யோகா, தியானம் போன்றவற்றில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதைப்போன்றே சந்த் பாரதி புவ மடம் என்ற மற்றொரு ஆன்மீக மையமும் யாத்ரீகர்கள் பார்க்க வேண்டிய ஒரு அம்சமாகும்.
துல்ஜாபூருக்கு வெளியே இளைய துல்ஜாபூர் என்று அழைக்கப்படும் ‘தக்தே’ துல்ஜாபூர் உள்ளது. இங்கு துல்ஜா தெய்வத்தின் சிறிய சிலை ஒன்று உள்ளது.
பெரிய துல்ஜா பவானி தெய்வத்தை தரிசிக்கப்போகும் முன் இந்த சிறிய துல்ஜா பவானியை தரிசித்து விட்டு செல்வது அவசியம் என்பது ஐதீகமாக பின்பற்றப்படுகிறது. இந்த கோயிலிலுள்ள சிறிய துல்ஜா பவானி விக்கிரகம் ஒரு இஸ்லாமிய அன்பரால் கண்டறியப்பட்டது என்பது ஒரு அற்புதமான உண்மையாகும்.
ராம பகவானுக்காக உருவாக்கப்பட்டுள்ள காட் ஷீலா கோயில் ஒரு பாறையைக்குடைந்து உருவாக்கப்பட்டுள்ள கலைச்சின்னமாக இங்கு விளங்குகிறது.
இங்குள்ள புனித தீர்த்தக்குளங்களாக கல்லோல தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், கோமுகி தீர்த்தம் போன்றவை பிரசித்தி பெற்று விளங்குகின்றன. இந்த தீர்த்தக்குளங்களில் மூழ்கி எழுந்தால் யாத்ரீக பக்தர்களின் பாவங்கள் யாவும் தீரும் என்ற நம்பிக்கை உள்ளது.
பல பயணிகளும் யாத்ரீகர்களும் தங்கள் தீவினை பயன்கள் மற்றும் பாவங்களைத் தொலைக்க இவற்றில் கூட்டம் கூட்டமாக மூழ்கி எழுவதைக்காணலாம்.
இங்குள்ள சிந்தாமணி எனும் புனித ஸ்தலம் மிக அழகான ஆன்மிக மையமாகும். வட்டவடிவத்தில் கட்டப்பட்டுள்ள இது பல சிறிய கோயில்களை மதாங்கி, நரசிம்மா, கண்டோபா மற்றும் யாமினி தேவி போன்ற தெய்வங்களுக்காக பெற்றுள்ளது.
இவை தவிர அக்கல்கோட் மற்றும் பந்தர்பூர் போன்ற இடங்கள் துல்ஜாபூரை சுற்றியுள்ள முக்கிய சுற்றுலா அம்சங்களாகும்.
எப்போது எப்படி செல்லலாம்?
வருடம் முழுவதுமே துல்ஜாபூர் இனிமையான பருவநிலையை பெற்றதாக விளங்குகிறது. கோடைக்காலத்தில் வெப்பம் மிக அதிகமாக இருக்கும் என்பதால் அக்காலத்தில் துல்ஜாபூருக்கு விஜயம் செய்வது அவ்வளவு உசிதம் இல்லை. அறையை விட்டு வெளியே வரமுடியாத அளவுக்கு வெப்பம் பொசுக்குவதால் கோடையில் எல்லா சுற்றுலா செயல்பாடுகளும் ஸ்தம்பித்து நிற்கும் சூழல் உள்ளது.
எனவே கோடையில் துல்ஜாபூருக்கு பயணம் செய்வது முற்றிலும் தவிர்க்க வேண்டிய விஷமாகும். கடுமையான மழைப்பொழிவு இருந்தாலும் இங்கு மழைக்காலம் வெப்பத்திலிருந்து தப்பிக்கவும் குளுமைக்காகவும் இங்கு வரவேற்கப்படுகிறது.
இக்காலத்தில் துல்ஜாபூர் பகுதி பசுமையாகவும் அழகாகவும் காட்சியளிக்கின்றது. எனவே மழையை விரும்புவர்கள் துல்ஜாபூருக்கு மழைக்காலத்தில் துல்ஜாபூருக்கு செல்லலாம். இங்குள்ள கோயில்களை தரிசிப்பதற்கும் இதர சுற்றுலாத்தலங்களை சுற்றிப்பார்ப்பதற்கும் குளிர்காலமே ஏற்றதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நகரில் மிகக்கோலாகலமாக கொண்டாடப்படும் நவராத்திரி, குடி பட்வா மற்றும் மகர சங்கராந்தி பண்டிகைகளின் போது இங்கு விஜயம் செய்வதும் கொண்டாட்டங்களில் பங்கேற்பதும் ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.
ஆன்மீக யாத்ரீக ஸ்தலமான துல்ஜாபூர் விமானம், ரயில் மற்று சாலைப்போக்குவரத்து மூலம் எளிதில் சென்றடையும்படி உள்ளது. விமானப்போக்குவரத்துக்கு வசதியாக துல்ஜாபூருக்கு அருகில் புனே விமான நிலையம் உள்ளது.
அங்கிருந்து துல்ஜாபூர் வருவதற்கு வாடகை டாக்ஸிகள் மற்றும் வேன்கள் கிடைக்கின்றன. ரயில் மூலமாக செல்வதென்றால் துல்ஜாபூருக்கு அருகிலேயே சில கிலோ மீட்டர் தூரத்தில் சோலாப்பூர் ரயில் நிலையம் அமைந்துள்ளது.
சாலை மார்க்கமாக துல்ஜாபூர் வரவிரும்பினால் அருகிலுள்ள முக்கிய நகரங்களிலிருந்து ஏராளமான அரசுப்போக்குவரத்து பேருந்து வசதிகள் உள்ளன. இவை வசதியான அதே சமயம் சிக்கனமான போக்குவரத்து சேவையை அளிக்கின்றன.
துல்ஜா பவானி கோயில் எனும் சிறப்பான கோயில் மூலமாக இந்த சிறு நகரம் உலகம் முழுவதுமே அறியப்பட்டுள்ளது. தெய்வபக்தி நிரம்பிய எல்லா சுற்றுலா ஆர்வலர்களும், யாத்ரீகர்களும் கட்டாயம் ஒரு முறை விஜயம் செய்ய வேண்டிய ஆன்மீக திருத்தலம் இந்த துல்ஜாபூர் ஆகும்.
உங்களுக்கு தேவையானவற்றை எடுத்துக்கொண்டு ஒரு திடீர் விஜயம் செய்து பாருங்கள் துல்ஜாபூருக்கு, அப்புறம் உணர்வீர்கள் இந்த நகரம் உங்களுக்குள் ஏற்படுத்தும் புத்துணர்ச்சியை. அதுமட்டுமல்ல, யாவற்றுக்கும் அப்பாற்பட்ட ஒரு சக்தியின் இருப்பை உணரும் ஒரு சிலிர்ப்பான அனுபவத்துக்கும் உட்படுவீர்கள்.