லாங்குடி மலை, மஹாநதி டெல்டாவிலிருந்து சுமார் 90 கி.மீ. தொலைவில், ஜெய்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலையாகும். அழகிய நதியான கெலுவா, இம்மலைகளின் ஊடாகப் பாய்ந்து செல்கிறது.
இதன் கீழுள்ள சமவெளிகள் இம்மலைக்கு இயற்கை அழகை அள்ளி வழங்குகின்றன. இயற்கை அழகு நிறைந்த ஒரு இடமாக இருப்பதோடு, ஒடிஷாவின் மிக அரிய புத்தர் சிலையையும் கொண்டிருக்கும் பெருமையையும் கொண்டுள்ளது இம்மலை.
இந்த இடத்தை தோண்டியபோது வெட்டியெடுக்கப்பட்ட பாறைகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள 34 ஸ்தூபிகள் இந்த இடத்தின் மிக முக்கிய ஈர்ப்பாகத் திகழ்கின்றன.
இதனோடு, பாதி புன்னகை புரிந்தவாறு, ‘சமாதி முத்ரா’ உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் இருக்குமாறு காணப்படும் புத்தர் சிலைகள், லாங்குடி மலைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதில் பெரும் பங்காற்றுகின்றன.
இம்மலை இந்தியாவின் தொல்பொருளியல் சர்வேயின் கீழ் மிகவும் பாதுகாக்கப்பட்ட ஒரு இடமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இது தவிர, இந்துக் கடவுளர்களின் ஏராளமான அரிய வகை சிலைகளும் இங்கு காணப்படுகின்றன.
பாறைகளை செதுக்கி, சிரித்த முகத்துடனும், ஏராளமான ஆபரணங்களுடனும் தோற்றமளிக்கும் வகையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள ‘தாரா’ தேவியின் அழகிய சிலை வடிவம் வியந்து போற்றக்கூடிய கண்கவர் காட்சியாகும்.
ஒரு கையில் தாமரை மலரைப் பிடித்துள்ளவாறு பாறையில் செதுக்கப்பட்டுள்ள மற்றொரு சிலை வடிவமாகிய ‘ப்ரஜ்னபரமிதா’ சிலை, பழங்காலம் மற்றும் இடைநிலை காலங்களின் போது நிலவிய பெண் வழிபாட்டு மரபை குறிப்பிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.