லலித்கிரி, உதயகிரி மற்றும் ரத்னகிரி ஆகியவற்றோடு சேர்ந்து ‘புஷ்பா பல்கலைக்கழகம்’ அல்லது ‘வைர முக்கோணம்’ என்ற பெயரில், இதுவரை நிறுவப்பட்டுள்ள புத்த வளாகங்களுள் தொடக்க காலத்தில் தோன்றியதான ஒரு வளாகத்தின் உறைவிடமாகத் திகழ்கிறது.
உதயகிரியிலிருந்து சுமார் 27 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த இடத்தின் முக்கிய ஈர்ப்பாகத் திகழ்வது, புத்தரின் எலும்புகள் அடங்கிய நினைவுப் பெட்டகம் மற்றும் 1 ஆம் நூற்றாண்டு ஏடியைச் சேர்ந்த பழங்கால தொல்பொருளியல் அகழ்வாராய்ச்சிப் பொருட்கள் முதலிய அரிய பொக்கிஷங்களைக் கொண்டிருக்கும் அருங்காட்சியகமே ஆகும்.
வெவ்வேறு நிலைகளில் காணப்படும் ஏராளமான புத்தர் சிலைகள் மட்டுமல்லாது, இந்து மதத்தினரால் வழிபடப்படும் பல்வேறு ஆண் மற்றும் பெண் தெய்வங்களின் சிலைகள், தங்கம் மற்றும் வெள்ளியாலான புராதன ஆபரணங்கள் போன்றவையும் இங்கு காணப்படுகின்றன.
இவை அனைத்தும் தற்போது பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. மணற்பாறையினால் ஆன இந்த மலையின் உச்சிமுகடு, செங்கல்லாலான ஒரு விகாரத்தினுடைய சிதிலங்கள், நேர்த்திக்கடனாக அமைக்கப்பட்ட ஸ்தூபிகளின் தொகுதி, சையித்யா அரங்கம் மற்றும் பரந்து விரிந்த பச்சை நிற வயல்கள் கொண்ட பின்னணியில் அமைந்துள்ள புனரமைக்கப்பட்ட ஒரு கல் ஸ்தூபி ஆகியவற்றின் உறைவிடமாகத் திகழ்கிறது.
தற்போது இந்திய தொல்பொருளியல் சர்வேயின் பாதுகாப்பின் கீழ் உள்ள லலித்கிரியில், அபரிமிதமான சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்ட கோயில் ஒன்றின் சிதிலங்களின் குவியலைக் காண முடிகிறது.