1886ம் ஆண்டும் உருவாக்கப்பட்ட இந்த வார்தா மாவட்டம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ளது. தன் பெயரிலேயே உள்ள மாவட்டத்தின் தலைநகரமாக விளங்கும் வார்தா நகரமானது வார்தா ஆறு இப்பகுதியில் பாய்வதால் இப்பெயரை பெற்றுள்ளது. இந்த பகுதி 6310 ச.கி.மீ பரப்பளவில் பரந்து அமைந்துள்ளது.வார்தா பருத்தி தொழிலின் முக்கிய கேந்திரமாகவும் காந்திய சுதந்திர போராட்டக் காலத்தின் முக்கிய ஸ்தலமாகவும் பெயர் பெற்றுள்ளது.
வார்தாவின் வரலாற்றுப்பின்னணி
வரலாற்றுக்காலத்தில் ஒரு முக்கிய இடத்தை பெற்றுள்ள இந்த வார்தா பிரதேசம் சாளுக்கியர்கள், மௌரியர்கள், ராஜபுத்திரர்கள் மற்றும் சாதவாஹனர்கள் போன்ற அக்கால இந்தியாவின் கீர்த்தி பெற்ற ராஜ வம்சங்கள் ஆண்ட பூமியாகும்.
வார்தா முதலில் 1351ம் ஆண்டில் பாமனி அரசின் ஆளுகையில் இருந்தது. பின்னர் அது பாமனி அரசு சிதறுண்டபிறகு இமாத் ஷாஹி மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது. இறுதியில் முகலாய மன்னர்களின் ஊடுறுவலுக்கு பின்னர் இப்பிரதேசம் ஆங்கிலேயர் வசம் வந்தது.
மேலும் இந்த வார்தாவின் ஒரு முக்கியமான வரலாற்று அம்சமாக சுதந்திரப்போராட்ட காலத்தில் காந்திஜி இங்கு தன் ஆசிரமத்தை அமைத்திருந்ததைச் சொல்லலாம்.
வார்தா பற்றிய விசேஷ சுற்றுலா தகவல்கள்
வார்தா நகரம் இங்குள்ள புகழ் பெற்ற கோயில்களான கீதை மந்திர், லஷ்மி நாராயண மந்திர், மஹாகாளி மந்திர் மற்றும் கெல்ஸர் கோயில் போன்றவற்றுக்கு புகழ் பெற்று விளங்குகிறது.
மேலும், விஷ்வ ஷாந்தி ஸ்தூபி, பரம்தாம் ஆஷ்ரம் மற்றும் பாவ்னார் கிராமத்திலுள்ள பாபு குடி எனும் காந்திஜி ஆசிரமம், சங்க்ரஹாலாயா மியூசியம் போன்றவை வார்தாவிலுள்ள இதர முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும்.
வார்தாவின் சீதோஷ்ண நிலை சற்று வெப்பமாகவே எப்போதும் காணப்படுகிறது. கோடைக்காலத்தில் இன்னும் கடுமையாகவே வெப்பம் உள்ளது. இருப்பினும் இதற்கு மாற்றாக குளிர்காலம் இதமான காற்றுடனும் குளுமையுடனும் விளங்குகிறது. மழைக்காலத்திற்கு பிந்தைய காலமும் குளிர்காலமும் இப்பகுதிக்கு விஜயம் செய்ய ஏற்ற காலமாக உள்ளது.
நாக்பூரில் உள்ள பாபாசாஹேப் அம்பேத்கர் விமான நிலையம் வார்தாவுக்கு விமானம் மூலம் பயணம் செய்வதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. ரயில் சேவைகள் மூலமாகவும் இந்நகரம் முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது தவிர பேருந்து சேவைகளும் சிறப்பான முறையில் வார்தாவுக்கு முக்கிய நகரங்களிலிருந்து இயக்கப்படுகின்றன.