அம்ராவதி எனும் பெயருக்கு அமரத்துவம் பெற்ற தேவர்களின் நகரம் என்பது பொருளாகும். இது மஹராஷ்டிரா மாநிலத்தின் வட எல்லையின் மையத்தில் அமைந்துள்ளது.
தக்காண பீடபூமியில் அமைந்திருக்கும் இந்த நகரம் டப்பி சமவெளியில் இடம் பெற்றிருக்கிறது. இதன் கிழக்குப்பகுதியில் சில இடங்கள் வார்தா பள்ளத்தாக்கிலும் பரவியுள்ளன.
12,626 ச.கி.மீ பரப்பளவில் பரந்து காணப்படும் இந்த அம்ராவதி நகரம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் எழாவது அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகும். இது 343 மீட்டர் உயரத்தில் நாக்பூரிலிருந்து 156 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.
அம்ராவதி தன் பெயரை ‘உடும்ப்ராவதி’ எனும் சொல்லிலிருந்து பெற்றுள்ளது. இங்கு ஔடும்பர் மரங்கள் அதிகம் காணப்படுவதே இந்த பெயருக்கு காரணம். இது தவிர இங்குள்ள புராதனக்கோயிலாகிய அம்பாதேவியின் பெயரே அம்ராவதி எனும் பெயர் வரக்காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
இங்குள்ள ஆதிநாத் ரிஷபநாத் சிலைக்கு கீழே காணப்படும் கல்வெட்டுக்குறிப்புகள் அம்பாதேவி கோயிலின் புராதன வரலாற்றை அறிவிக்கின்றன. அசோக மன்னரின் ஆட்சியின்போது இந்த அம்ராவதி நகரம் மௌரிய சாம்ராஜ்யத்தின் முக்கிய நகரமாக இருந்துள்ளது.
1833ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியால் ஆக்கிரமிக்கப்படும் வரை இது நிஜாம் மன்னரின் ஆளுகையில் இருந்துள்ளது.
அம்ராவதி – ஒரு ஆன்மீக திருத்தலம்
ஆன்மீக நம்பிக்கைகள் இந்த அம்ராவதி நகரம் கடவுள்களின் மன்னர் எனப்படும் இந்திரனுக்கு சொந்தமானது என்று சொல்கின்றன. ஹிந்து புராணக்கதைகளின்படி, வேறொருவருடன் திருமணத்தை விரும்பாத ருக்மணி தேவியை கிருஷ்ணர் இங்குள்ள அம்பாதேவி கோயிலிலிருந்து காப்பாற்றி கவர்ந்து சென்றதாக சொல்லப்படுகிறது.
விதர்பா பிரதேசத்திலுள்ள இந்த அம்பாதேவி கோயில் புராதன இந்தியாவின் கோயிற்கலை சிற்பக்கலை உன்னதத்துக்கு சான்றாய் விளங்குகிறது. கிருஷ்ணர் ருக்மணி தேவியுடன் தப்பித்த சுரங்கப்பாதை இங்கிருப்பதாக ஐதீகமாக நம்பப்படுகிறது.
பழைய அம்ராவதி நகரத்தில் பால்கிருஷ்ணா கோயில், சோமேஷ்வர் கோயில், முரளிதர் மற்றும் பிரம்மச்சாரி மஹராஜ் கோயில் போன்ற முக்கியமான கோயில்கள் அமைந்துள்ளன.
அம்ராவதி நகரம் இங்கு விமரிசையாக கொண்டாடப்படும் பல பண்டிகைகளுக்கு பெயர் பெற்றுள்ளது. அவற்றுள் நவராத்திரி, தீபாவளி மற்றும் ஹோலி போன்றவை குறிப்பிடத்தக்கவை.
குறிப்பாக நவராத்திரி திருவிழா இங்கு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சாய் நகரிலுள்ள சாய் பக்திதாம் கோயில் மற்றும் ரஹத்காவ்ன் எனும் இடத்தில் உள்ள ஷீ ஸ்வாமி சமார்த் கோயில் போன்றவை வருடம் முழுக்க பல்லாயிரக்கணக்காண பக்தர்களால் விஜயம் செய்யப்படுகிறது.
முன்னரே குறிப்பிடபட்டுள்ள அம்பாதேவி எனும் புராதனக்கோயில் கிருஷ்ண பஹவானோடு தொடர்புடைய முக்கிய கோயிலாக பக்தர்களால் தரிசிக்கப்படுகிறது.
காட்டுயிர் மற்றும் இயற்கை ரசிகர்கள் சிக்கல்தரா காட்டுயிர் சரணாலயம் மற்றும் குகர்நால் தேசிய வனவிலங்குப்பூங்கா ஆகிய இரண்டுக்கும் விஜயம் செய்யலாம். இங்கு காட்டுப்பன்றி, சிறுத்தை, கரடி மற்றும் சாம்பார் மான் போன்றவை வசிக்கின்றன. மேல்காட் ‘புலிகள் சரணாலய’மும் பார்க்க வேண்டிய சுற்றுலாத்தலமாகும்.
இங்கு 40 வகையான பாலூட்டி விலங்குகளும், 250 வகையான பறவைகளும், 24 வகையான மீன் இனங்களும் 150 வகையான ஊர்வன விலங்குகளும் வசிக்கின்றன. பசுமை மற்றும் இயற்கை ரசிகர்களுக்கு பிடித்தமான பலவிதமான தாவர வகைகளும் இங்கு நிறைந்து காணப்படுகின்றன.
அம்ராவதி – பல தலைவர்கள் உதித்த இடம்
ஒரு முக்கியமான தொழிற்கேந்திரமான அம்ராவதி மஹராஷ்டிரா மாநிலத்தின் பண்பாடு, இலக்கியம் போன்றவற்றின் முக்கிய மையமாகவும் திகழ்கிறது. கோபால நீலகண்ட தண்டேகர் மற்றும் சுரேஷ் பட் ஆகியோர் இந்த பிரதேசத்தின் முக்கிய பிரபலங்களாக அறியப்படுகின்றனர்.
புரட்சி வீரரான பகத்சிங் தலைமறைவாய் இருந்தபோது இங்கு மூன்று நாட்கள் ஒளிந்திருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும், பல ஞானிகள், சமூக சிந்தனையாளர்கள், கலைஞர்கள் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் நகரமாகவும் முக்கியமான அரசியல்வாதிகள் உதித்த இடமாகவும் இந்த அமராவதி நகரம் புகழ்பெற்றுள்ளது. குடியரசுத்தலைவராக இருந்த திருமதி. பிரதிபா படீல் இந்த அம்ராவதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எப்படி எப்போது விஜயம் செய்யலாம்
வெப்பப்பிரதேச பருவநிலையை கொண்டுள்ள அம்ராவதி நகரம் வறண்ட வெப்பமான கோடையை பெற்றுள்ளது. மார்ச்சிலிருந்து ஜுன் வரை பொசுக்கும் 40°C வெப்பநிலையுடன் காணப்படும் இக்காலம் பயணிகளால் தவிர்க்கப்படுகிறது.
மழைக்காலத்தில் இது கணிசமான மழையைப்பெறுகிறது. இருப்பினும் அக்டோபர் மத்தியிலிருந்து மார்ச் வரை உள்ள குளிர்காலமே இங்கு விஜயம் செய்ய ஏற்ற பருவமாக கருதப்படுகிறது. இக்காலத்தில் பருவநிலை ஊர் சுற்றிப்பார்க்க ஏற்றபடி குளுமையான 12°C வெப்பநிலையுடன் காணப்படுகிறது.
மும்பை – கல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் அம்ராவதி நகரம் நல்ல சாலைப் போக்குவரத்தையும் மற்றும் ரயில், விமான வசதிகளையும் கொண்டுள்ளது.
மஹாராஷ்டிராவின் முக்கிய நகரங்களான நாக்பூர், மும்பை மற்றும் ஔரங்காபாத் போன்றவை அம்ராவதியுடன் சாலை மற்றும் விமான சேவைகளால் இணைக்கப்பட்டுள்ளன. ரயில் மூலமாக அம்ராவதி நகரத்துக்கு மஹராஷ்டிராவின் இதர முக்கிய நகரங்களிலிருந்து பயணிக்கலாம்.
வேகமாக வளர்ந்து வரும் நகரமான அம்ராவதி நகரம் இந்தியாவில் வேரூன்றி விளங்கும் பாரம்பரிய மேன்மை, தொன்மை, நாகரிகம் போன்ற யாவற்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
நீங்கள் ஒரு கலா ரசிகராக இருந்தாலும் சரி, கட்டிடக்கலை ஆர்வலராக இருந்தாலும் சரி, வெறுமனே ஒரு புதிய ஸ்தலத்தை ஆராய விரும்பும் ரசிகராக இருந்தாலும் சரி, நிச்சயமாக இந்த அம்ராவதி நகரம் நீங்கள் விஜயம் செய்ய வேண்டிய ஒன்று.