இந்தியாவின் பழமையான அழகு நகரமான ஜெய்ப்பூர் நகரம் ‘இளஞ்சிவப்பு நகரம்’ என்று பிரியத்துடன் அழைக்கப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரமாகவும் விளங்கும் இது மிதமான பாலைவனப்பிரதேசத்தில் எழுந்துள்ளது.
மஹாராஜா இரண்டாம் ஜெய்சிங் என்றழைக்கப்பட்ட ஆம்பேர் வம்ச மன்னர், வங்காள தேசத்தைச்சேர்ந்த வித்யாதர் பட்டாச்சார்யா எனும் தலைசிறந்த கட்டிடக்கலைச்சிற்பியின் உதவியுடன் இந்த நகரத்தை நிர்மாணித்துள்ளார்.
‘வாஸ்து ஷாஸ்த்ரா’ எனும் இந்திய கட்டிடக்கலை விதிகளைப் பின்பற்றி உருவாக்கப்பட்ட முதல் நகரம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஹிந்து கட்டிடக்கலை மரபின் உதாரண வடிவமாக ஜொலிக்கும் இந்த மாநகரம் ‘பீடபாதா’ எனும் நவமண்டல (ஒன்பது கட்டங்கள்) வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வானசாஸ்திரத்தில் தேர்ச்சி பெற்றிருந்த மஹாராஜா இரண்டாம் ஜெய்சிங் நவக்கிரகங்களின் எண்ணிக்கையான ஒன்பது மற்றும் அதன் அடுக்குகள் (9X) வரும்படியாக இந்த நகரத்தின் மணடலங்களை வடிவமைத்துள்ளார்.
ஜெய்ப்பூர் நகரம் தனது கோட்டைகள், அரண்மனைகள் மற்றும் ஹவேலி மாளிகைகள் ஆகிய சிறப்பம்சங்கள் மூலம் உலகெங்கிலிருந்தும் சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்கிறது.
இந்த வரலாற்றுத்தலத்தின் செழுமையான பாரம்பரியம் மற்றும் கலையம்சங்களைத் தரிசிக்க எங்கோ ஒரு மூலையில் வசிக்கும் சுற்றுலாப்பிரியர்கள் கூட ஆர்வத்துடன் வருகை தருகின்றனர்.
ஆம்பேர் கோட்டை, நஹார்கர் கோட்டை, ஹவா மஹால், ஷீஷ் மஹால், கணேஷ் போல் மற்றும் ஜல் மஹால் போன்றவை இந்நகரத்தின் புகழ்பெற்ற சுற்றுலா அம்சங்களாகும்.
திருவிழா சந்தைகள் மற்றும் திருவிழா கொண்டாட்டங்கள்
கோட்டைகள் மற்றும் அரண்மனைகள் தவிர ஜெய்ப்பூர் நகரம் பலவிதமான திருவிழாச்சந்தைகள் மற்றும் திருவிழாக்கொண்டாட்டங்களுக்கு பிரசித்தமாக அறியப்படுகிறது.
இவற்றில் ஜனவரி மாதத்தில் நடத்தப்படும் ‘ஜெய்ப்பூர் வின்டேஜ் கார் ராலி’ எனும் நிகழ்ச்சி குறிப்பிடத்தக்கது. சமீப காலமாக இந்த நிகழ்வு அதிக அளவு பார்வையாளர்களையும் பயணிகளையும் ஈர்த்து வருகிறது.
கார் ரசிகர்கள் பழைய அற்புதமான மெர்சிடிஸ், ஆஸ்டின் மற்றும் ஃபியட் மாடல்களை இந்த ‘ராலி’யில் பார்த்து ரசிக்கலாம். இவற்றில் சில மாடல்கள் 1900ம் வருடத்திய தயாரிப்புகள் என்பது ஆச்சரியமான தகவலாகும்.
ஹோலிப்பண்டிகை நாளில் கொண்டாடப்படும் யானைத்திருவிழா ஜெய்ப்பூர் மற்றொரு பிரசித்தமான திருவிழா ஆகும். வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் மற்றும் அழகிய யானை ஊர்வல நிகழ்ச்சிகள் போன்றவற்றை இந்நாளில் கண்டு களிக்கலாம்.
இவை தவிர, ‘கண்கௌர் பூஜா’ எனப்படும் எனும் பண்டிகையும் இப்பகுதியில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ‘கண்’ என்பது சிவபெருமானையும் ‘கௌர்’ என்பது அவரது துணைவி பார்வதியையும் குறிப்பிடுவதாகும்.
திருமண பந்தத்தின் மகிழ்ச்சியை குறிக்கும் விதத்தில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. பன்கங்கா சந்தைத்திருவிழா, தீஜ், ஹோலி மற்றும் சக்சு சந்தை போன்றவை இதர பிரசித்தமான பண்டிகைக் கொண்டாட்டங்களாகும்.
பொழுதுபோக்கு அம்சங்கள்
சாகச பொழுதுபோக்கு அம்சங்களில் விருப்பமுள்ள பயணிகள் ஒட்டக சவாரி, காற்று பலூன் சவாரி, பாராகிளைடிங் மற்றும் பாறையேற்றம் போன்ற துணிகர அனுபவங்களில் ஈடுபடலாம்.
இயற்கைப்பிரதேசங்களை சுற்றிப்பார்க்கும் விருப்பமுள்ளவர்கள் கரௌளி மற்றும் ரன்தம்பூர் தேசியப்பூங்கா போன்ற இடங்களுக்கு விஜயம் செய்து மகிழலாம். ஜெய்ப்பூர் நகரம் சுற்றுலாப்பயணிகளுக்கு அற்புதமான ஷாப்பிங்க அனுபவத்தை அளிக்கிறது.
இங்கு பலவிதமான பழமைப்பொருட்கள், ஆபரணங்கள், தரைவிரிப்புகள், மட்பாண்டங்கள் மற்றும் ரத்தினக்கற்கள் போன்றவற்றை விற்கும் மார்க்கெட் பகுதிகள் நிறைய உள்ளன.
மேலும், கைவினைப்பொருட்கள், கலைப்பொருட்கள், பாரம்பரிய ஆடைகள் மற்றும் நவீன பிரபல பிராண்டுகளின் உடைகளையும் எம்.ஐ ரோடு பகுதியில் பயணிகள் வாங்கலாம். ஜெய்ப்பூர் உள்ளூர் மார்க்கெட் பகுதிகளில் பொருட்கள் வாங்கும்போது பயணிகள் பேரம் பேசி வாங்குவது சிறந்தது.
உணவுச்சுவை
ஜெய்ப்பூர் நகரம் அதன் சுவையான, காரமான உணவு வகைகளுக்கும் புகழ் பெற்றுள்ளது. வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டு சேர்க்கப்பட்ட கார உணவு வகைகள் இங்கு பிரசித்தம்.
தால் பாடி-சூர்மா, பியாஸ் கி கச்சோரி, கெபாப், முர்க் கோ காட்டோ மற்றும் அச்சாரி முர்க் போன்றவை இங்கு கிடைக்கும் விசேஷமான உணவு வகைகளில் குறிப்பிடத்தக்கவையாகும்.
உணவுப்பிரியர்கள் இந்த உணவு வகைகளை நேரு பஜார் மற்றும் ஜோஹரி பஜார் போன்ற தெருவோர உணவகங்கள் நிறைந்த இடங்களில் சாப்பிடலாம். இவை தவிர கேவர், மிஷ்ரி மாவா மற்றும் மாவா கச்சோரி போன்ற சுவையான உள்ளூர் இனிப்புகளையும் ஜெய்ப்பூர் பயணத்தின்போது ருசிக்கலாம்.
ஜெய்ப்பூர் பிரயாண வசதிகள்
ஜெய்ப்பூர் நகரம் இந்தியாவின் எல்லா முக்கிய நகரங்களுடன் விமானம், ரயில் மற்றும் சாலைப்போக்குவரத்து வசதிகளால் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. நகரத்திலிருந்து 13 கி.மீ தூரத்தில் சங்கனேர் விமான நிலையம் அமைந்துள்ளது.
இது ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலையம் என்றும் அழைக்கப்படுகிறது. மும்பை, சண்டிகர், டெல்லி மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு தினசரி விமான சேவைகளை இது கொண்டுள்ளது.
மேலும், ஜெய்ப்பூர் ரயில் நிலையம் இந்தியாவின் முக்கிய பெருநகரங்களுக்கும் ரயில் சேவைகளைக்கொண்டுள்ளது. இவை தவிர, ராஜஸ்தான் மாநில அரசுப் போக்குவரத்துக்கழக பேருந்துகளும் அண்டை மாநில முக்கிய நகரங்களுக்கு அதிக அளவில் இயக்கப்படுகின்றன.
நகரத்தை சுற்றிப்பார்ப்பதற்கு சுற்றுலாப்பயணிகள் ‘ஜெய்ப்பூர் நகர போக்குவரத்துக்கழக’ பேருந்துச் சேவைகளைப்பயன்படுத்தலாம். ஜெய்ப்பூர் பிரதேசம் கடுமையான சீதோஷ்ண நிலையை வருடமுழுவதும் கொண்டுள்ளது.
கோடைக்காலம் மிக உஷ்ணத்தையும் குளிர்காலம் உறையவைக்கும் குளிரையும் கொண்டுள்ளது. கோடைக்காலத்தில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மெல்லிய பருத்திய உடைகள், தொப்பிகள் மற்றும் ‘சன்ஸ்கிரீன்’ கிரீம்கள் ஆகியவற்றோடு பயணிப்பது சிறந்தது. மார்ச் மாதம் முதல் அக்டோபர் வரையிலான காலம் இந்த இளஞ்சிவப்பு நகரை விஜயம் செய்து மகிழ்வதற்கு உகந்த காலமாகும்.