புராதன் அகர்தலா என்று அழைக்கப்படும் இந்த பழைய அகர்தலா நகரம் திரிபுராவின் இரண்டாவது தலைநகரம் என்று குறிப்பிடப்படும் பெருமையை பெற்றிருக்கிறது.
தற்போதைய அகர்தலா நகரத்திலிருந்து 7 கி.மீ தூரத்தில் இந்த பழைய (புராதன்) அகர்தலா நகரம் அமைந்திருக்கிறது. இங்குள்ள சதுர்தஷா தேவதா மந்திர் ஒரு பிரசித்தமான கோயிலாக அறியப்படுகிறது.
சதுர்தஷா தேவதா மந்திர் கோயிலில் 14 தெய்வங்களின் தலைப்பகுதிகள் மட்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. இந்த 14 தெய்வங்கள்தாம் சதுர்தஷா தேவதாக்கள் என்று அழைக்கப்படுகின்றன.
வங்காளத்து கிராமப்பகுதியில் காணப்படும் வீடுகளை ஒத்த ஸ்தூப அமைப்பு போன்று இந்த கோயில் உருவாக்கப்பட்டிருக்கிறது. பங்குரா பாணி மற்றும் பௌத்த பாணி ஆகியவற்றின் கலவையாக இந்த கோயிலின் வடிவமைப்பு காணப்படுகிறது.
கிருஷ்ண மாணிக்ய தெப்பர்மா எனும் மன்னரால் இந்த கோயில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. இந்த 14 தெய்வங்களுக்கும் உள்ளூர் கோக்போரோக் மொழியில் தனித்தனி பெயர்களும் உண்டு.
ஜுலை மாதத்தின்போது திரிபுரா மாநிலத்தின் எல்லாப்பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் இந்த சதுர்தஷா தேவதா மந்திருக்கு அதிக எண்ணிக்கையில் விஜயம் செய்கின்றனர்.
அச்சமயம் கர்ச்சி பூஜா எனும் திருவிழா இக்கோயிலில் கொண்டாடப்படுகிறது. ஒருவார காலத்திற்கு நடக்கும் இந்த திருவிழாவின்போது 14 தெய்வங்களுக்கும் சிறப்புப்பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடத்தப்படுகின்றன.