மௌஸ்மாய் நீர்வீழ்ச்சி, மேகாலயாவின் கண்கவர் நீர்வீழ்ச்சிகளுள் ஒன்றாகும். மௌஸ்மாய் கிராமத்துக்கு மிக அருகில் உள்ள இந்த நீர்வீழ்ச்சி, சிரபுஞ்சி செல்லும் வழியில் அமைந்துள்ளது.
நோஸ்ங்கிதியாங் நீர்வீழ்ச்சி என்று உள்ளூரில் அறியப்படும் மௌஸ்மாய் நீர்வீழ்ச்சி, சுமார் 315 மீட்டர் உயரத்துடன், இந்தியாவின் நான்காவது உயரமான நீர்வீழ்ச்சிகளுள் ஒன்றாக இருப்பதனால் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது.
இது, ஏழு சிறிய நீர்வீழ்ச்சிகளாகப் பிரிந்து, கடுமையான சுண்ணாம்புக் கல்லாலான செங்குத்தான பாறைகளின் வழியே பொங்கிப் பிரவகித்து ஓடும் அமைப்பைக் கொண்டு “ஏழு சகோதரிகளின் நீர்வீழ்ச்சி” என்றும் வழங்கப்படுகிறது.
வெளிச்சமான, சூரியன் தகிக்கும் ஒரு நாளில், இந்த நீர்வீழ்ச்சியின் நீரில் கதிரொளி பட்டுத் தெறித்து, பல்வேறு வண்ணச்சிதறல்களை திசையெங்கும் படரச் செய்யும் காட்சியைக் காண கண் கோடி வேண்டும்.
அதுவே வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் ஒரு நாளில், சிறு மேகப் பொதிகள் உங்கள் கால்களின் கீழ் தவழ்ந்து, நீர்வீழ்ச்சியைச் சுற்றி படர்ந்து நிற்கும் காட்சி மற்றொரு அற்புதமாகும். இந்த ஸ்தலத்தை சென்றடைவதற்கான மிகச் சிறந்த வழி, ஷில்லாங்கிலிருந்து ஒரு சுற்றுலா கார் அல்லது பேருந்து மூலம் செல்வதே ஆகும்.