ஆக்ராவுக்குத் தெற்கில் 122 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள குவாலியர் நகரம் மத்தியப் பிரதேச மாநிலத்தின் சுற்றுலாத் தலைநகரமாக விளங்குகிறது. மத்தியப்பிரதேசத்தின் 4-வது பெரிய நகரமாக அறியப்படும் இங்கு அமைந்துள்ள பல பழமை வாய்ந்த கோவில்கள், பழமையான அரண்மனைகள் மற்றும் மனதைக்கவரும் நினைவுச்சின்னங்கள், காண்பவர் எவரையும், கடந்த காலத்தின் பெருமைமிக்க பல சகாப்தங்களுக்கு அழைத்துச் செல்லும் திறன் வாய்ந்தவை.
“இந்தியாவிலுள்ள கோட்டைகளால் ஆகிய மணியாரத்தில் பதிந்துள்ள ஒரு முத்தாக விளங்குவது குவாலியர்” என்று வர்ணிக்கப்பட்ட நகரம் இது. பல புகழ்பெற்ற வட இந்திய சாம்ராஜ்யங்களின் நிர்வாக மையமாக விளங்கிய பெருமைமிக்க குவாலியர் கோட்டை இங்குதான் அமைந்துள்ளது.
பழமையும் புதுமையும் சந்திக்கும் இடமாகக் குவாலியர் கருதப்படுகிறது. தன்னகத்தே கொண்டுள்ள பழமை வாய்ந்த கோவில்கள், பழமையான அரண்மனைகள் மற்றும் மனதைக்கவரும் நினைவுச்சின்னங்கள் அருங்காட்சியகங்கள் மூலம், காண்பவர் எவரையும், கடந்த காலத்தின் பெருமைமிக்க பல சகாப்தங்களுக்கு அழைத்துச் செல்லும் திறம் படைத்த குவாலியர், தற்போது ஒரு வளர்ந்துவரும் தொழில் நகரமாகவும் இருக்கிறது. நவீன இந்திய வரலாற்றில் குவாலியருக்கு தனியொரு இடம் உண்டு.
குவாலியரின் வரலாறு
சூரஜ் சென் என்னும் மன்னரால் கி.பி.8 ஆவது நூற்றாண்டில் குவாலியர் நகரம் உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. மன்னரது தொழுநோயைக் குணப்படுத்திய ‘குவாலிபா’ என்னும் முனிவரின் நினைவாக இந்நகருக்குப் பெயரிடப்பட்டது. குவாலியர் நகருக்கு கி.பி. 6 ஆம் நூற்றாண்டிலிருந்து எழுதப்பட்ட சரித்திரம் உள்ளது.
கி.பி.6 ஆம் நூற்றாண்டில் ஹூணர்கள் இப்பகுதியை ஆண்டனர். பின்னர் கன்னோசியின் கூர்ச்சர பிரதிஹரர்களின் நிர்வாகத்தின் கீழ் குவாலியர் வந்தது. இவர்கள் குவாலியரை கி.பி.923 வரை ஆண்டனர்.
அதன்பின் பத்தாம் நூற்றாண்டு வரை கச்வாகா ராஜ்புத்திரர்கள் ஆட்சி செய்தனர். 1196 இல் டெல்லி சுல்தானியத்தைச் சேர்ந்த குத்புதீன் ஐபெக் இந்நகரை வெற்றிகொண்டார். அவரைத் தொடர்ந்து, சம்சுதீன் அல்டமிஷ் என்பவர் 1232 வரை ஆட்சிபுரிந்தார். முகலாயர்களும் குவாலியரை ஆண்டுள்ளனர்.
1553 ஆம் ஆண்டில், விக்கிரமாதித்தியா என்னும் அரசர் குவாலியரை வெற்றிகொண்டார். அவர் அதன் பின் 1556 ஆம் ஆண்டில் அக்பரின் படையினை வெற்றிகொண்டு வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றினார்.
18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில், மராத்தியர்களின் ஒரு பிரிவினரான சிந்தியாக்கள், ஆங்கிலேயரின் உடன்படிக்கையுடன், ஆண்டு வந்தனர். 1780 ஆம் ஆண்டில், ஆங்கிலேயர்கள் இந்நகரத்தின் முழுக்கட்டுப்பாட்டையும் ஏற்றனர்.
இந்த இடத்தில்தான் ஜான்ஸியின் ராணியான லட்சுமி பாய் 1857 ஆம் ஆண்டு, முதலாவது இந்திய சுதந்திரப் போராட்டத்தினை ஆங்கிலேயருக்கு எதிராக நடத்தி தனது இன்னுயிரை நீத்தார்.
குவாலியரில் சுற்றுலா!
குவாலியரில் சுற்றுலா மேற்கொள்வோரது கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாக பார்க்கவேண்டிய இடங்கள் ஏராளம் உள்ளன. குவாலியர் கோட்டை, பூல் பாக், சூரஜ் குண்ட், ஹாத்தி பூல், மன் மந்திர் அரண்மனை, ஜெய் விலாஸ் மஹால், போன்றவை காண்போரை கட்டாயம் கவரும். மேலும் இது புகழ் பெற்ற இந்திய இசைக் கலைஞரான தான்சேன் பிறந்த ஊராகும்.
இங்கு பெருமைமிக்க தான்சேன் இசைவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் கொண்டாடப்படும் "குவாலியர் காரனா" எனப்படும் பல்வேறு இசைக்கலைஞர்களும் ஒருங்கே கூடி இசைக்கும் கஜல் இசை நிகழ்ச்சி இவ்வூரின் பெயரால் பெயரிடப்பட்டது. சீக்கியர்களுக்கும், ஜைனர்களுக்கும் இது ஒரு புகழ்பெற்ற புனிதத்தலமாகவும் கருதப்படுகிறது.
வான்வழியாகவும், ரயில் மற்றும் சாலை மார்க்கமாகவும் குவாலியரைச் சென்றடையலாம். இங்கு ஒரு ரயில் நிலையமும், விமான நிலையமும் உள்ளன. குவாலியர் நகரைச் சுற்றிப்பார்க்கச் செல்வதற்கு, குளிர்காலமே மிகச் சிறப்பான காலமாகும்.