கர்நாடக மாநிலத்திலிருந்து ஆந்திர மாநிலம் வரை பாயும் துங்கபத்திரா ஆறு இந்திய தீபகற்பத்தின் வரலாற்றுப் பின்னணியில் முக்கியமான புனித ஆறாக கருதப்படுகிறது. ஹம்பி நகரம் இந்த ஆற்றின் தெற்கு கரையில் அமைந்துள்ளது.
துங்கா மற்றும் பத்திரா என்ற இரண்டு ஆறுகள் சேர்ந்து இது உருவானதால் துங்கபத்திரா என்று அழைக்கப்படுகிறது. ஹம்பியிலிருந்து தென்மேற்கு திசையில் 20 கி.மீ தூரத்தில் இந்த ஆற்றின் மீது பெரிய அணை ஒன்றும் நீர் மின் உற்பத்திக்காக கட்டப்பட்டுள்ளது.
சரித்திர காலத்தில் விஜயநகர சாம்ராஜ்ய அரசர்கள் பல நீர்வழிகள், கால்வாய்கள் மூலம் இந்த ஆற்றை பயன்படுத்தி கொண்டனர். சாதுரியமாக திட்டமிட்ட நீர் வழிகள் மூலம் அவர்கள் துங்கபத்திரை ஆற்று நீரை அரண்மனை நீர்த்தேவை முழுவதையும் பூர்த்தி செய்யும் நீர்த்தேக்கங்களுக்கு எடுத்து சென்றனர்.
இது தவிர விஜயநகர ஆட்சியில் வெட்டப்பட்ட விவசாய பாசன கால்வாய்கள் இன்றும் பயன்பாட்டில் உள்ளன என்பது வியப்பளிக்க கூடிய விஷயமாகும். ஹம்பியின் கரையிலிருந்து துங்கபத்திரை ஆற்றை பார்த்து ரசிக்கும் அனுபவமும் இங்கு சுற்றுலா பயணிகளால் விரும்பப் படுகிறது.
முற்காலத்தில் இந்த துங்கபத்திரை ஆறு பம்பா ஆறு என்றே அழைக்கப்பட்டது. புராண ஐதீகங்களின் படி பிரம்மாவின் புத்திரியான பம்பா சிவனை நினைத்து தவம் செய்ததாகவும், அதனால் கவரப்பட்ட சிவ பெருமான் பம்பாவை மணம் செய்து பம்பா பதி (பம்பாவின் கணவன்) என்ற பெயரில் அழைக்கப் பட்டதாகவும் ஒரு கதை சொல்லப்படுகிறது.
ஹம்பி என்ற பெயர் வருவதற்கு இந்த புராணக்கதையும் ஒரு காரணமாகும். துங்கபத்திரா நதியை ஒட்டி பல சிவன் கோயில்கள் காணப்படுகின்றன.



Click it and Unblock the Notifications