ஜொவாய், மேகாலயா மாநிலத்தின் வளர்ந்து வரும் தொழில் நகரங்களில் ஒன்று. இது ஜைன்டியா மலை மாவட்டத்தின் மாவட்ட தலைநகரம் ஆகும். மேலும் இது ப்னார் பழங்குடி மக்களின் வசிப்பிடமாகவும் திகழ்கின்றது. இந்த கண்ணுக்கினிய அழகிய நகரத்தின் மூன்று புறங்களிலும் யந்ட்டு நதி சூழ்ந்துள்ளது. இந்த நகரத்தின் தெற்கு பகுதி வங்காளத்துடன் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது.
ஒரு பீடபூமியில் மீது அமைந்துள்ள இந்த ஜொவாய் நகரம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1380 மீட்டர் உயரதில் உள்ளது. உயரமான இடத்தில் அமைந்துள்ளதால் இங்கு எப்பொழுதும் குளிர்ந்த மற்றும் இனிமையான வானிலையே நிலவுகின்றது.
ஜைன்டியா மலை மாவட்டத்தில் கனிம வளம் நிறைந்துள்ளதால் ஜொவாய் நகரத்தைச் சுற்றி பல்வேறு நிலக்கரி சுரங்கங்கள் அமையப்பெற்றுள்ளன. ஆகவே ஜொவாய் நகரத்தின் பொருளாதாரம் நிலக்கரி சுரங்கத்தைச் சார்ந்து வளர்ந்து வருகின்றது.
ஜொவாய் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்
ஜொவாய் சுற்றுலா இங்கு நடைபெறும் பிஹ்டெய்ம்க்லாம் திருவிழாவை உள்ளடக்கியது. இந்தத் திருவிழாவானது ஜூலை மாதத்தின் இரண்டாவது வாரத்தில் கொண்டாடப்படுகின்றது. பிஹ்டெய்ம்க்லாம் திருவிழா என்பது ப்னார் பழங்குடி சமூகத்தின் ஒரு சம்பிரதாய திருவிழாவாகும்.
இதைத் தவிர ஜொவாயில் பல்வேறு சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் உள்ளன. அவற்றுள் மனிதனால் உருவாக்கப்பட்ட த்ஹட்லஸ்கெயின் ஏரி, லலோங்க் பார்க் மற்றும் ஜொவாய் பிரிஸ்பைடீரியன் சர்ச் போன்றவை மிக முக்கியமானவை.
ஜொவாயை எவ்வாறு சென்றடைவது?
ஜொவாய் மேகாலயா தலைநகரான ஷில்லாங்கில் இருந்து சுமார் 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஜொவாயை அடைய சுற்றுலா பயணிகள் சுற்றுலா வாகனத்தை பயன்படுத்தியோ அல்லது சீரான இடைவெளியில் இயக்கப்படும் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவையையோ பயன்படுத்தி அடையலாம்.
விமானம் மூலம் செல்ல விரும்பும் பயணிகள் கொல்கத்தாவில் இருந்து நேரடி விமானத்தை பயன்படுத்தி உம்ரோய் விமான நிலையத்தை அடையலாம். எனினும், கவுஹாத்தியை விமானம் மூலம் அடைவதே மிகவும் சிறந்ததாகும்.
ஜொவாய் சுற்றுலாவிற்கான சிறந்த பருவம்
ஜொவாயை சுற்றிப் பார்ப்பதற்கு குளிர்காலம் மற்றும் கோடைகாலமே மிகவும் சிறந்த பருவமாகும்.