தற்போது ஒரு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ள இந்த அரக்கல் கெட்டு எனும் அரண்மனை தன் வரலாற்று மற்றும் ராஜரீக அரும் பொருள் சேகரிப்புகள் மூலம் பயணிகளை ஈர்க்கிறது.
கண்ணூர் நகரத்திலிருந்து ஒரு சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்த அரண்மனை மொப்பிளா வளைகுடாவுக்கு அருகிலேயே உள்ளது. ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இது கண்ணூர் மற்றும் லட்சத்தீவு பகுதிகளை ஆண்ட அரக்கல் அலி ராஜ வம்சத்தினர் வசித்த மாளிகையாக திகழ்ந்துள்ளது.
லாடரைட் கற்கள் மற்றும் வேலைப்பாட்டு கடைசல்கள் நிரம்பிய மர அமைப்புகளால் உருவாக்கப்பட்டுள்ள இந்த அரண்மனையானது கேரளப்பிரதேச மற்றும் பழங்கால ஐரோப்பிய கலையம்சங்களை கலந்து உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு விசாலமான உள்முற்றம், பல்வேறு உள்கட்டு மாளிகைகள், மசூதிகள், நீளமான கூடங்கள், சபை மண்டபங்கள், மரத்தரைகள் மற்றும் கண்ணாடி அலங்காரங்களை கொண்ட ஜன்னல்கள் ஆகியவை இந்த அரண்மனையின் சிறப்பம்சங்களாக காணப்படுகின்றன.
இந்த அரண்மனையின் தர்பார் மண்டபமானது கேரள அரசாங்கத்தால் ஒரு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த ஒட்டுமொத்த அரண்மனை வளாகமும் இன்னும் அரக்கல் ராஜவம்சத்தாரின் உரிமை மற்று நிர்வாகத்தின் கீழ் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த அரண்மனையை சுற்றிப்பார்ப்பதற்கு ஒரு சிறிய கட்டணமும் அரக்கல் ராஜகுடும்ப அறக்கட்டளையால் வசூலிக்கப்படுகிறது. இங்குள்ள அருங்காட்சியகத்தில் ராஜ குடும்பத்தினர் பயன்படுத்திய பலவிதமான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் ராஜமுத்திரைகள், தானிய மரக்களஞ்சியங்கள், புனித குரான் நூற்பிரதி, ஒரு புராதன தொலைபேசி, வாள்கள், பித்தளை மற்றும் வெள்ளி பாத்திரங்கள், குறுவாட்கள், இருக்கைகள் மற்றும் ஒரு தொலைநோக்கி ஆகியவை குறிப்பிடத்தக்க பொருட்களாகும்.



Click it and Unblock the Notifications