இந்தியா மற்றும் ஆசியாவில் உள்ள ஒரே டிரைவ் இன் பீச் (அலைகளுக்கு வெகு அருகில் வாகனங்களை ஓட்ட முடியும்) என்ற பெருமையை இந்த முழுப்பிளாங்காட் பீச் பெற்றுள்ளது.
முழுப்பிளாங்காட் கடற்கரை தலசேரி நகரத்திலிருந்து 8 கி.மீ தூரத்திலும், கண்ணூர் நகரத்திலிருந்து 16 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. ஒரு நாள் சுற்றுலாவுக்கும் குடும்பத்தினருடன் பிக்னிக் செல்வதற்கும் ஏற்ற இந்த கடற்கரைப்பகுதிக்கு ஆயிரக்கணக்கான பயணிகள் ஒவ்வொரு வருடமும் விஜயம் செய்கின்றனர்.
5 கி.மீ தூரத்துக்கு அலைகளை ஒட்டியே வாகனங்களில் கடற்கரை மணற்பரப்பின் அழகை ரசித்தபடி பயணம் செய்ய முடிவது இந்த இடத்தில் விசேஷமாகும். ஏப்ரல் மாதத்தில் நடக்கும் பீச் திருவிழாவின் போது இந்த கடற்கரை பகுதியில் ஏராளமான இளைஞர்களும் சாகச பயணிகளும் திரண்டு வந்து கொண்டாடுகின்றனர்.
தர்மதம் தீவு அல்லது பச்ச துருத்து என்று அழைக்கப்படும் ஒரு சிறு தீவுத்திட்டு இந்த கடற்கரையை ஒட்டியே 200 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.சுற்றுலாப்பயணிகள் கார் அல்லது பைக்’குகள் மூலம் இந்த கடற்கரையை ஒட்டி வாகனப்பயணம் செய்து மகிழலாம்.
கரையில் அசைந்தாடும் தென்னை மரங்களும் ஆங்காங்கு மணலில் புதைந்திருக்கும் கருப்பு பாறைகளும் இக்கடற்கரையின் எழிலைக்கூட்டுகின்றன. வருடத்தின் எல்லா நாட்களிலும் விஜயம் செய்யக்கூடிய சூழலைக்கொண்டுள்ள இக்கடற்கரைப்பகுதிக்கு மழைக்காலத்தில் செல்வதை தவிர்ப்பது அவசியம்.