பரசினிக்கடவு ஸ்னேக் பார்க் எனப்படும் இந்த பாம்புப்பூங்கா கண்ணூரின் முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாகும். இந்த தனித்தன்மையான பூங்கா சில அரிய ஊர்வன வகைகளை பாதுகாத்து, பராமரிக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ளது. பரவலான கவனத்தைப்பெற்றுள்ள இந்த பாம்புப்பூங்கா கேரளாவிலுள்ள ஒரே ஒரு பாம்புப்பண்ணை மற்றும் ஊர்வன பாதுகாப்பு மையம் என்பது குறிப்பிடத்தக்கது.
பரசினிக்கடவு பாம்புப்பண்ணை கண்ணூர் நகரத்திலிருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ள பரசினிக்கடவு எனப்படும் ஒரு சிறு கிராமத்தில் உள்ளது. இங்கு முத்தப்பன் கோயில் எனப்படும் ஒரு பிரசித்தமான கோயிலும் அமைந்துள்ளதால் பயணிகள் ஒரே பயணத்தில் இந்த இரண்டு சுற்றுலா அம்சங்களுக்கும் விஜயம் செய்யலாம். பப்பினிசேரி எனும் இடத்திலுள்ள விஷ சிகிக்ஷா மையம் இந்த பரசினிக்கடவு பாம்புப்பண்ணையை உருவாக்கி நிர்வகித்துவருகிறது.
இந்த பாம்புப்பண்ணையில் பலவிதமான பிரமிக்கவைக்கும் பாம்புகளை பார்க்கலாம். விஷமுள்ள மற்றும் விஷமில்லாத இரண்டு வகைகளும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ராஜ நாகம் எனப்படும் மஹா பிரம்மாண்ட இந்தியப்பாம்பு, கண்ணாடி நாகம், கட்டு விரியன், மலைப்பாம்பு, குழி விரியன் போன்ற பாம்பு வகைகளை இங்கு காணலாம். பாம்புகள் தவிர இதர ஊர்வன வகைகள், விலங்குகள் மற்றும் பறவைகளும் இங்கு காணப்படுகின்றன.
150 வகையான ஊர்வன ஜந்துக்கள் இங்குள்ளதாக பட்டியலிடப்பட்டுள்ளது. பாம்புகள் மக்களுக்கு இருக்கும் பயத்தையும் மூடநம்பிக்கையையும் போக்குவதற்காக இங்கு சில காட்சி விளக்கங்களும் பார்வையாளர்கள் முன்னிலையில் நிகழ்த்தப்படுகின்றன.
பார்வை நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை