பப்பினிசேரி எனும் இந்த சிறுநகரம் கண்ணூர் நகரத்திலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ளது. இங்குள்ள கோயில்கள் மற்றும் ஆன்மீக மையங்களுக்காக இது சிறப்புடன் அறியப்படுகிறது.
பலியபடம் ஆறு மற்றும் ஏராளமான சிறு மலைக்குன்றுகளால் சூழப்பட்ட இந்த நகரம் இயற்கை எழிலுடன் காட்சியளிக்கிறது. இப்பகுதியில் ஆற்றின் கரையிலுள்ள பாம்புறுத்தி எனும் இடம் முக்கியமான இயற்கை அழகுப்பிரதேசமாகவும், வடவேஸ்வரம் எனும் மலை கேரள கைலாசம் என்றும் அறியப்படுகின்றன. இந்த இரண்டு ஸ்தலங்களும் பப்பினிசேரி நகரத்தின் முக்கியமான சிறப்பம்சங்களாக புகழ்பெற்றுள்ளன.
மற்றொரு முக்கியமான சிறப்பம்சமாக இந்நகரத்தில் மூணு பெட்டும்மா பள்ளி அல்லது கட்டிலே பள்ளி எனும் ஆன்மீகத்தலமும் முக்கியமானதாக விளங்குகிறது. இந்த மசூதியில் நடத்தப்படும் பிரசித்தமான கட்டிலே பள்ளி நேர்ச்சே எனும் சடங்கின்போது கேரளாவின் எல்லா பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் விஜயம் செய்கின்றனர்.
இங்குள்ள வடவேஸ்வரம் சிவன் கோயில் ஒரு ரம்மியமான மலைப்பகுதியில் அமைந்திருப்பதுடன் வடக்கு மலபார் பிரதேசத்தின் ஸ்ரீ கைலாசம் என்னும் சிறப்புப்பெயருடனும் அழைக்கப்படுகிறது.
ஆரோண் சர்ச், மண்கடவு ஜுமா மஸ்ஜித் மற்றும் கீச்சேரி பாலோட்டு காவு ஆகியவை பப்பினிசேரியில் தரிசிக்க வேண்டிய இதர ஆன்மிக அம்சங்களாகும். இவை மட்டுமல்லாமல் இங்கு விஷ சிகிக்ஷா கேந்திரம் எனும் பாம்புக்கடி சிகிச்சைக்கான மருத்துவமனை ஒன்றும் உள்ளது.