கேதார்நாத் பகுதி சுற்றுலா பயணிகளுக்கு ஏராளமான மலையேற்ற அனுபவத்தையும் வழங்குகிறது. வாகனங்கள் மூலம் இந்த கோயிலுக்கு செல்ல முடியாது என்பதால் கௌரிகுண்ட் அடிவாரத்திலிருந்து மலையேற்றம் மூலம் 14 கி.மீ தூரத்தை கடந்துதான் இந்த கோயிலுக்கு விஜயம் செய்ய முடியும் என்பது இந்த ஸ்தலத்தின் தனித்தன்மையான விசேஷ அம்சமாகும்.
மலையேற முடியாதவர்களுக்காக ஹெலிகாப்டர் சேவையும் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது. கேதார்நாத் பகுதியில் மிக பிரசித்தமான மலையேற்றப்பாதை கேதார்நாத்தில் துவங்கி பாகீரதி ஆற்றினை ஒட்டி நீண்டு அடர்ந்த காடுகளின் வழியே லதா எனும் இடம் வரை சென்று முடிகிறது.
அங்கிருந்து கங்கோத்ரியை சாலை மார்க்கமாக 5 மணி நேரத்தில் அடைந்து திரும்பவும் மலையேற்றத்தினை தொடரலாம். அது இறுதியில் கங்கோத்ரி பனிமலை வழியே நீண்டு இறுதியில் தபோவண் எனும் பசுமை பள்ளத்தாக்கில் சென்று முடிகிறது.
கேதார்நாத்திலிருந்து வாசுகி தால் ஏரி வரை செல்லும் மலையேற்றப்பாதையும் மற்றொரு முக்கியமான டிரெக்கிங் பாதையாக விளங்குகிறது. இந்தப்பாதையில் பயணிகள் மந்தாகினி பள்ளத்தாக்கு மற்றும் சௌகம்பா சிகரங்கள் போன்றவற்றின் அழகை கண் குளிர பார்த்து ரசிக்க முடியும்.