இமயமலைத்தொடர்களின் அங்கமான கேதார்நாத் மலைகளில் அமைந்துள்ள கேதார்நாத் கோயில் இந்தியாவில் ஹிந்துக்களின் முக்கியமான புனித யாத்திரைஸ்தலமாக புகழ் பெற்றிருக்கிறது.
இங்கு சிவபெருமானுக்கான முதன்மையான ஜோதிர்லிங்கம் அமைந்திருக்கிறது. இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கங்களில் கேதார்நாத்தில் 3584மீ உயரத்தில் அமைந்திருக்கும் இந்த ஜோதிர்லிங்கம் முக்கியமானதாக கருதப்படுகிறது.
ஆதி சங்கராச்சாரியாரால் 8ம் நூற்றாண்டில் ஸ்தாபிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு அருகில் மந்தாகினி ஆறு பிரம்மாண்டமாக ஓடுகிறது. இந்த கோயிலின் உள் மண்டப சுவர்களில் பல்வேறு ஹிந்து தெய்வங்களின் உருவங்களைக்காணலாம். கேதார்நாத் கோயிலுக்கு அருகிலேயே பாண்வர்களால் கட்டப்பட்டதாக கருதப்படும் மற்றொரு புராதனமான கோயிலும் அமைந்துள்ளது.
கேதார்நாத் கோயிலில் சிவனின் வாகனமான நந்தியின் சிலை கோயில் வாசலில் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலானது செவ்வக வடிவிலான ஒரு மேடைத்தளத்தின் மீது துல்லியமாக வெட்டப்பட்ட பெரிய பாறைப்பலகைகளை பயன்படுத்தி கட்டப்பட்டிருக்கிறது.
இங்குள்ள கர்ப்பகிருகத்தில் பக்தர்கள் மூலவரை தரிசிக்கலாம். கோயில் வளாகத்தில் பூஜைகள் மற்றும் சடங்குகளுக்கென தனி மண்டபம் ஒன்றும் உள்ளது. புராணிகக்கதைகளின்படி குருஷேத்திரப்போர் முடிந்தபின் பாண்டவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து விடுபட இந்த ஸ்தலத்திலிருந்த கோயிலுக்கு வந்து வணங்கியதாக சொல்லப்படுகிறது.