ஜோஷிமத் என்பது உத்தரகண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் உள்ள ஒரு புனித நகரமாகும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 6000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த இடம் பனி மூடிய இமாலய மலைத்தொடர்களால் சூழப்பட்டுள்ளது. இந்துக்களால் மிகப் புனிதமானதாகப் போற்றப்படும் இவ்விடம் ஏராளமான கோயில்களின் உறைவிடமாக உள்ளது.
ஜோஷிமத், ஆதி குரு ஸ்ரீ ஷங்கராச்சார்யா அவர்களால் 8 ஆம் நுற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட நான்கு மடங்களுள் ஒன்றாகும். இந்த மடம் இந்துக்களின் புனிதத் தொகுப்பான அதர்வ வேதாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். ‘கார்த்திகேயபுரா’ என்று முன்னர் அழைக்கப்பட்டு வந்த ஜோஷிமத், உத்தர்காண்ட் செல்வோர் கட்டாயம் பார்க்க வேண்டிய ஓர் இடமாகும்.
இந்த இடம், தௌலிகங்கா நதி மற்றும் அலக்நந்தா நதி ஆகிய இரு நதிகளும் இணையும் காமப்ரயாக் என்ற பகுதியில் அமைந்துள்ளது.
ஜோஷிமத், சாமோலி மாவட்டத்தின் மேற்புறப் பகுதிகளுக்கு நடைப்பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது. இப்பகுதியில் உள்ள பிரபலமான நடைப்பயணப் பாதைகளுள் ஒன்று, ஜோஷிமத்திலிருந்து ஆரம்பித்து பூக்களின் பள்ளத்தாக்கைச் சென்றடைகிறது.
உல்லாசப் பயணிகள் சுற்றிப் பார்க்கக்கூடிய ஏராளமான சுற்றுலாத் தலங்கள் ஜோஷிமத்தில் உள்ளன. நாட்டின் பழம்பெரும் மரங்களுள் ஒன்றாகக் கருதப்படும் கல்பவிருக்ஷா இத்தலங்களுள் ஒன்றாகும்.
சுமார் 1200 வருடங்கள் பழமையான இம்மரத்தின் கீழ் அமர்ந்து ஆதி குரு ஷங்கராச்சார்யா தியானம் செய்ததாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். இந்த கல்பவிருக்ஷா சுமார் 21.5 மீட்டர் சுற்றளவுடன் காணப்படுகிறது.
இந்துக் கடவுளான நரசிங்கருக்காக எழுப்பப்பட்டுள்ள நரசிங்கர் கோயில், ஜோஷிமத்தில் பார்க்க வேண்டிய மற்றொரு பிரபலமான கோயிலாகும். இக்கோயில் ஸ்ரீ பத்ரிநாத் முனிவரின் வாழ்விடமாகவும் கருதப்படுகிறது.
இங்குள்ள நரசிங்கரின் பிரபலமான திருவுருவச்சிலை சுருங்கிக்கொண்டே வருவதாகக் கூறப்படுகிறது. இங்கு உலவும் நம்பிக்கைகளின் படி, இச்சிலை உடைந்து விழும் நாளில் மிகப்பெரும் நிலச்சரிவு உண்டாகி பத்ரிநாத் செல்லும் பாதையை மறைத்து விடும் என்று கூறப்படுகிறது.
நன்கு அறியப்பட்ட சுற்றுலாத்தலமான நந்தா தேவி தேசியப் பூங்கா, ஜோஷிமத்தில் இருந்து சுமார் 24 கி.மீ. தொலைவில் உள்ளது. இப்பூங்கா, 1988 ஆம் அண்டு யுனைட்டட் நேஷன்ஸ் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனத்தால் (யுனெஸ்கோ) உலகப் பாரம்பரிய மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் வான், இரயில் மற்றும் சாலை வழி போக்குவரத்து சேவைகள் மூலம் ஜோஷிமத்தை அடையலாம். டெஹ்ராடன்னின் ஜாலி கிராண்ட் விமான நிலையம் மற்றும் ரிஷிகேஷின் இரயில் நிலையம் ஆகியவை இதற்கு அருகாமையில் அமைந்துள்ள முக்கிய போக்குவரத்து மையங்களாகும்.
ஜோஷிமத் பகுதியில் குளிர்காலத்தின் போது கடும் பனிப்பொழிவும், மழைக்காலத்தின் போது நல்ல மழைப்பொழிவும் இருக்கும். ஜோஷிமத்தை சுற்றிப் பார்க்க விரும்பும் சுற்றுலாப் பயணிகள், இதமான வானிலை நிலவக்கூடிய கோடைகாலங்களில் இங்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.