உத்தர்காஷி, கடல் மட்டத்திலிருந்து சுமார் 1158 அடி உயரத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய மாவட்டம் ஆகும். உத்தர்காண்ட் மாநிலத்தில் உள்ள இம்மாவட்டம் 1960 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி உருவாக்கப்பட்டது. ஹிமாச்சல் பிரதேஷ் மற்றும் திபெத் ஆகியவை இதன் வடக்குப்புறத்திலும், சாமோலி மாவட்டம் இதன் கிழக்குப்புறத்திலும் அமையப்பெற்றுள்ளன. இந்த இடம் இந்துக்களுக்கு ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஸ்தலமாகும். இதனை “வட காஷி” என்றும் “கோயில்களின் நகரம்” என்றும் குறிப்பிடுகின்றனர்.
கங்கை நதியின் கரையோரத்தில் அமைந்துள்ள புனித நகரமான உத்தர்காஷி, ரிஷிகேஷிலிருந்து சுமார் 172 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த இடம், பிரபலமான ஆன்மீக திருத்தலங்களான கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகியவைக்கு அருகாமையில் உள்ளது.
இங்கு பெரும்பாலும் உத்தரகுருஸ், காசாஸ், கிராத்தாஸ், குனிந்தாஸ், தங்கனாஸ் மற்றும் ப்ரதங்கனாஸ் போன்ற மலை வாழ் இன மக்களே வாழ்ந்து வருகின்றனர்.
உத்தர்காஷி அதன் அழகிய கோயில்களுக்கு மிகவும் புகழ் பெற்றது. இப்புனித ஸ்தலத்துக்கு ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.
விஸ்வநாத் கோயில், பொக்கு தேவ்தா கோயில், பைரவ் கோயில், குதேதி தேவி கோயில், கர்ண தேவ்தா கோயில், கங்கோத்ரி கோயில், யமுனோத்ரி கோயில் மற்றும் ஷனி கோயில் ஆகியன இங்குள்ள பிரபலமான சில கோயில்களாகும்.
இந்துக் கடவுளான சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள விஸ்வநாதர் கோயில், சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. உத்தர்காஷி பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 300 அடி தூரத்தில் அமைந்துள்ளது இக்கோயில்.
மணிகர்னிகா காட் இப்பகுதியில் அமைந்துள்ள மற்றொரு முக்கிய ஆன்மீக மையம் ஆகும். மாமுனிவர் ஜட பரதா, உத்தர்காஷியில் தான் தன் தவறுக்கு மனம் வருந்தினார் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்துக்களின் ஆன்மீகத் தொகுப்பான ஸ்கந்தபுராணத்தின் கேதார் காண்டத்தில் இவ்விடம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
கங்கோத்ரியில் இருந்து சுமார் 6 கி.மீ. தூரத்தில் உள்ள நந்தவன் தபோவன், ஷிவ்லிங்க், தலை சாகர், பாகீரதி, கேதார் டோம், சுதர்ஷனா போன்ற மலை முகடுகளின் பேரழகு மிளிரும் காட்சிகளை இங்கு வருகை தருவோரின் கண்களுக்கு விருந்தாக்குகிறது.
உத்தர்காஷி-கங்கோத்ரி சாலையில் அமைந்துள்ள தயாரா புக்யால் என்ற இடத்துக்கும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து ரசித்துச் செல்கின்றனர். கடல் மட்டத்திலிருந்து சுமார் 3048 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த இடம் சறுக்கு விளையாட்டுகளுக்கு பெயர் போனதாகும்.
ஹர் கி தூன் என்னும் புகழ்பெற்ற மலையேற்ற ஸ்தலம், கடல் மட்டத்திலிருந்து சுமார் 3506 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கே சுற்றுலாப் பயணிகள் தங்கும் வகையில் ஏகப்பட்ட விருந்தினர் விடுதிகள் மற்றும் பங்களாக்கள் உள்ளன.
விஸ்வநாதர் கோயிலுக்கு எதிர்ப்புறத்தில் அமைந்துள்ள ஷக்தி கோயிலும் மிகவும் புகழ்பெற்றதோர் ஆன்மீக ஸ்தலமாகும். இங்கு காணப்படும் 26 அடி உயரமுள்ள திரிசூலம், இக்கோயிலின் மிக முக்கிய ஈர்ப்புகளுள் ஒன்றாக திகழ்கிறது.
உத்தர்காஷியில் உள்ள அழகிய ஏரியான தோதிதால், கடல் மட்டத்திலிருந்து சுமார் 3307 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு வர விரும்பும் சுற்றுலாப் பயணிகள் சாலை வழியாகவோ அல்லது மலையேற்றத்தின் மூலமோ இந்த ஏரியை அடையலாம். இந்த இடம் யமுனோத்ரி மற்றும் ஹனுமான் சாட்டி போன்ற இடங்களுக்கு மலையேற்றம் செல்வோர்க்கு அடிவார முகாமாகவும் விளங்குகிறது.
இவை தவிர, புதிதாக தோன்றியுள்ள சுற்றுலாத் தலமான மானேரி, உத்தர்காஷியில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. நேரம் அனுமதித்தால், 1965 ஆம் வருடம் நிறுவப்பட்ட நேரு மலையேற்ற மையத்துக்கும் சுற்றுலாப் பயணிகள் சென்று பார்த்து வரலாம்.
இந்நிலையம், மலைகளின் மேல் பெரும் காதல் கொண்டிருந்த, இந்தியாவின் முதல் பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் நினைவாக அவரது பெயரிலேயே நிறுவப்பட்டுள்ளது. கங்க்னானி, சட்டால், திவ்ய ஷீலா மற்றும் சூர்ய குந்த் ஆகியவையும் இப்பகுதியில் உள்ள பிரபல சுற்றுலாத் தலங்களாகும்.
உத்தர்காஷியில் இருந்து சுமார் 183 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள டெஹ்ராடன்னின் ஜாலி க்ராண்ட் விமான நிலையமே இதற்கு அருகாமையில் உள்ள விமான நிலையம் ஆகும்.
ரிஷிகேஷ் இரயில் நிலையமே இதற்கு அருகாமையில் உள்ளது. சுற்றுலாப் பயணிகள், அருகிலுள்ள நகரங்களான டெஹ்ராடன், ஹரித்வார், ரிஷிகேஷ் மற்றும் முஸ்ஸூரி ஆகியவற்றிலிருந்து பேருந்துகள் மூலமும் உத்தர்காஷியை வந்தடையலாம்.
இதமான வானிலையைக் கொண்டிருக்கும் உத்தர்காஷி, வருடத்தின் எப்பகுதியிலும் சென்று வரக்கூடிய ஒரு சுற்றுலாத் தலமாகும். எனினும், பல்வேறு திருவிழாக்கள் விமரிசையாகக் கொண்டாடப்பெறும் கோடைகள் மற்றும் மழைக்காலங்கள், இப்புனித ஸ்தலத்துக்கு சென்று வர சிறப்பான காலகட்டங்களாகப் பரிந்துரைக்கப்படுகின்றன.