நாகாலாந்து மாநிலத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டம் லாங்லெங். கிபைர் மாவட்டத்தைப் போல, துயூன்சாங் மாவட்டத்தின் ஒரு பகுதியைப் பிரித்து உருவாக்கப்பட்டது தான் லாங்லெங் மாவட்டம். கடல் மட்டத்தில் இருந்து, சுமார் 1066 மீட்டர் உயரத்தில் இருக்கும் இம்மாவட்டத்திற்கு செல்ல இந்திய அரசின் அனுமதி பெற வேண்டும். அதாவது இன்னர் லைன் பெர்மிட் என்ற ஆவணத்தை பெறுவது அவசியம்.
லாங்லெங்கின் பண்பாடு
லாங்க்லெங் - போம் நாகாஸ் பழங்குடியினர் வசித்து வரும் அழகிய ஊர். இவர்கள் பானை செய்தல், நூற்றல் மற்றும் மூங்கில் வேலைப்பாடுக்ளில் கைதேர்ந்தவர்களாக விளங்குகின்றனர்.
அதுமட்டுமல்லாமல், உழவுத் தொழிலையும் காலகாலமாக செய்து வருகின்றனர். போம் நாகாஸ் மக்களின் தோற்றம் குறித்த தகவல்கள் தெளிவில்லாமல் இருந்தாலும், இவர்கள் ஆஓ நாகாஸ் பழங்குடியினரைப் போலவே கற்களில் இருந்து தோன்றியவர்கள் என்று சொல்கிறார்கள்.
இப்போது போம் நாகாஸ் பழங்குடியினர் கிறித்துவ மதத்திற்கு மாறி நாகரீகம் அடைந்திருந்தாலும், அவர்களுடைய பண்டிகைக் காலங்களில் பாரம்பரிய உடையான வைஹி-ஆஷாக் அல்லது நெம்பொங்க்-ஆஷாக் அணிந்து உற்சாகத்துடன் கலந்துகொள்கிறார்கள். இந்த பாரம்பரிய ஆடை, ஒரு துண்டு போன்றது, அதனை உடம்பில் உடுத்திக் கொள்கின்றனர்.
போம் நாகாஸ் மக்கள் மிகவும் விமரிசையாக கொண்டாடும் திருவிழா மோன்யூ திருவிழாவாகும். வெயில்காலத்தை வரவேற்றும், குளிர்காலத்திற்கு பிரிவு உபச்சாரமாக நடத்தப்படும் இத்திருவிழா, ஏப்ரல் மாதத்தில் நடைபெறும். போம் நாகாஸ் மக்களின் மிக முக்கிய திருவிழாவாக மோன்யூ திருவிழா விளங்குகிறது.
இயற்கைக்குச் சவால் விடும் சாகசப் பயணிகளுக்கு...
நெடுந்தூர சாகச சாலைகளுக்கு புகழ்பெற்ற ஊர் லாங்லெங். இதில் மிகவும் பிரபலமானது லாங்லெங்கில் இருந்து சங்க்தோங்க்யா செல்லும் சாலை. இந்தச் சாலை மிகவும் முரடாக, குண்டும் குழியுமாக, வளைவு நெளிவுகள் கொண்ட, தூசி பறக்கும் சாலைகயாக அமைந்துள்ளது.
கார் மற்றும் இருசக்கர வாகனங்களைக் கொண்டு இந்தச் சாலையில் பயணிப்பதைப் சாகசப் பயணிகள் பெரிதும் விரும்புவர். உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் இந்த சாகச பயணத்தை மேற்கொள்ள பல்வேறு மக்கள் வருகின்றனர்.