லக்னோ நகரத்தின் முக்கியமான வரலாற்றுச்சின்னங்களில் ஒன்றாக கருதப்படுக் இந்த ரெசிடென்சி எனும் வளாகம் பல கட்டிடங்களை உள்ளடக்கியுள்ளது. இதன் கட்டுமானம் நவாப் ஆசஃப் உத் தௌலாவால் 1775ம் ஆண்டில் துவங்கப்பட்டு நவாப் சதாத் அலி கான் என்பவரால் 1800ம் ஆண்டில் முடிக்கப்பட்டிருக்கிறது.
கோமதி ஆற்றங்கரையில் உள்ள இந்த வளாகம் பின்னாளில் நவாப் அவையில் ஆங்கிலேய அரசின் பிரதிநிதியாக விளங்கிய ஆங்கிலேய தளபதியின் இருப்பிடமாக பயன்பட்டுள்ளது. முதல் இந்திய சுதந்திரப்புரட்சிக்காலத்தில் லக்னோ முற்றுகையின்போது இம்மாளிகை ஒரு முக்கியமான ஸ்தலமாக பங்கு வகித்தது.
இந்த ரெசிடென்சி வளாகத்தின் பெரும்பகுதி இந்தியப்புரட்சியின்போது ஆங்கிலேயர்களுக்கும் சுதந்திர படை வீரர்களுக்கும் இடையே நிகழ்ந்த போரில் சிதைக்கப்பட்டுவிட்டது.
அந்த சேதங்கள் யாவுமே அன்றிருந்த நிலையில் அப்படியே விடப்பட்டுள்ளன. உடைந்த சுவர்கள் மற்றும் பீரங்கி குண்டுகள் துளைத்த அடையாளங்கள் போன்றவற்றை இன்றும் இங்கு காணலாம்.
அழகான புல்வெளிகள் மற்றும் மலர்த்தோட்டங்களால் இந்த வளாகம் சூழப்பட்டிருக்கிறது. ஒரு கல்லறை பூமியுடன் கூடிய சிதிலமடைந்த தேவாலயம் ஒன்றும் இந்த வளாகத்தில் காணப்படுகிறது.
இந்த கல்லறையில் சுமார் 2000 ஆங்கிலேய வீரர்கள், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கல்லறைகள் காணப்படுகின்றன. தினமும் மாலை நேரத்தில் இந்த ரெசிடன்சி வளாகம் குறித்த காட்சிவிளக்கப்படம் ஒன்றும் திரையிடப்படுகிறது.
1857 நினைவு அருங்காட்சியகம் ஒன்றும் இந்த வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் இந்தியாவில் நிகழ்ந்த முதல் சுதந்திரப்புரட்சி குறித்த தகவல்களைக்கொண்ட காட்சிமைப்புகளைக் காணலாம்.