குலாபா எனும் இந்த அழகிய இடம் மணாலியிலிருந்து 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. குளிர்காலத்தில் கடுமையான பனிப்பொழிவின் காரணமாக இப்பகுதியை சென்றடைய முடியாது என்ற போதிலும், மணாலி ரோஹ்தங் சாலையானது பிப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் துவக்கத்தில் குலாபா வரை மட்டும் திறக்கப்படுகிறது. இந்த இடத்திலிருந்து பனி மூடிய ரோஹ்தங் சாலையின் அழகை பார்த்து ரசிக்கலாம்.
முற்காலத்தில் ஜம்மு காஷ்மீர் பகுதியை ஆண்ட குலாப் சிங் மன்னரின் நினைவாக இந்த இடம் அழைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. சீனாவுக்குள் ஊடுறுவும் நோக்கத்துடன் கூடிய அவரது போர்ப்பயணத்தின்போது இப்பகுதியில் அவர் முகாமிட்டிருந்ததாக சொல்லப்படுகிறது.