தீப ஒளி திருநாளாம் தீபாவளி அன்று குளித்து புது ஆடைகள் உடுத்தி, பலகாரம் சாப்பிட்டுவிட்டு, பட்டாசு வெடித்து கொண்டாடுவதே நம் வழக்கம். இதில் ஏதேனும் ஒன்று குறைந்தாலும் கூட, அது தீபாவளி கொண்டாட்டத்தை முழுமையாக்காது, அதிலும் பட்டாசுக்கு மிக முக்கியத்துவம் உண்டு என்றே சொல்லலாம். இந்நிலையில் தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் பல இடங்களில் பட்டாசு வெடிக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது எங்கே என்று தெரிந்துக் கொள்வோம் வாருங்கள்!
குளிர்காலத்தில் அதாவது, அக்டோபர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கு இடையில், காற்று மாசு அளவு கணிசமாக அதிகரிக்கிறது. மேலும், பட்டாசுகளை வெடிப்பது நிலைமையை மோசமாக்குகிறது. அதனால் இந்தியாவில் பல மாநிலங்கள் தீபாவளியின் போது பட்டாசு வெடிக்க முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ தடை விதித்துள்ளன. சில மாநிலங்கள் குறிப்பிட்ட நேரத்தில் பச்சை பட்டாசுகளை வெடிக்க அனுமதித்துள்ளன. விதிகளை மீறுபவர்களுக்கு அபராதமும் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
1) டெல்லி:
டெல்லி அரசு பட்டாசு விற்பனை, கொள்முதல் மற்றும் உற்பத்திக்கு முழு தடை விதித்துள்ளது. ஜனவரி 1, 2023 வரை தலைநகர் தடையை நீக்காது. தடையை மீறி பட்டாசு வெடித்தால்ரூ. 200 அபராதமும் 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என டெல்லியின் சுற்றுச்சூழல் அமைச்சர் அறிவித்துள்ளார். பட்டாசு தயாரித்து விற்பனை செய்பவர்களுக்கு ரூ. 5000 அபராதமும், மூன்றாண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும்.
2) பஞ்சாப்:
மாநிலத்தில் பட்டாசு உற்பத்தி, இருப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது. பச்சை பட்டாசுகள் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை பட்டாசு வெடித்துக் கொள்ளலாம். ஆனால் இடைப்பட்ட நேரத்தில் வெடிக்கக் கூடாது.
3) ஹரியானா
ஹரியானா மாநிலத்தில் இந்த ஆண்டு பட்டாசு உற்பத்தி, விற்பனை மற்றும் கொள்முதல் செய்ய அரசு தடை விதித்துள்ளது. உரிமம் பெற்ற கடைகாரர்கள் பச்சை பட்டாசுகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும், மக்கள் அதனை மட்டுமே அளவாக வெடிக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
4) தமிழ்நாடு
கடந்த நான்காண்டுகளின் போக்கைப் பின்பற்றி, இந்த ஆண்டும் காலையில் ஒரு மணி நேரம், இரவில் ஒரு மணி நேரம் பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள் போன்ற அமைதியான இடங்களில் பட்டாசு வெடிப்பதையும், பட்டாசு வெடிப்பதையும் தவிர்க்குமாறு மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
5) மேற்கு வங்காளம்
கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி அக்டோபர் 24 ஆம் தேதி காளி பூஜையின் போது பச்சை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க மேற்கு வங்க அரசு அனுமதித்துள்ளது. அதே போல் தீபாவளியன்றும் பச்சை பட்டாசுகள் மட்டுமே வெடிக்க அம்மாநிலம் உத்தரவிட்டுள்ளது.