ஆலப்புழா பிரமாண்டமாக தயாராகிவிட்டது! எதற்கு என்று நினைக்குறீர்களா? மாபெரும் சம்பக்குளம் படகு போட்டியை நடத்துவதற்கு தான்! நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்களால் இயக்கப்படும் சுமார் 150 அடி நீளமுள்ள படகுகள் தண்ணீரைப் பிளந்துக் கொண்டு போவதைக் காணும் அனைவருக்கும் உற்சாகம் பெருக்கெடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
கேரளாவில் உள்ள அனைத்து உப்பங்கழிகளும் அறுவடைக் காலத்தில் நடத்தப்படும் உள்ளூர் படகுப் போட்டிகளுக்குப் பெயர் பெற்றவை. சம்பக்குளம் படகுப் போட்டி இந்தப் பருவத்தில் நடத்தப்படும் ஆரம்பப் பந்தயமாகும், இது 500 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.
கொரானா தொற்றால் கடந்த இரு ஆண்டுகளாக போட்டி நடைபெறாத இருந்த நிலையில் இந்த வருடம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த சம்பகுளம் படகு போட்டி இப்பொழுது முழு வீச்சில் நடத்தப்பட தயாராக உள்ளது!

சம்பக்குளம் படகுப் போட்டியின் முக்கியத்துவம்
படகுப் பந்தயம் என்பது பழங்காலத்திலிருந்தே கேரள மக்களைக் கவர்ந்த ஒரு பழங்கால விளையாட்டு ஆகும். புராணத்தின் படி, செம்பகச்சேரி மஹாராஜா தேவநாராயணன் அரச பூசாரியின் அறிவுறுத்தலின்படி அம்பலப்புழாவில் ஒரு கோயிலைக் கட்டினார். இருப்பினும், தெய்வத்தை நிறுவுவதற்கு சற்று முன்பு, தெய்வம் மங்களகரமானது அல்ல என்று அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.
மன்னன் சிரமப்பட்டு தவித்துக் கொண்டிருந்த போது, அவரது மந்திரி குறிச்சியில் உள்ள கரிகுளம் கோயிலில் இருந்து ஸ்ரீ கிருஷ்ணரின் அழகிய சிலையை இங்கே கொண்டு வருமாறு அறிவுறுத்தினார். ஆனால் அந்த சிலை கிருஷ்ணர் அர்ஜுனனிடம் ஒப்படைத்த சிலை என்று புராணங்கள் கூறுகின்றன.
இந்த சிலை நமக்கு வேண்டும் என்று உணர்ந்த ராஜா, அதனை எடுத்துவந்து களைப்பில் இந்த சம்பக்குளத்தில் நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. மறுநாள் காலையில் அந்த இடத்தில் ஆயிரக்கணக்கான படகுகள் கூடியிருந்தன. அனைவரும் சேர்ந்து ஆரவாரத்துடன் கோலாகலமாக சிலையைக் கோயிலுக்கு எடுத்து சென்றனர்.
அன்றிலிருந்து இன்றுவரை இந்த புனித நிகழ்வை கௌரவிக்கும் பொருட்டு, சம்பக்குளத்தில் இந்த மாபெரும் படகு போட்டி மிக பிரமாண்டமாக நடத்தப்படுகின்றது.

சம்பக்குளம் படகுப் போட்டி 2022
ஒவ்வொரு வருடமும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் நடைபெறும் இந்த படகுப் போட்டி இந்த வருடம் ஜூலை 12 ஆம் தேதி வெகு விமர்சியாக நடைபெற உள்ளது. இந்த கண்கவர் பாம்பு படகு போட்டி, மலையாள மாதமான மிதுனத்தை ஒட்டி, 'மூலம்' நாளில், பம்பை ஆற்றில் நடத்தப்படுகிறது. அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில் தெய்வம் நிறுவப்பட்ட நாள் என்பதால் இந்த நாள் புனிதமாக கருதப்படுகிறது.
பந்தயத்திற்கு முன், நீர் மிதவைகள், வண்ணமயமான சித்திரங்களால் அலங்கரிக்கப்பட்ட படகுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வரவேற்கின்றன.
பழங்காலப் படகுப் பாடல்கள் ஒலிக்கப்படுவதால், நீரைப் பிரிக்கும் பாரிய படகுகள் ஒரு உற்சாகமான அனுபவத்தை உருவாக்குகின்றன. பாடல் ஒலிக்க, மேளங்கள் முழங்க வீரர்கள் படகை இயக்கிக் கொண்டு வேகமாக செல்வார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளை ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் மின்னல் வேகத்தில் இழுத்துச் செல்வதை காணும் போது ஆலப்புழாவே விழாக்கோலம் பூண்டு இருப்பதை நாம் காணலாம். அடுத்த சில மாதங்களுக்கு மாநிலம் முழுவதும் படகுப் பந்தய வெறியைத் தூண்டும் நிகழ்வு இதுவாகும்.

சம்பக்குளத்தை எப்படி அடைவது?
நாட்டின் பழமையான வல்லம் காளி பாம்புப் படகுப் போட்டியைக் காண உங்களுக்கும் ஆவலாக உள்ளது, அல்லவா! சம்பக்குளத்திற்கு அருகிலுள்ள ரயில் நிலையம் 15 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஆலப்புழா ரயில் நிலையம் ஆகும். மேலும் சுமார் 78 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கொச்சி சர்வதேச விமான நிலையம் அருகிலுள்ள விமான நிலையம் ஆகும்.
ஆலப்புழா நாட்டின் முக்கிய நகரங்களுடன் சாலை மார்க்கமாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது. எனவே சொந்த கார், டாக்சி அல்லது போது பேருந்துகள் மூலமாக எளிதில் அடையலாம்!



Click it and Unblock the Notifications






