சென்னையின் முக்கிய புறநகர் ரயில் வழித்தடங்களில் பிரதானமான சென்னை பீச் - தாம்பரம் இடையே ஏசி ரயில்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. பயணிகள் மார்ச் 2025 முதல் இந்த ஏசி ரயில்களில் பயணிக்கலாம். அதிக அளவிலான பொதுமக்கள், வேலைக்கு செல்பவர்கள், கல்லூரி மாணவர்கள் பயணிக்கும் இந்த வழித்தடத்தில் ஏசி ரயில்கள் அறிமுகம் செய்யப்படுவதை நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த மக்கள் இனி அடுத்த மாதம் முதல் அதில் பயணிக்கலாம். டிக்கெட் கட்டணம் எவ்வளவு தெரியுமா?
சென்னை புறநகர் ரயில் சேவையில் ஏசி ரயில்கள்
சென்னை மக்களில் பெரும்பாலோனோர் உபயோகிக்கும் புறநகர் ரயில் பாதைகளில் சென்னை பீச்-செங்கல்பட்டு பாதை மிகவும் முதன்மையானது. இந்த பாதையில் இயக்கப்படும் ரயில்களில் ஏசி மின்சார பெட்டிகள் இயக்கப்பட வேண்டும் என்று பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து ஏசி ரயில்கள் இயக்குவது தொடர்பாக ரயில்வே முடிவு செய்தது. முதலில் சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் தற்போது ஏசி ரயில்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

மலிவான கட்டணத்தில் விரைவான பயணம்
சென்னையின் மிக முக்கிய பொது போக்குவரத்தாக மின்சார ரயில் சேவை விளங்கி வருகிறது. சென்னையின் புறநகர் பகுதிகளுக்குள் மலிவான விலையில் வேகமாக பயணம் செய்வதற்கு மிகவும் உதவிகரமாக இருப்பது இந்த மின்சார ரயில் சேவை தான். புறநகர் பகுதி மக்கள் எளிதில் போக்குவரத்து பயணம் மேற்கொள்ள மின்சார ரயில்கள் பயனுள்ளதாக உள்ளன. அதுவும் இந்த ரயிலில் நீங்கள் வெறும் ரூ.5 குறைந்த பட்ச கட்டணமாக கொடுத்து டிக்கெட் வாங்கி பயணிக்கலாம். இப்போது இந்த ரயிலில் புதிய வசதியுடன் நீங்கள் பயணிக்கப் போகிறீர்கள்!
ஒரே நேரத்தில் 5,700 பேர் பயணிக்கலாம்
சென்னை ஐ.சி.எப் தொழிற்சாலையில், தெற்கு ரெயில்வேயில் சென்னை கோட்டத்துக்கு குளிர்சாதன மின்சார ரயில்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றன. சென்னை ரயில்வே கோட்டத்திற்கு என இரண்டு ரயில்கள் தற்போது தயார் செய்யப்பட்டு வருகிறது. பிரதான பணிகள் நிறைவடைந்த நிலையில், இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 12 பெட்டிகளை கொண்ட இந்த குளிர்சாதன வசதி கொண்ட ரெயிலில் 1,320 இருக்கைகள் உள்ளன. ஒரே நேரத்தில் இந்த ரயிலில் 5,700 பேர் பயணம் செய்வதற்கான இடவசதி உள்ளது.
சோதனை ஓட்டம் முடிந்ததும் பயன்பாட்டுக்கு வரும்
இந்த மின்சார ரயில் சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் இன்னும் 2 வாரத்தில் சென்னை ரயில் கோட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. அதன் பிறகு குளிர்சாதன வசதி கொண்ட இந்த ரயில் சோதனை ஓட்டமும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குளிர்சாதன வசதி கொண்ட ரயில் என்பதால், காலை மற்றும் மாலை வேலைகளில் அதிக அளவு இந்த ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படி இருந்தாலும் மார்ச் 2025 இறுதிக்குள் பொதுமக்கள் இந்த ஏசி ரயிலில் பயணம் செய்யலாம்.
டிக்கெட் கட்டணம் எவ்வளவு?
சென்னை புறநகர் ஏசி ரயில்களுக்கான கட்டணம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. தற்போதுள்ள கட்டண அமைப்பின்படி, ஏசி புறநகர் ரயிலுக்கான டிக்கெட் விலை, முதல் வகுப்பு ஏசி அல்லாத உள்ளூர் ரயில் டிக்கெட்டை விட 1.3 மடங்கு அல்லது 2 மடங்கு அதிகமாக இருக்கும் என தகவல்கள் கூறுகின்றன. இந்த ரயில்கள் குறித்த அட்டவணை விரைவில் வெளியாக உள்ளது. புறநகர் ரயில் பயணிகள் வெயிலை சமாளிக்க ஏசி ரயில்கள் சூப்பர் தீர்வாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications



