சென்னை அண்ணாசாலை நந்தனத்தில் அமைந்துள்ள மெட்ரோ தலைமை அலுவலகத்தில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் தயாரிப்பதற்காக 946 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன்படி தயாரிக்கப்படும் முதல் ரயில் பூந்தமல்லி டிப்போவில் ஆகஸ்ட் 2024 இல் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) க்கு வழங்கப்படும். டெஸ்ட் ரன் வெற்றிகரமாக முடிந்தவுடன் அது பயன்பாட்டிற்கு வந்துவிடும் மக்களே!
26 மூன்று பெட்டிகள் கொண்ட டிரைவர் இல்லாத ரயில்களை வழங்குவதற்காக சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து ரூ. 946 கோடி ஆர்டரை Alstom நிறுவனம் பெற்றுள்ளது. பேஸ்-2 ரோலிங் ஸ்டாக் காண்ட்ராக்ட் அக்ரிமென்ட்டின் ஒரு பகுதியான இது நவம்பர் 17 அன்று சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் மற்றும் Alstom நிறுவனம் இடையே கையெழுத்தானது.

CMRL நிர்வாக இயக்குநர் M.A சித்திக் முன்னிலையில் CMRL இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி மற்றும் அல்ஸ்டாம் டிரான்ஸ்போர்ட் இந்தியா லிமிடெட் இன் வர்த்தக இயக்குநர் ராஜீவ் ஜோய்சர் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட நீட்டிப்பு கடந்த ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் மதிப்பு ரூ. 3,770 கோடி ஆகும். இதனிடையே இந்த இரண்டாம் கட்ட விரிவாக்கம் 128 ஸ்டேஷன்களுடன் 118.9 கிலோமீட்டர் நெட்வொர்க்காக திட்டமிடப்பட்டுள்ளது. இது மூன்று காரிடார்களை கொண்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள் தற்போது மிக வேகமாக நடைபெற்று வரும் நிலையில், இரண்டாம் கட்ட செயல்ப்பாட்டின் ஒரு பகுதியாக ஓட்டுனர் இல்லாத ரயில்களை இயக்க CMRL முடிவு செய்துள்ளது. இந்த இரண்டாம் கட்டப்பணிகள் 28 நிலையங்களுக்கு செல்லும் ரயில் சேவை அடக்கியதாகும், அதில் 10 நிலையங்கள் நிலத்தடியில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ. 946 கோடி செலவில் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் கீழ் 80 கிலோமீட்டர் வேகத்தில் இயக்க 26 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை தயாரிக்கும். சேவையின் போது, வாகனங்கள் CMRL இன் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து (OCC) கண்காணிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் முதல் ரயில் பூந்தமல்லி டிப்போவில் ஆகஸ்ட் 2024 இல் CMRL க்கு வழங்கப்படும். இது 14 மாதங்களுக்கு CMRL வசதியில் கடுமையாக சோதிக்கப்பட்டப் பின்னரே பொது மக்களின் உபயோகத்திற்கு திறக்கப்படும். இதில் மற்ற அமைப்புகள் மற்றும் சேவை சோதனைகளுடன் ஒருங்கிணைப்பு சோதனையும் அடங்கும். ஒப்பந்தத்தின் கீழ் அடுத்தடுத்த ரயில்கள் நவம்பர் 2024 முதல் ஆகஸ்ட் 2025 வரை டெலிவரி செய்யப்படும் மற்றும் தளத்தில் சோதனை செய்யப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே மக்களே, இனி சென்னையில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில்களில் நீங்கள் கூடிய சீக்கிரம் பயணிக்கலாம்!



Click it and Unblock the Notifications





