1914 இல் கட்டப்பட்ட பாம்பன் பாலம் பழுதடைந்து போக்குவரத்திற்கு உகந்ததாக இல்லை என கடந்த 2019 ஆம் ஆண்டு புதிய பாலம் கட்டும் பணியை ரயில்வே நிர்வாகம் துவங்கியது. ரூ. 545 கோடி செலவில், 101 தூண்களுடன் இந்தப் பாலம் கட்டப்பட்டு திறப்புவிழாவுக்கு தயாராக இருக்கும் இந்த நிலையில், பாம்பன் பாலம் தரமற்ற நிலையில் கட்டப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன!
புதிய பாம்பன் பாலத்தில் குளறுபடிகள்
ராமேஸ்வரத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தில், பெரும் குறைபாடுகள் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ராமேஸ்வரத்தில் உள்ள புகழ்பெற்ற பாம்பன் பாலம் பழுதடைந்ததால், அதற்கு பதிலாக புதிய பாலம் கட்டப்பட்டு வந்தது. இதன் பெரும்பாலான கட்டுமான பணிகள் முடிந்துள்ள நிலையில், சோதனை ஓட்டமும் நடைபெற்று வந்தது. இந்நிலையில், 101 தூண்கள் உடைய பாம்பன் ரயில்வே பாலத்தை கடந்த நவம்பர் 13 மற்றும் 14ம் தேதிகளில் சவுத்ரி தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, புதிய பாலத்தின் மீது 90 கி.மீ., வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை செய்யப்பட்டது. அதன் முடிவில் பாலம் தரக்குறைவாக கட்டப்பட்டு இருப்பதை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அறிந்த பிறகும் அதில் ரயில் இயக்க அனுமதி அளித்துள்ளார் என்பது அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக இருக்கிறது.

அன்றையக் காலத்தில் ஒரு பொறியியல் அதிசயம்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவை இணைக்கும் பாம்பன் புதிய கடல் பாலம், இந்திய ரயில்வேயின் பொறியியல் திறமைக்கு சான்றாக உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 1914-ஆம் ஆண்டு ராமேஸ்வரம் தீவை இணைக்கும் வகையில், மண்டபத்திலிருந்து பாம்பன் கடலில் ஆங்கிலேயர் காலத்தில் ரயில் பாலம் கட்டப்பட்டது. 110 ஆண்டுகளைக் கடந்த நிலையில், கடல் அரிப்பு, அவ்வப்போது ஏற்படும் கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அப்பாலத்தில் ரயில்கள் செல்வது நிறுத்தப்பட்டு, பழைய பாலம் கைவிடப்பட்டது.
முழு வீச்சில் தயாரான புதிய பாம்பன் பாலம்
இந்தநிலையில், சுமார் 550 கோடி ரூபாய் செலவில் புதிய ரயில் பாலம் கட்ட ரயில்வே அமைச்சகத்தால் முடிவு செய்யப்பட்டு, கடந்த 2019 ஆம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது. ஆர்.வி.என்.எல் எனும் ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் என்ற நிறுவனத்தால் புதிய பாம்பன் பாலம் அமைக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. ஆர்.டி.எஸ்.ஓ எனப்படும் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிறுவனத்தின் அங்கீகாரத்துடன் பாலத்திற்குரிய அனைத்து தளவாடங்களும் உருவாக்கப்பட்டன.

இந்தியாவின் முதல் செங்குத்து தூக்குப்பாலம்
கடலுக்குள் அமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் செங்குத்து தூக்குப்பாலம் என்ற பெருமையோடு பாம்பன் ரயில் பாலத்தில் ஏறக்குறைய அனைத்துப் பணிகளும் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், கடந்த நவம்பர் 13-14 ஆம் தேதிகளில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி, பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ஆய்வுகளை மேற்கொண்டார். இந்நிலையில் இந்திய ரயில்வே வாரியத்தின் செயலாளருக்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி அனுப்பியுள்ள கடிதத்தில், ரயில் போக்குவரத்து தொடங்குவதற்கு முன்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும், பாம்பன் புதிய பாலத்தில் மணிக்கு 50 கி.மீ. வேகத்திலும், மற்ற பகுதிகளில் மணிக்கு 75 கி.மீ. வேகத்திலும் இயக்கலாம் என பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஒப்புதல் இல்லாமல் கட்டப்பட்ட கட்டமைப்பு
ரயில்வே கட்டுமான பணிக்கு ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு அமைப்பிடம் தொழில்நுட்ப ஆலோசனை பெறுவது அவசியம். ஆனால், பாம்பன் பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள செங்குத்தாக உயரும் தண்டவாளம் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு நிர்ணயித்த தரத்திற்கு அமைக்கப்படவில்லை. விசாரணையில் செங்குத்தாக உயரும் தண்டவாள வடிவமைப்புக்கும், தமக்கும் தொடர்பு இல்லை என தரக்கட்டுப்பாட்டு அமைப்பு கூறியுள்ளது. பாம்பன் பாலத்தின் கட்டுமானத்திற்கு முன் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு அமைக்கும் நடைமுறைகளையும் பின்பற்றவில்லை. தாங்கள் வகுத்த வழிகாட்டு நெறிமுறைகளை ரயில்வே வாரியமே மீறியிருப்பது துரதிர்ஷ்டவசமானது.
உடனே இதனை சரி செய்ய வேண்டும்
பெரும் பொருட்செலவில் கட்டப்பட்டுள்ள பாலத்தில் ஏராளமான குறைபாடுகள் உள்ளதால் ரயில் இயக்குவதை ஒத்திவைக்க கோரிக்கை எழுந்துள்ளது. பாலத்தின் தரத்தினை முழுமையாக ஆராய வேண்டும் எனவும் சமூக நல ஆர்வலர்கள் வலியுறுத்த தொடங்கியுள்ளனர். ராமேஸ்வரம் கோயிலுக்கு செல்லும் ஏராளமான பக்தர்களுக்கு இந்த பாலம் தான், பிரதானமான இணைப்பாகும். அப்படி இருக்கையிலும், பாலத்தின் தரத்தில் சமரசம் செய்யப்பட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தனை கோடி செலவு செய்து கட்டியும் கூட, பொதுமக்கள் உயிர் மீது அலட்சியமா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்



Click it and Unblock the Notifications






