வருடாந்திர மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்ப சுவாமி கோவில் நடை நவம்பர் மாதம் 16 ஆம் தேதி திறக்கப்பட்டதில் இருந்து பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி நடப்பாண்டில் தற்போது வரை 14 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பக்தர்களின் கூட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்துக் கொண்டே வருவதால், தேவசம் போர்டு திணறி வருகிறது!
தினமும் 1.25 லட்சம் பேர் சுவாமி தரிசனம்
மண்டல மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட பின் பல மாநிலங்களில் இருந்து தினமும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். 1.25 லட்சம் பேர் வரை தினமும் தரிசனம் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் கடந்த சில நாட்களாக 10 முதல் 14 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சபரிமலையில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த தரிசன நேரத்தை ஒரு மணி நேரம் அதிகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

திணறி வரும் தேவசம் போர்டு
தொடக்கத்தில் பக்தர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்து வந்தது. கடந்த வாரத்திலிருந்து பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 90 ஆயிரம் பக்தர்கள் வரை சபரிமலையில் தரிசனத்துக்காக சென்று வருகின்றனர். ஒரு நிமிடத்தில் 75 பேர் பதினெட்டாம் படி ஏறிச்செல்வதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதிலும் முந்தைய நாள்களில் தரிசனம் செய்யாதவர்களும் மறுநாள் தரிசனம் செய்வதால், சன்னிதானத்தில் கூட்டம் அலை மோதுகிறது.
திருப்பதி போன்று வளாகங்கள் அமைக்க முடிவு
நடை திறக்கப்பட்ட நாள் முதலே சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. வழக்கமாக டிசம்பர் மாதத்தில்தான் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு நவம்பர் மாதத்திலேயே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் போலீசாரே திணறி வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி போன்று வளாகங்களில் பக்தர்களை தேக்கி வைத்து அனுப்பும் முறையை தேவசம்போர்டு கையில் எடுத்துள்ளது.

உயிரிழந்த தமிழக சிறுமி
சேலம், பாப்பநாயக்கம்பட்டியைச் சேர்ந்த குமார் என்பவரின் 10 வயது மகள் பத்மஸ்ரீ சபரிமலை கோயிலுக்கு சாமி தரிசனத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அப்பாச்சிமேடு பகுதியில் பத்மஸ்ரீ திடீரென மயங்கி விழுந்தார். அவருக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். பத்மஸ்ரீக்கு ஏற்கெனவே இதயம் சம்பந்தமான பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அதே சமயம் கூட்ட நெரிசல் காரணமாக அவர் இறந்தாரா? என்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஆன்லைன் புக்கிங்கை குறித்த தேவசம் போர்டு
இதற்கிடையே சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஒரு நாள் 90,000 பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதி இருந்தது. அது 80,000-ஆக குறைக்கப்பட்டுள்ளது. கேரள அரசு, தேவசம்போர்டு அமைச்சர் மற்றும், தேவசம்போர்டு தலைவர் ஆகியோர் ஆலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஸ்பாட் புக்கிங் வழக்கம்போல செயல்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
என்ன செய்தாலும் தினமும் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கேரளா போலீசார் மற்றும் தேவசம் போர்டு என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பி வருகின்றனர்!



Click it and Unblock the Notifications




