தென் கயிலை என்று போற்றப்படும் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிப்பதற்கான நேரம் இது. ஆண்டுதோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை கோவிலுக்கு பக்தர்கள் மலையேற அனுமதி அளிக்கப்படுகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான வெள்ளியங்கிரி மலையேறும் அனுமதியை அரசு தற்போது வழங்கியுள்ளது! நாம் ஏன் நாம் அனைவரும் கட்டாயம் வெள்ளியங்கிரி மலை ஏற வேண்டும் என்று தெரியுமா? ஒரு காரணம் இருக்கிறது!
'தென் கயிலாயம்' என போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைகள்
எங்கும் நிறைந்திருக்கும் அந்த ஆதி பரம்பொருளான சிவபெருமான் பல ஆலயங்களில் நமக்கு காட்சி கொடுத்தாலும், கயிலாயத்தில் தான் நிரந்திரமாக குடிக் கொண்டிருக்கிறார். இமயமலை மட்டுமே கயிலாயம் என்று குறிப்பிடப்படுவதில்லை. ஆம் இமயமலை வட கயிலை என்றும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலைகள் தென் கயிலை என்றும் அழைக்கப்படுகின்றன. தான் காப்பாற்ற எண்ணி வந்த பெண்ணின் உயிரை காக்க முடியாத கோவத்தினாலும் சோகத்தினாலும் மன வருத்ததுடன் இங்கு சிவபெருமான் அமர்ந்த இடமே "வெள்ளியங்கிரி மலைகள்". அவர் இங்கு மன சாந்தியுடன் இங்கு அமராவிட்டாலும் கூட, இங்கு வரும் பக்த பெருமக்களுக்கு மன நிம்மதியும், அமைதியையும் வழங்கி ஆசி புரிகின்றார்.
அனைவரும் கட்டாயம் காண வேண்டிய இடம்
நீங்கள் ஆன்மீக வாதியாகவோ அல்லது சாகச விரும்பியாகவோ அல்லது இயற்கை ஆர்வலராகவோ, ஏதோ ஒரு விதத்தில் வாழ்வில் ஒரு முறையேனும் தென் கயிலை என போற்றப்படும் கோயம்புத்தூரின் வெள்ளியங்கிரி மலைகளுக்கு வர வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரிக்கு பின்னர் இந்த மலையேற பொது மக்களுக்கு அனுமதி கொடுக்கப்படும். அதே போல இந்த ஆண்டும் பிப்ரவரி 1 முதல் வெள்ளியங்கிரி மலை ஏற அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சிவபெருமானை தரிசிக்க கூடும் கூட்டம்
இத்தகைய சிறப்புமிக்க வெள்ளியங்கிரி கோயிலுக்கு தமிழகத்தில் இருந்து மட்டும் இன்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிகின்றனர். கடந்த ஆண்டு மூச்சு திணறல் உள்ளிட்ட பல காரணங்களால் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதனை தொடர்ந்து இந்த ஆண்டும் வெள்ளியங்கிரியில் மலை ஏறுபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் வனத்துறை சார்பில் விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை மலையேற்றத்திற்கு அனுமதி வழங்கப்படும் நிலையில் இந்த ஆண்டிற்கான மலையேற்றம் தற்போது தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை மலையேற வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. 2025 ஆம் ஆண்டுக்கான அனுமதியுடன் முக்கிய செய்திகள் வெளிவந்துள்ளன.
இதுகுறித்து, ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்ட செய்திக்குறிப்பில்
· 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் குழந்தைகள், உயர் ரத்த அழுத்த நோய், இதயநோய் பாதிப்பு, நுரையீரல் நோய், சிறுநீரக கோளாறுகள், சர்க்கரை நோய், வலிப்பு நோய், ரத்த சோகை உள்ளவர்கள் மற்றும் இதர நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மலையேற்ற பயணத்தை மிகவும் அதிக கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும்.
· மலையேற்றத்திற்கு செல்லும் பக்தர்கள் தனியாகச் செல்லாமல் குழுவாகவும், அத்தியாவசியமான பொருள்கள் குடி தண்ணீர் உணவு மற்றும் மருந்து பொருட்களை உடன் எடுத்து செல்ல வேண்டும்.
· மலையேற்ற பகுதியில் குளிர் அதிகமாக இருப்பதால் தேவையான பாதுகாப்பு உடைகள் மற்றும் விரிப்புகள் உடன் எடுத்து செல்ல வேண்டும்.
· மலையேற்றத்திற்கு முன்பு கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ குழுவின் மூலம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருத்துவ குழுவின் அனுமதி பெற்ற பின்னரே மலையேற அனுமதிக்கப்படுவார்கள்.
· பயணத்தின் பொழுது உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க தேவையான அளவு குடிநீர் பருகு வேண்டும்.
· மலையேற்றத்தின் போது தலைவலி, நெஞ்சுவலி, தலைசுற்றல், மூச்சுத்திணறல் மற்றும் இதர அசௌகரியங்கள் ஏற்பட்டால் பயணத்தை தொடராமல் உடனடியாக கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ குழுவினை அணுகலாம் என கூறப்பட்டுள்ளது.
· இதேபோல, போளுவாம்பட்டி வனத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மலை ஏற்றம் மேற்கொள்வோர் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மலை ஏற்றம் செய்பவர்கள் அடிவாரத்தில் உள்ள சிறப்பு மருத்துவ முகாமில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications








