எதிர்பார்த்ததைவிட வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே வருகை தந்துவிட்டது, கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை உட்பட பல கடலோர மாவட்டங்களுக்கு கனமழையை கொண்டு வந்தது. இந்நிலையில், அக்டோபர் 23 ஆம் தேதி வங்கக்கடலில் புதிதாக 'டானா' புயல் மையம் கொள்ளும் எனவும், இது தீவிர புயலாக மாறி அக்டோபர் 24 ஆம் தேதி இரவு கரையை கடக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது! இதனால் சென்னைக்கு ஏதாவது பாதிப்பு இருக்குமா? பாதிப்படையக்கூடிய இடங்கள் என்னென்ன என்று பார்ப்போம்!
வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்
அடுத்த 24 மணி நேரத்தில் கிழக்கு-மத்திய வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அக்டோபர் 22 காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அக்டோபர் 23 ஆம் தேதி கிழக்கு-மத்திய வங்காள விரிகுடாவில் ஒரு சூறாவளி புயலாகவும் வலுவடையும். வங்கக் கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி, அடுத்த இரண்டு நாட்களில் புயலாக வலுப்பெற்று, அக்டோபர் 24, வியாழன் அன்று மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகிய கடலோர மாநிலங்களில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், கனமழைக்கு வழிவகுக்கும்.
ஒடிசா மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்
ஒடிசா-மேற்கு வங்கக் கடற்கரையில் காற்றின் வேகம் அக்டோபர் 23 முதல் மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசும் என்றும், அக்டோபர் 24 இரவு முதல் அக்டோபர் 25 காலை வரை மணிக்கு 120 கிமீ வேகத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மீனவர்கள் அக்டோபர் 23 ஆம் தேதி கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்திய அரசு
ஒடிசா அரசு புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. தலைமைச் செயலாளர் மனோஜ் அஹுஜா மூத்த அதிகாரிகளுடன் ஒரு ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் வெளியேற்றங்கள் தேவைப்பட்டால் குடியிருப்பாளர்கள் தங்குவதற்கு சூறாவளி முகாம்களை தயார் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்ல, மீட்புக்குழு, நிவாரணம், தங்குமிடங்கள் உள்ளிட்டவையும் தயாராக இருப்பதாக ஒரிசா அரசு தெரிவித்துள்ளது.
ஒரிசா, மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கும்
டானா புயல் குறித்து முக்கியமான தகவல்களை டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் பகிர்ந்திருக்கிறார். அதில், மேற்கு வடமேற்கு திசையில் டானா புயல் நகர்ந்து கொண்டிருக்கிறது. இது வடக்கு ஒடிசா மற்றும் வங்கதேச கடற்கரை ஆகியவற்றுக்கு இடையில் மேற்குவங்க மாநிலத்தின் சுந்தரவனக் காடுகளை ஒட்டி வரும் 24ஆம் தேதி மாலை அல்லது இரவில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னைக்கு மழையா?
டானா புயல் தமிழ்நாட்டிற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஏனென்றால், ஒடிசா, மேற்குவங்கம் நோக்கி நகர்வதால் தமிழ்நாட்டில் எந்த தாக்கமும் இருக்காது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒடிசாவில் புரி அருகே இந்த புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் தென்னிந்திய தீபகற்பத்தில் ஈரப்பதத்தை கொண்டு வரும். அதுமட்டுமின்றி அடுத்த 4 அல்லது 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழையை நீங்கள் தமிழ்நாட்டில் எதிர்பார்க்கலாம் என்று வானிலை அறிக்கை கூறுகிறது.
அல்லது சென்னைக்கு வெயிலா?
அது மட்டுமல்ல, மழை கொண்ட மேகங்கள் ஒடிசா, மேற்கு வங்கம் நோக்கி நகர்ந்து செல்கின்றன. இதனால் சென்னைக்கு வெயில் அடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது தொடர்பான சென்னை வானிலை மைய ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவலில், இந்த புயல் காரணமாக சென்னை நேரடியாக பாதிக்காது. ஆனால் சென்னைக்கு லேசான மழை இருக்கும்.
எது எப்படியோ, சென்னைக்கு தற்போதைய நிலையில் எந்த பாதிப்பும் இல்லை!



Click it and Unblock the Notifications





