பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியாக தமிழகத்தில் நடத்தப்படும் காளைகளை அடக்கும் விளையாட்டான ஜல்லிக்கட்டு நவீன காலத்தில் காணப்படும் பழமையான பண்டைய விளையாட்டுகளில் ஒன்றாகும். வீரமும், பாசமும், வரலாறும் நிறைந்த இந்த உலகப்புகழ் பெற்ற விளையாட்டான ஜல்லிக்கட்டுவுக்காக தமிழகம் முழு வீச்சில் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான மாடுகளும் மாடுபிடி வீரர்களும் இதில் கலந்துக்கொள்ள விண்ணப்பித்துள்ளனர். வாடிவாசல் திறந்தவுடன் சீறிக்கொண்டு பாயும் காளைகளை, திமிலைப் பிடித்து அடக்கி வெற்றி வாகை சூட்டுவது ஒரு தனி ருசி தானே! தமிழ்நாட்டின் பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது, அந்த இடங்கள் மற்றும் அதனைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ!

மணமகன்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள்
தொன்று தொட்டு பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாகும். இதில் கலந்துக் கொள்ளும் அனைவர்களும் வீரர்கள் ஆதலால் இது போர் வீரர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தது. புராணங்களின் படி, ஆதி காலத்தில் பெண்கள் தங்கள் கணவனைத் தேர்ந்தெடுக்க இந்த விளையாட்டு பயன்படுத்தப்பட்டது. வெற்றியாய சூடும் "மாடுபிடி வீரர்ககள்" மணமகன்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். காலப்போக்கில் சல்லிக்காசு, தங்க நாணயம், வெள்ளி நாணயங்கள் பரிசாக கொடுக்கப்பட்டு இப்போது கார், பைக், மொபைல் போன், ரொக்கம் ஆகியவை பரிசாக வழங்கப்படுகிறது.

தனித்துவமான தமிழக ஜல்லிக்கட்டு
ஸ்பெயினில் நடைபெறும் காளை அடக்குதல் போலவே இது இருந்தாலும், ஜல்லிக்கட்டு மிகவும் தனித்துவமானது. ஐரோப்பாவில் நடைபெறும் காளை சண்டையில் காளைகள் கொல்லப்படுகின்றன. மாறாக ஜல்லிக்கட்டுவுக்காக வளர்க்கப்படும் காளைகள் பிரத்யேகமாக சிறப்பு கவனத்துடனும் உணவுடனும் வளர்க்க்கப்படுகின்றன.
ஜல்லிக்கட்டில் காளைகள் கொல்லப்படுவதில்லை, மாடவர்கள் எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தக்கூடாது என்பது விதிமுறை. பல விலங்கு ஆர்வலர்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆபத்தான விளையாட்டை எதிர்க்கின்றனர், ஆனால் இதுவரையில் அதனை தடுக்க முடியவில்லை, இனிவரும் காலங்களில் முடியாது என்பதும் உண்மை. இதனால் அதில் கலந்துக் கொள்ளும் காளைகளின் வீரியம் அதிகமாகிறதே தவிர, விலங்குகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படுவது இல்லை.

வீரம் நிறைந்த ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டில் சீறிப்பாயும் காளைகள் திறந்தவெளியில் ஓட வைக்கப்படுகிறது. மாடுபிடி வீரர்கள் வெறுங்கையுடன், அதன் கொம்புகளைக் கட்டுப்படுத்தி அதை அடக்க முயற்சிக்கின்றனர். வெற்றியாளர் ஒரு பரிசைப் பெறுகிறார், இது பொதுவாக காளையின் கொம்புகளுடன் கட்டப்படுகிறது. இந்த விளையாட்டில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கிறார்கள். சில நேரங்களில், ஒன்றுக்கும் மேற்பட்ட காளைகளை ஒரே நேரத்தில் அவிழ்த்து விடப்படுகிறது.

ஜல்லிக்கட்டு காளைகளின் பிரத்யேக உணவுகள்
புதிய புல் சுருள்கள், ஒரு பெரிய வாளி நிறைய அரிசி தவிடு மற்றும் ஏராளமான தண்ணீருடன் கருப்பு மற்றும் சிவப்பு உளுந்து கொடுக்கப்படுகிறது. பருத்தி விதை மற்றும் சோளத்தால் செய்யப்பட்ட ஒரு பெரிய வைக்கோல், பச்சை நெல், புழுங்கல் அரிசி தவிடு, மிளகு, வெற்றிலை மற்றும் தீவனம் காளைகளுக்கு வழங்கப்படுகிறது.
காளைகளுக்கு காலை, மதியம், மாலை என ஒரு நாளைக்கு மூன்று சதுர வேளை என நேர்த்தியாகப் பிரித்து உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. அது மட்டுமின்றி உடலுறுதிக்காக நடைபயிற்சி, நீந்துதல், ஓட வைப்பது ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அவ்வப்போது மருத்துவரை ஆணுகி காளைகளின் உடல் நலமும் கண்காணிக்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பது ஒரு பெருமையாக தமிழ்நாட்டில் பாரக்கப்படுகிறது.

ஜல்லிக்கட்டு விதிமுறைகள்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு வெகு விமர்சியாக நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு ஜனவரி 8 அன்று புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் நடந்து முடிந்தது.
இந்நிலையில் அதில் கலந்துக்கொள்ளும் மாடுபிடி வீரர்களும், காளைகளும் ஏகப்பட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டுமாம். காளைகள் 8 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும், நாட்டு இன காளைகளுக்கு மட்டுமே அனுமதி, அரசியல் கட்சி பேனர்கள் வைக்க கூடாது, மாடுபிடி வீரர்களின் வயது 21 முதல் 41 வரை இருக்க வேண்டும். காளைகள் டோக்கன்படி மட்டுமே அவிழக்கப்பட வேண்டும் போன்ற பல விதிமுறைகள் இதில் இடம் பெற்றுள்ளன.

ஆயிரக்கணக்கில் குவிந்த விண்ணப்பங்கள்
ஜனவரி 15, 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாடு பிடி வீரர்கள், காளை உரிமையாளர் ஆகியோர் ஆன்லைனில் முன்பதிவு செய்திருக்க வேண்டும். இதற்கான ஆன்லைன் முன்பதிவு சேவை ஜனவரி 10 ஆம் துவங்கி ஜனவரி 12 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 9699 காளைகளும், 5,399 மாடு பிடி வீரர்களும் என மொத்தம் 15,098 விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன. இது கடந்த எல்லா ஆண்டுகளையும் விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

2023 இல் ஜல்லிக்கட்டு நடைபெறும் பிரபலமான இடங்கள்
1. அலங்காநல்லூர், மதுரை
2. அவனியாபுரம், மதுரை
3. திருவப்பூர், புதுக்கோட்டை
4. தம்மம்பட்டி, சேலம்
5. பாலமேடு, மதுரை
6. ஸ்ராவயல், காரைக்குடி
7. கண்டுப்பட்டி, சிவகங்கை
8. பல்லவராயன்பட்டி, கம்பம்
மேற்கண்ட இடங்களில் ஏதேனும் ஒரு இடம் உங்கள் இருப்பிடத்திற்கு அருகில் இருந்தால் அல்லது இந்த உற்சாகமான விளையாட்டை நேரில் காண வேண்டும் என்ற ஆசை இருந்தால் கட்டாயம் இதைக் கண்டு களியுங்கள். மிகவும் ஆரவாரமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!



Click it and Unblock the Notifications






