இப்பொழுதுதான் மெது மெதுவாக இயல்பு நிலை உலகெங்கும் திரும்பிக் கொண்டிருக்கிறது. வரவிருக்கும் புத்தாண்டை சிறப்பாக வரவேற்க எல்லோரும் தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், மீண்டும் கொரோனா பரவி கொண்டிருக்கும் செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது இந்தியாவிலும் தாக்கத்தை காட்ட தொடங்கியுள்ளது, இதனால் பல்வேறு மாநிலங்களிலும் கட்டுப்பாடுகளை தீவிரமாக்கும்படி மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதனால் தமிழகத்திலும் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படுகிறது. இது குறித்த மேலும் பல தகவல்கள் கீழே!
சுற்றுலாத் தலங்களில் கட்டுப்பாடுகள்
சீனாவிலும் பிற நாடுகளிலும் சமீபத்திய கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இது விரைவில் பரவும் தன்மைக் கொண்ட புதிய கொரானா வைரஸ் ஆன ஒமிக்ரான் B 7 ஆகும். இது கொரோனாவைக் காட்டிலும் வீரியம் வாய்ந்தது எனவும், இதனால் மக்கள் அனைவரும் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென உலக சுகாதார மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
கொரோனா மிகவும் வேகமாக பரவி வருவதைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்கள் அனைத்திலும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக கவசம் அணிவது, சானிடைசர் உபயோகிப்பது, கொரோனா பரிசோதனை செய்துக் கொள்வது இதில் அடங்கும். இதனால் தமிழக சுற்றுலா வருவாய் கேள்விக்குறியாகும் நிலைக்கு செல்ல வாய்ப்புள்ளது.
இந்திய அளவில் முதலிடம் பிடித்த மாமல்லபுரம்
2022 ஆம் ஆண்டில் வெளி நாட்டினரால் இந்தியாவில் அதிகம் பார்வையிடப்பட்ட சுற்றுலாத் தலங்களில் தமிழகத்தின் மாமல்லபுரம் முதலிடம் பிடித்தது. எப்பொழுது முதலிடம் பிடிக்கும் தாஜ்மஹால் இரண்டாம் இடத்திற்கு சென்றது. இதற்கு காரணம் சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் என்று கூறப்பட்டது. எது எப்படி இருந்தாலும், இந்தியாவில் வெளி நாட்டினரால் அதிகம் பார்வையிடப்பட்ட சுற்றுலாத் தலங்களில் மதுரை, தஞ்சை பெரிய கோவில் ஆகியவையும் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள்
கடந்த சில நாட்களில் தமிழகத்தில் தினமும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை 10-க்கும் கீழே குறைந்துள்ளது. மேலும் பல நாடுகளில் கோவிட் -19 தொற்று வேகமாக அதிகரித்து வருவதால் இதனைக் கண்டு நாம் பீதியடைய தேவையில்லை என்று தமிழ்நாடு சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. கடந்த பத்து நாட்களாக தினசரி வழக்குகள் 10-க்கும் குறைவாக உள்ளன, கடந்த 8 மாதங்களில் வைரஸால் எங்களுக்கு எந்த மரணமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் கட்டாய கொரோனா பரிசோதனை
சீனா, ஹாங்காங் மற்றும் தெற்காசிய நாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளை கொரோனா பரிசோதனை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என தமிழக சுகாதார துறை, மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது. 2020 ஜனவரியில் இருந்து 7 கோடிக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் இதுவரை 35 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் 38,049 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எது எப்படி இருந்தாலும் நீங்கள் வெளியே செல்லும் போது கை கழுவதல், தேவையின்றி முகத்தை தொடுவது தவிர்ப்பது, சானிடைசர் உபயோகிப்பது, முக கவசம் அணிவது, தனி மனித இடைவெளி கடைபிடிப்பது என ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!