பங்குனி உத்திரம் போல ஒரு நன்னாள் தமிழர்களுக்கு இல்லை என்றே சொல்லலாம். குறிப்பாக திருமணம் ஆக வேண்டும் என்று நினைப்பவர்களும், திருமணம் ஆன தம்பதிகள் ஒற்றுமையாக வாழ்வதற்கும் இந்த நந்நாளில் விரதமிருந்து தெய்வங்களை வழிப்பட்டால், சகல சௌபாக்கியங்களும் பெற்று சீரோடு சிறப்போடும் வாழலாம் தெரியுமா அன்பர்களே! 2024 ஆம் ஆண்டு பங்குனி உத்திரம் எப்போது? எந்தெந்த கோயில்களுக்கு செல்ல வேண்டும் என்று பார்ப்போம் வாருங்கள்!
பங்குனி உத்திரம் போல ஒரு நன்னாள் வேறு எதுவும் இல்லை
தமிழ் மாதங்களில் கடைசி மாதமான பங்குனி மாதத்தில் வரும் பௌர்ணமி நாளில் உத்திரம் நட்சத்திரமும் சேர்ந்து வரும், அந்த திருநாள் தான் பங்குனி உத்திரம். பங்குனி உத்திரம் என்பது சாதாரண ஒரு நாள் அல்ல.

1. அன்னை மீனாட்சியும், அப்பன் சுந்தரேஸ்வரரும் திருமணம் செய்து கொண்ட நன்னாள் பங்குனி உத்திரம் தான்.
2. சிவபெருமானை உருக்கமாக வேண்டிய ரதியின் தவத்திற்கு இணங்கி மன்மதன் உயிர் பெற்ற நாளும் இது தான்.
3. முருகப்பெருமான் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட பொன்னாளும் இது தான்.
4. பங்குனி உத்திர விரதமிருந்து தான் மஹாலட்சுமி தேவி திருமாலின் மனதில் நிரந்தர இடம் பெற்றாராம்.
5. ஸ்ரீராமர் - சீதா தேவி திருமணம் நடைபெற்ற நாளும் பங்குனி உத்திரம் தான்.
6. பங்குனி உத்திரம் என்பது தமிழ் கடவுளாகிய தமிழ் கடவுள் முருகனின் சிறப்புக் குரிய விரத தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தினத்தில் காவடி எடுப்பது, விரதமிருந்து பால் குடம் எடுப்பது ஆகியவை பல பலன்களை கொடுக்கும் என்பது ஐதீகம்
திருமணத்தடை நீக்கும் பங்குனி உத்திர திருநாள்
பல்வேறு தெய்வங்களுக்கும் திருமணம் ஆன திருநாள் என்பதால் பங்குனி உத்திரத்தில் விரதமிருந்து கோயிலுக்கு சென்றால் அடுத்த பங்குனி உத்திரத்திற்குள் நீங்களும் தம்பதிகளாக கோயிலுக்கு செல்லலாம். அதாவது பங்குனி உத்திரத்தன்று கன்னிப் பெண்கள் கல்யாண விரதம் கடைப்பிடித்து அருகில் உள்ள ஆலயங்களுக்கு சென்று திருமணக் கோலத்தில் உள்ள சிவன்-பார்வதி, திருமால்-மகாலட்சுமி, முருகன்-தெய்வானை போன்ற கடவுள்களை தரிசித்தால் கூடிய விரைவில் திருமண வைபோகம் கிடைக்கும்.
அதுமட்டுமல்லாமல், திருமணம் ஆன தம்பதிகள் 'ஒற்றுமையாக வாழ வேண்டும், கணவர் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும், நல்லபடியாக குழந்தைகள் பிறக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டு கோயிலுக்கு சென்று வருவது சிறப்பு பலன்களை வழங்கும்.

பங்குனி உத்திரம் 2024
மார்ச் 24ம் தேதி (வரும் ஞாயிற்றுக்கிழமை) காலை 8.46 மணிக்கு உத்திர நட்சத்திரமும், காலை 11.17 மணிக்கே பௌர்ணமி திதியும் தொடங்குகிறது. பௌர்ணமி திதி வரும் 25ம் தேதி ( திங்கள்கிழமை) பகல் 1.16 மணி வரையும், உத்திர நட்சத்திரம் 25ம் தேதி காலை 11.19 மணி வரை உள்ளது. பஞ்சாங்கத்தின்படி, ஒரு நாளில் சூரியன் உதயமாகும்போது எந்த திதியும், நட்சத்திரமும் உள்ளதோ அதே திதியும், நட்சத்திரமும்தான் அன்றைய தினம் முழுவதும் கணக்கில் கொள்ளப்படும். இதன் காரணமாகவே, 25ம் தேதி பங்குனி உத்திரமாக கணக்கில் கொள்ளப்பட்டு கொண்டாடப்படுகிறது.
எப்படி பூஜை செய்வது
பங்குனி உத்திரத்தன்று அதிகாலையில் எழுந்து விரதம் இருந்து நமக்கு விருப்பமான தெய்வத்தை நினைத்து பூஜை செய்து வழிபட்டால் கணவன் - மனைவி ஒற்றுமை ஏற்படும், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள், திருமணம் ஆகாதவர்களுக்கு அவரின் விருப்பம் போல் திருமண வாழ்க்கை அமையும். தெய்வ அருளால் பிறப்பு-இறப்பில் இருந்து விடுபட்டு நற்கதி அடைய முடியும். நோய்கள் நீங்கும், நல்ல குழந்தை செல்வங்கள் அமையும், செல்வ வளமும், மகிழ்ச்சியும் ஏற்படுவதுடன், வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.
எந்தெந்த கோயில்களுக்கு செல்ல வேண்டும்?
அறுபடைவீடு முருகன் கோயில்கள், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், காஞ்சி காமாட்சி கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயில், வரதராஜ பெருமாள் கோயில் உட்பட ஏனைய கோயில்களுக்கும் சென்று வரலாம். இவற்றில் ஒன்றுக்கு செல்ல முடியவில்லை என்றாலும், உங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள முருகன், சிவன் அல்லது பெருமாள் கோயில்களுக்கு சென்று வாருங்கள். முழு பலனும் கிட்டும்!



Click it and Unblock the Notifications





